Friday, April 22, 2016

எழுத்துப் பயணம்

நன்றாய் வாழ்ந்தேன் என்கிற
       வரிசையில்  எனக்கு இடமில்லை...
வென்றாய் மகனே என்று சொல்ல 
       என் அன்னை உயிரோடு இல்லை... 
கன்றாய் ஓடியும் கவியுலகை
        இன்னும் தொடமுடியவில்லை...
நின்றாய் என்று சொல்லும்வரை
        அதை நிறுத்தப் போவதில்லை....

தியானம்

கவலைகொண்ட மனத்தை
கடவுள் முன்னமர்ந்து - தினம்
கால்மணி நேரம் தியானித்தால்
களிப்படைவது சாத்தியமே!

வெற்றி

போர்க்களமான வாழ்க்கையில்
போராடியவர்களே 
வெற்றி பெற்றுள்ளார்கள்

Wednesday, April 20, 2016

அட... சைக்கிளிங் போவதில் இவ்வளவு நன்மைகளா?

(இந்தக் கட்டுரை 19-04-16 அன்று, 'விகடன்' இணையதளத்தில் வெளியானது.)

ணல் ரோடு, தார்ச்சாலையாக மாறிவிட்டது... மாட்டுவண்டி, மகிழுந்தாக மாறிவிட்டது... விளையாட்டுப் பொருட்கள் விஞ்ஞானப் பொருட்களாகி விட்டன. மனிதன் ரோபாவாக மாறிவிட்டான். இப்படி ஒவ்வொரு நாளும் விரல் நுனியில், அறிவியல் உலகத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கும் நம்மை ஏதாவது ஒரு நோய் தாக்கிக்கொண்டிருப்பதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அறிவியலோடு அதன் சாதனங்களையும் பயன்படுத்துவதால்தான் நோய்த் தாக்குதலுக்கு ஆளாகிறோம்.
இதற்கு என்ன காரணம்? முறையான உணவும், சரியான உடற்பயிற்சியும் இல்லாததுதான் என்கிறார்கள் நிபுணர்கள். 
நம் மூதாதையர் வாழ்ந்த காலத்தில் ஆரோக்கியமான உணவும், அதிகமான உடல் உழைப்பும் இருந்தது. ஆனால், இன்று அது நாளுக்குநாள் குறைந்து வருகிறது. இதற்கு மற்றொரு காரணம்கூட சொல்லலாம். நம் முன்னோர்கள் பயன்படுத்திய பழைய பொருட்கள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில், நம் உடலை வலிமையாக்குவதாக இருந்தது. ஆனால், இன்று அவையெல்லாம் நம் வீட்டின் பரணிலோ அல்லது ஏதோ ஒரு மூலையிலோ இருக்கின்றன. இன்னும் சிலர், அவை எதற்கு என்று பழைய இரும்புக் கடையில் போட்டுவிட்டு இடத்தைக் காலியாக வைத்துள்ளனர். இப்படி பலரால் மதிக்கப்படாமல் இருக்கும் ஒரு வாகனம்தான் சைக்கிள். சைக்கிள் ஓட்டும் பழக்கம் நம் தலைமுறையினரிடம் மறைந்து வருகிறது. சைக்கிள் ஸ்டாண்டுகளாக இருந்த இடங்கள் எல்லாம் இன்று பைக் ஸ்டாண்டுகளாக மாறிவிட்டன. இந்த நிலையில், மிகவும் எளிமையானதும், எல்லா வசதிக்கும் பெயர்போனதுமான சைக்கிள், தற்போது சில இளைஞர்கள் மத்தியில் புதுப்பொலிவுடன் வரத் தொடங்கியிருக்கிறது. உடலை ஃபிட்டாக வைத்திருப்பதற்கு சைக்கிளிங் ஓர் எளிய பயிற்சி. சைக்கிளிங் சுற்றுச்சூழலுக்கும் பாதுகாப்பாக இருக்கிறது.
நடிகர் ஆர்யா
‘அவரா இவர்?’ என்று கேட்பவரைப் பார்த்திருக்கிறோம். ஆனால், எப்பவுமே அவர்தான் இவர் என்று சொல்லும் அளவுக்கு உடலை சிக்கென வைத்திருப்பவர் நடிகர் ஆர்யா. அதற்கு முக்கியக் காரணம், அவர் நாள்தோறும் சைக்கிள் பயிற்சி செய்வதுதான். இவர், விடியற்காலை 4 மணி முதல் 7 மணி வரை சைக்கிள் ஓட்டுகிறார். ஆர்யா தன்னுடைய ஆரோக்கியத்துக்கு மட்டுமின்றி, பிட்னஸுக்கும் தினமும் நீண்ட நேரம் சைக்கிள் ஓட்டுவதையே முக்கியக் குறிக்கோளாக வைத்திருக்கிறார். அவருடன் சைக்கிள் ஓட்டுபவர்களை ஒருங்கிணைத்து இதற்காகத் தனியாக குரூப் ஒன்றையும் வைத்திருக்கிறார்.

சைக்கிள் அறிமுகம்
முதன்முதலாக 19-ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் அறிமுகமான சைக்கிள், தற்போது உலகம் எங்கும் ஒரு பில்லியனுக்கும் அதிகமாக உள்ளன. 1839-ல் மேக்மில்லன் என்பவரால் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்பத்தில், ‘வெளாசிபிட்’ என்று பெயரிடப்பட்டு, பிற்காலத்தில் சைக்கிள் என மாறியது. பின்னர் டன்லப் என்பவரால் ரப்பர் சக்கரம் கொண்டதாக, சைக்கிள் மாற்றியமைக்கப்பட்டது. சீனா, நெதர்லாந்து, ஜெர்மனி, டென்மார்க், பெல்ஜியம் போன்ற நாடுகளில் சைக்கிள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். போக்குவரத்துக்கும் முதன்மையானதாக உள்ளது. போக்குவரத்துத் தவிர, குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருளாகவும் சைக்கிள் உள்ளது. மேலை நாடுகளில் உயர் பதவிகள் வசிக்கும் செல்வந்தர்கள்கூட தினந்தோறும் தங்கள் அலுவலகங்களுக்கு சைக்கிளிலேயே பயணிக்கின்றனர். இதனால், அவர்களுடைய ஆரோக்யம் நன்றாக இருக்கிறது என்கிறது ஓர் ஆய்வு. சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளில் மக்கள் தங்கள் அலுவலகங்களுக்கும், மாணவர்கள் பள்ளிகளுக்கும் சைக்கிளில் செல்வதைத்தான் விரும்புகின்றனர். சாலைகளில் இருபுறமும் சைக்கிள் செல்வதற்கு நேர்த்தியாகத் தளம் அமைத்து, சைக்கிளில் செல்வதை ஊக்குவிக்கிறார்கள்.
'சைக்கிள் ஓட்டுனா புது உலகம் இருக்கு'
தினந்தோறும் 20 கி.மீ. வரை சைக்கிளில் பணிக்குச் சென்றுவரும் பெங்களூர் ஐ.டி. ஊழியர் வல்லரசு சம்பத்குமாரை முகநூல் மூலம் பிடித்துப் பேசினோம். ‘
’பெங்களூரில் வேலை கிடைத்து ஒரு வருடம் பஸ்ஸில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது ஆபீஸ் நண்பர் ஒருவர் எனக்கு நன்கு அறிமுகமானார். அவர், 'தொடர்ந்து 6 வருடங்கள் சைக்கிளிலேயே ஆபீஸ் வந்து போவதாகவும், இதுவரை எந்த நோயும் வந்ததில்லை' என்றும் சொன்னார். ஏற்கெனவே நான் சைக்கிள் வாங்கவேண்டும் என்று வைத்திருந்த ஆவலை, இவர் சொன்னவுடன் மேலும் தூண்டியது. இருந்தாலும் சொந்தமாக சைக்கிளை வாங்குறதுக்கு முன்னாடி வாடகைக்கு எடுத்து ஓட்டிப் பார்த்தேன். அதுல எந்த சைக்கிள் நமக்கு சவுகரியமாக இருக்குனு தேடிக் கண்டுபிடிச்சு வாங்க ஆரம்பிச்சேன். 14,000 ரூபாயில ஒரு சைக்கிள் இருந்துச்சு. அது எனக்கு ஓட்டுறதுக்குச் சரியா வரலை. அதனால 30,000 ரூபாய் கொடுத்து ஒரு சைக்கிளை வாங்கினேன். அதுதான் என்னோட கனவு சைக்கிள்னு நினச்சேன். அந்த சைக்கிள்லதான் நான் இப்பவும் ஆபீஸ் போய்ட்டு வர்றேன்.

நான் வெச்சிருக்கிற சைக்கிள் நல்லா இருக்கிற ரோட்டுல வேகமா போகும். டூவீலருக்கு எப்படி காத்தோட அளவு காட்டுமோ, அதுபோல நான் வச்சிருக்கிற சைக்கிளோட டயர்களுக்கும் காத்தோட அளவு காட்டும். பாதை சரியில்லாத இடத்துல ஓட்டுனா காத்த கம்மியாகிட்டுதான் ஓட்டணும். நானும், என் ப்ரெண்ட்ஸும் வாராவாரம் எங்காவது ஓர் இடத்தைத் தேர்வு செய்து சைக்கிள் பயணம் போவோம். கொஞ்ச நாளைக்கு முன்னாடிகூட பெங்களூர் டு திருவண்ணாமலை வரை சைக்கிளிலேயே பயணம் செய்தோம். அது எனக்குப் புது நம்பிக்கையைத் தந்தது. ஆறு மாசம் தொடர்ந்து சைக்கிள் ஓட்டிட்டுப் போனதால வழியில இருக்கிற டீக்கடை, பழக்கடையிலே இருக்கிறவங்களோட அறிமுகம் கிடைச்சுது. அவங்ககிட்ட நல்லாப் பழக முடியுது. அதன்மூலம் நிறைய ப்ரெண்ட்ஸ் கிடைச்சாங்க. என்னைப்போலவே சைக்கிள் ஓட்டிக்கிட்டுப் போறவங்களும் என்னைப் பார்த்து விஷ் பண்ணுவாங்க. அது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். எனக்கு ஆஸ்துமா இருந்ததால ஆரம்பத்துல என்னால் ரொம்ப தூரம் நடக்க முடியாது. ஓட முடியாது. மூச்சு விடுவதற்குக்கூட சிரமப்படுவேன். ஆனா இப்ப சுவாசம் நல்லா இருக்கு. ரொம்ப தூரம் நடக்க முடியுது. 5 கி.மீ. தூரம் வரை ஓட முடியுது. மூன்று வேளையும் அதிகமாகச் சாப்பிட முடியுது. உடம்பை நல்ல ஆரோக்யமாக வச்சுக்க முடியுது. நல்லா சதை பிடிச்சிருக்குது. இதுக்கெல்லாம் காரணம் சைக்கிள் ஓட்டுறதுதான். சைக்கிள் ஓட்டுனா புது உலகம் இருக்கு’’ என்கிறார் நம்பிக்கையுடன்.

'நிறைய ஃப்ரெண்ட்ஸ் கிடைப்பாங்க'
தினமும் சைக்கிளிங் செய்யும் சென்னையைச் சேர்ந்த செந்திலிடம் பேசினோம். ''சாதாரணமானவர்களுக்கு ரூ.4,000 விலையில் உள்ள சைக்கிள்களே போதும். ரேஸ் போகிறவர்கள் ரூ.40,000 மேல் உள்ள சைக்கிள்களைப் பயன்படுத்தலாம். 4,000 ரூபாய் சைக்கிள் வைத்திருப்பவர்கள் நீண்ட தூரம் ஓட்டமுடியாது. அவர்கள், ரொம்ப கஷ்டப்பட்டு ஓட்டணும். அவர்களுக்கு வலு அதிகம் இருக்கும். பெரும்பாலும் சைக்கிளிங் போகிறவர்கள் தனியாகப் போகலாம். இருந்தாலும் ஒரு குரூப்பாகச் சேர்ந்து ஓட்டினால் களைப்பு தெரியாது. நிறைய ஃப்ரெண்ட்ஸ் கிடைப்பாங்க. ரொம்ப நேரம் ஓட்டுற மனநிறைவு கிடைக்கும். முதன்முதலாக சைக்கிள் ஓட்டுபவர்கள் கொஞ்சம் கொஞ்சமா தூரத்தை அதிகரிக்கணும். தொடக்கத்திலேயே குறிப்பா ஒருநாளைக்கு 30 - 40 கி.மீ சென்றால் உடலுக்கு நல்லது இல்லை. ஈவென்ட் வைத்திருப்பவர்கள் 200 கி.மீ தூரம் வரை போகலாம். பெரும்பாலும் நார்மல் சைக்கிள்களை சாதாரண கடைகளில் வாங்கலாம். ஆனால், ரேஸ்க்குச் செல்பவர்கள் அதற்கென்று உள்ள கடைகளில் போய் வாங்கலாம்'' என்றார்.
சைக்கிள் ஓட்டுவதால் நன்மைகள்:
சைக்கிளிங் செய்வதால், உடல் உறுப்புகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட்டு உடலுக்கும் உள்ளத்துக்கும் உள்ள தொடர்பினை உறுதிப்படுத்துகிறது. மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் அதிகரித்து, ஹிப்போகேம்பஸ் பகுதியில் புதிய செல்கள் உருவாகக் காரணமாக இருக்கிறது. இதனால், நினைவாற்றல் மேம்படும். வாரத்துக்கு 5 நாட்கள் சராசரியாக 30 நிமிடங்கள் சைக்கிளிங் செய்வது நல்லது. அரை மணி நேர சைக்கிளிங் பயிற்சியில் 300 கலோரிகள் வரை எரிக்கப்படும். சைக்கிளிங் செய்யும்போது முதல் 10 நிமிடங்களில் உடலில் இருக்கும் நீர் வெளியேறும். 20 நிமிடங்களுக்குப்பிறகு குளுக்கோஸ் எரிக்கப்படும். 30 நிமிடங்களுக்குப்பிறகு கொழுப்புச் சத்து குறையும்.

சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி உடற்பயிற்சியாளர் லதாவிடம் பேசினோம். ‘‘சைக்கிளிங் நமது உடலை ஃபிட்டாக வைக்க உதவும் எளிய பயிற்சி. இதயத் துடிப்பை அதிகப்படுத்துவதோடு, இதயத்தை வலுப்படுத்துகிறது. எலும்பு மற்றும் மூட்டுகளை வலுவாக்குகிறது. தசைகளை வலிமையாக்குகிறது. உடல் பருமன் ஏற்படுவதைத் தடுக்கிறது. நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களில் இருக்கும் அதிகமான கலோரிகளை எரிக்கிறது. பாதத்தால் சைக்கிளை மிதிப்பதால் கால் தசைகள் கூடுதல் பலம் பெறுகின்றன. தினமும் ஒரு மணிநேரம் சைக்கிள் ஓட்டினால் கை, கால் தசைகள் உறுதி பெறுகின்றன. உடலின் ரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது. ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்களைக் கட்டுக்குள் வைக்கின்றன. உடல் வெப்பத்தையும், வியர்வையையும் வெளியேற்றுகிறது’’ என்றார்.
சைக்கிள் விற்பனை:
‘’எங்களிடம் ரூ.3,000 முதல் இரண்டேமுக்கால் லட்சம் ரூபாய் வரை சைக்கிள்கள் இருக்கின்றன. குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள், பெரியவர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் எங்களிடம் சைக்கிள்கள் இருக்கின்றன. மாதத்துக்கு 150 முதல் 200 சைக்கிள்கள் வரை சேல்ஸ் ஆகின்றன. இது சம்மர் என்பதால், ஸ்கூல் பசங்க சைக்கிள்கள்தான் அதிகமாக சேல்ஸ் ஆகின்றன. குறிப்பாக 3,000 ரூபாய் உள்ள சைக்கிள்கள் மட்டும் ஒருநாளைக்கு 80 சேல்ஸ் ஆகின்றன. ரேஸ் சைக்கிள்கள் நார்மலாகத்தான் சேல்ஸ் ஆகின்றன. குழந்தைகளின் சைக்கிள்களும் ஓரளவுக்கு நன்றாக வியாபாரமாகின்றன. உடல் ஃபிட்னெஸுக்காக சின்னச்சின்ன  குழந்தைகளுக்கு இப்போதே சைக்கிள்கள் வாங்கிக் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர் பெற்றோர்கள்’’ என்கின்றனர் சைக்கிள் விற்பனையாளர்கள்.
சைக்கிள் மூலம் விபத்துகளும் ஏற்பட்டிருக்கின்றன. சைக்கிள் கற்றுக்கொள்ளும்போது ஏற்படும் சின்னச்சின்ன காயங்களைவிட மரணமும் நிகழ்ந்திருக்கின்றன. கடந்த 2014-ம் ஆண்டில் 74 சைக்கிள் விபத்துகள் நடந்திருக்கின்றன. அதே ஆண்டில் சைக்கிள் மூலமாக 46 மரணங்களும் ஏற்பட்டிருக்கின்றன.
சைக்கிளிங் டிப்ஸ்:
சைக்கிள்களில் பல வகைகள் உள்ளன. அதில், நம் உடல் அமைப்புக்கும், வயதுக்கும் பொருத்தமான சைக்கிள்களைத் தேர்ந்தெடுத்து வாங்குவது நல்லது. நிற்கும்போது, நம்முடைய இடுப்பு உயரத்துக்கு சீட் இருக்க வேண்டும். சீட் உயரம் அதிகமாகவோ, குறைவாகவோ இருந்தால், முதுகுவலி உள்ளிட்ட பிரச்னைகள் வரலாம். முதல் முறையாக சைக்கிளிங் செய்பவர்கள் மெதுவாகத் தொடங்கி நன்கு பழகிய பிறகு, வேகத்தையும், தொலைவையும் அதிகரித்துக்கொள்ள வேண்டும்.

தவறாமல் சைக்கிளிங் செல்வோம்... உடலை ஃபிட்னஸாக வைப்போம்.

- ஜெ.பிரகாஷ்

Tuesday, April 5, 2016

கடைசியாக எப்போது கடிதம் எழுதினீர்கள்..?

(இந்தக் கட்டுரை 07-07-15 அன்று, 'விகடன்' இணையதளத்தில் வெளியானது.)

வீனயுகத்தில் நாம் இருப்பதால், எல்லோரிடமும் எப்போதும் பேசும் வசதியும், தகவல்களைப் பெறும் வசதியும் தற்போது வந்துவிட்டது. அதற்கேற்றாற்போல் பல்வேறு தகவல்தொடர்பு சாதனங்கள் உருவாகிவிட்டன. ஆனால் இவற்றையெல்லாம் கண்டுபிடிப்பதற்கு முன் இருந்த நிலையே வேறு.
ஓலைச்சுவடிகளில் எழுத்தாணி கொண்டு எழுதப்பட்ட திருக்குறள்தான் இன்று உலகப் பொதுமறையாக விளங்குகிறது. அதுபோல சில எழுத்தாளர்கள் மற்றும் தலைவர்கள் தங்கள் கைப்பட எழுதிய கடிதங்கள், புத்தகங்களாக வடிவம் பெற்றுள்ளன. ஆனால் தற்போதைய காலக்கட்டத்தில் எழுதப்படும் கடிதங்கள் குறைவு என்பது வேதனைக்குரியது.

இருவருக்கிடையே உள்ள தகவல் பரிமாற்றத்தை பகிர்ந்துகொள்ள பயன்படுத்தப்பட்ட முறையே அஞ்சல் சேவை ஆகும். இது கடிதம், தபால் என அழைக்கப்படும். மன்னர்கள் காலத்தில் கடிதப் போக்குவரத்து மற்றும் தூது ஓலை அனுப்புவதற்கு புறாக்கள் பயன்படுத்தப்பட்டன. இதற்காக புறாக்கள் தனியாக வளர்க்கப்பட்டு பழக்கப்படுத்தப்பட்டன. தற்போதும் ஒடிசாவில் காவல் துறையினர் ஒரு போலீஸ் ஸ்டேஷனில் இருந்து, மற்றொரு போலீஸ் ஸ்டேஷனுக்கு (ஒரு மலை கிராமத்திலிருந்து, மற்றொரு மலை கிராமத்துக்கு) சாலை வசதிகள் கிடையாததால் புறா விடு தூதுதான் நடத்துகின்றனர்.

காலம் செல்லச்செல்ல மன்னர்கள் தகவல்களை அனுப்புவதற்கு என்று தனியாக தூதுவர்களை நியமித்து இருந்தார்கள். எழுத்து முறை தொடங்கிய காலத்திலேயே தகவல்களையும் கடிதங்களையும் கொண்டுபோய் சேர்த்திருந்தாலும் முறைப்படியான அஞ்சல் சேவைகள் நீண்ட காலத்துக்குப் பின்னரே அறிமுகமாயின. அப்படித் தொடங்கப்பட்ட அஞ்சல் சேவை அசுர வளர்ச்சி கண்டது. அனைத்து நாடுகளிலும் அஞ்சல் துறையில் மாற்றம் ஏற்பட்டதுடன் வணிக நோக்கிலும் வெற்றி பெற்றது. இன்றும் எத்தனையோ முறைகளைப் புகுத்தி அஞ்சல் சேவை வளர்ச்சி அடைந்தாலும் தற்போது கடிதங்களின் வரத்துக் குறைவே.

உலக நாடுகளுடனும், உலக அறிஞர்களுடனும் நட்புறவு கொண்டிருந்தமைக்குக் கடிதத் தொடர்பும் ஒரு காரணம். எண்ணற்ற அறிஞர்களும் இலக்கியவாதிகளும் எழுதிய கடிதங்கள்தான் இன்று நம் கண் முன் புத்தகங்களாய் குவிந்து கிடக்கின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை நம் விடுதலை வீரர்களின் கடிதங்கள்தான் சுதந்திரம் பெறுவதற்கு உயிர்மூச்சாக இருந்தது.
பாரதி, வ.உ.சி போன்றோரின் கடிதங்கள் விடுதலை வேட்கைக்கு அடித்தளமிட்டன. ஜவஹர்லால் நேரு, சிறைச்சாலையில் இருந்தபடியே தன் மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதங்கள் உலக புகழ்பெற்றவை ஆகும். அரசியலில் அத்தனை வலிமை வாய்ந்த பெண்ணாக இந்திரா மாற அந்த கடிதங்களும் முக்கிய காரணம். 

அதுபோல் மேலைநாடுகளில் கார்ல் மார்க்ஸ், ஃபிரடெரிக் ஏங்கல்ஸ், லெனின், ஆபிரகாம் லிங்கன், ஐன்ஸ்டீன், மர்லின் மன்றோ போன்றோர் எழுதிய கடிதங்களும் அழியாப் புகழ்பெற்றவை. இன்று அவை, கோடிக்கணக்கில் ஏலம் போகின்றன. காரணம் அதில் நிரம்பியிருக்கும் கருத்துச் செறிவுகள்தான். தமிழகத்தைப் பொறுத்தவரை தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, மு.வ., கலைஞர் ஆகியோரின் கடிதங்கள் கருத்தாழமும், இலக்கிய நயமும் கொண்டவை. அழகான கையெழுத்தால் உருவான அந்தக் காலத்துக் கடிதங்கள்தான் இன்று அறிவான வரலாற்றுக்கு ஆயுதமாக இருக்கின்றன.

இதுகுறித்து கல்லூரி மாணவர் ஒருவர், “எனது தாத்தா பழைய காலத்துக் கடிதங்களை எல்லாம் பொக்கிஷமாக சேர்த்து வைத்திருந்தார். அதைப் பார்க்கும்போது எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். தலைவர்களோட கையெழுத்தும் கருத்தும் அழகாக இருக்கும். அந்தக் கடிதங்களை அப்படியே கண்ணில் எடுத்து ஒற்றிக்கொள்ளலாம். ஆனால் நவீன காலத்தில் எழுதப்படும் கடிதங்களுக்கு வேலையில்லாமல் போய்விட்டது'' என்றார் வேதனையுடன்.
“10 வருஷத்துக்கு முன்னாடி தூக்க முடியாத அளவுக்கு போட்டிக் கடிதங்கள், வாழ்த்துக் கடிதங்கள் எனப் பல கடிதங்கள் வரும். சாதாரணமா ஒரு வீட்டுக்கே ரெண்டு மூணு தபால் வரும். ஆனா இப்ப அவ்வளவு வர்றது இல்ல. எல்லாரும் இமெயில், ஃபேஸ்புக், வாட்ஸ்அப்னு போன்லயே தகவல் அனுப்பிடுறாங்க. அதனால தபால்களோட எண்ணிக்கை குறைஞ்சு போச்சு. இருந்தாலும் முக்கியமான தபால்கள் வந்துகொண்டுதான் இருக்கு'' என்றார் அஞ்சலக ஊழியர் ஒருவர்.

தனியார் கூரியர் சேவை நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் இளம்பெண் ஒருவர், “ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ஒருநாளைக்கு சராசரியா 500-லே இருந்து 800 தபால் வரும். ஆனா இப்ப 200 வர்றதே கஷ்டம்தான். எங்க பார்த்தாலும் கூரியர் வந்துவிட்டது. அதோடு போன்லயும் கம்ப்யூட்டர்லயும் வேலைய முடிச்சுடுறாங்க. இன்னும் கொஞ்சம் காலத்துல கூரியர் சேவையே இல்லாமல் போயிடும் போலிருக்கு'' என்றார் கவலையுடன்.

கடிதங்கள் காலத்தின் பொக்கிஷம் என்பதை எதிர்கால தலைமுறைகள் அறிந்துகொள்ள வேண்டும். இன்றே நமக்கு பிடித்தவர்களுக்கு கடிதம் எழுதத் துவங்குவோம்!


- ஜெ.பிரகாஷ்

பெண் சிசுவைக் காப்போம்... பெருமிதம் காண்போம்


-------


(இந்தக் கட்டுரை 01-07-15 அன்று, 'விகடன்' இணையதளத்தில் வெளியானது.)


'அடிபணிந்து போவதால்

பெண் அடிமையாகிறாள்...

எழுந்து நடப்பதால்

பெருமை அடைகிறாள்
!'' - என்றான் ஓர்  கவிஞன்....உண்மைதான்! 

ஒரு காலத்தில் வீட்டுக்குள் அடைபட்டிருந்த பெண்கள் இன்று எல்லாத் துறைகளிலும் முன்னேறியிருப்பது அவர்களுடைய வளர்ச்சியைத்தான் காட்டுகின்றது. இந்த நிலையில் ஆண் - பெண் குழந்தை பிறப்பு விகிதாசாரத்தில் அண்டை நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவின் நிலை மோசமாக உள்ளது என யுனிசெஃப் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது..

இதுதொடர்பாக தெற்காசிய பிராந்தியத்தில் எட்டு நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில், பூடான் நாட்டில் 1,000 ஆண்களுக்கு 987 பெண்களும் பாகிஸ்தானில் 1,000 ஆண்களுக்கு 985 பெண்களும் உள்ளனர். ஆனால் இந்தியாவில் மட்டும் 1,000 ஆண்களுக்கு 914 பெண்கள் என்ற நிலை உள்ளது.

கடந்த 2011-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இந்திய மக்கள் தொகை 121 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இது முந்தைய கணக்கெடுப்பைவிட 18 கோடி அதிகமாகும். ஆண்கள் 62.37 கோடி பேரும், பெண்கள் 58.65 கோடி பேரும் உள்ளனர். கணக்கெடுப்பின்படி, 1,000 ஆண்களுக்கு 914 பெண்கள் உள்ளனர்.

பெண் குழந்தைகளை செலவீனமாகவும் சுமையாகவுமே பெற்றோர்கள் கருதுகின்றனர் என்று ஒருவகை யில் காரணம் சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. போதிய அளவு விழிப்புணர்வு, கல்வி அறிவு இல்லாததும் வறுமை, பொருளாதாரம், நோய் போன்ற பிரச்னைகள் நிலவுவதும் பெண் குழந்தை பிறப்பு விகிதாசாரம் குறைவதற்குக் காரணமாய் அமைகின்றன. பெண் குழந்தை எனத் தெரிந்ததும் அதைக் கருவிலேயே அழித்துவிடுவதும் முக்கிய காரணமாய் உள்ளது.
‘100 மில்லியனுக்கும் மேல் காணாமல்போன பெண் குழந்தைகள்’ என்ற தலைப்பில் அமர்த்தியா சென், 1990-ம் ஆண்டு டிசம்பர் 20-ம் தேதி நியூயார்க் ரிவ்வியூ ஆஃப் புக்ஸ்' என்ற இதழில் ஒரு கட்டுரை எழுதி யிருந்தார். அந்தக் கட்டுரைதான் உலக நாடுகளை மட்டுமல்லாது இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

சர்வதேச அளவில் ஆண் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் மற்றும் கவனிப்பு, பெண் குழந்தைகளுக்குக் கிடைப்பதில்லை. நம் நாட்டை பொறுத்தவரை பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது. இப்படி தொடர்ந்து பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்தால் எதிர்காலத்தில் நாட்டில் சமூகப் பிரச்னை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

சமூகப் பிரச்னைகளில் பெண்களை முதலில் எதிர்கொள்வது வரதட்சணைதான். வரதட்சணைக் கொடுமையால் பல பெண்களின் எதிர்காலமும் வாழ்க்கையும் நிலைகுலைந்து போகின்றன. இதை வைத்துதான் ஒரு கவிஞன் இப்படி எழுதியிருந்தான்.

‘கண்மணியே...

கவலைப்படாமல் வா!

கண்கலங்காமல்

காப்பாற்றுகிறேன்

உன் வீட்டுச் சொத்துக்களை
!''


வரதட்சணை மட்டுமல்லாது பாலியல் தொல்லைகளும் பெண்களுக்கு நாட்டில் பெருமளவில் பெருகி வருகின்றன. இதனால் அவர்களின் தனி மனித சுதந்திரம் பறிக்கப்படுவதுடன் எதிர்கால கனவுகளும் சிதைந்து போய்விடுகின்றன. குழந்தைகளைப் பராமரிக்காத பெற்றோர்கள், விவாகரத்து பெற்றவர்கள், குடிக்கு அடிமையாகி குடும்பத்தையே மறந்தவர்கள், தனிமையில் விடப்படும் குழந்தைகள், பள்ளி, கல்லூரி, நிறுவனம் போன்றவற்றில் பலதரப்பட்ட பிரச்னைகள்... இப்படி எண்ணற்ற காரணங்களால் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பது முற்றிலும் உண்மை.
அந்த வகையில் பெண் குழந்தைகள் முன்னேற்றம் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் செப்டம்பர் 24-ம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ‘மனதின் குரல்' (மன் கி பாத்) என்ற தலைப்பில் பிரதமர் மோடி மாதந்தோறும் வானொலியில் உரையாற்றி வருகிறார். அதன் வரிசையில், ‘‘நாட்டில் பெண் குழந்தைகளின் விகிதம் குறைந்து வருவது கவலையளிக்கிறது. குறிப்பாக ஹரியானா மாநிலத்தில் இந்த சமூக அவலம் அதிகமாக உள்ளது. எனவே பெண் சிசுவைக் காப்பாற்ற அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்று அதில் கூறியிருந்தார்.

மேலும், மகள்களைக் காப்போம், மகள்களைப் படிக்க வைப்போம் திட்டத்தை மத்திய அரசு தொடங்கி யுள்ளது.. இந்தத் திட்டத்தில் தீவிர விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் விதமாக ஹரியானாவில் உள்ள பிபிபூர் என்னும் கிராமத்தின் தலைவர், மகள்களுடன் தந்தையர்கள் ‘செல்பி’ எடுக்கும் போட்டியை தொடங்கி வைத்துள்ளார். மகள்களை காக்கும், படிக்க வைக்கும் திட்டத்துக்கு இது ஒரு நல்ல தொடக்கமாகவும் புதிய நம்பிக்கையை ஏற்படுத்துவதாகவும் அமைந்து இருக்கிறது.

இதுபோல் அனைத்து தந்தையர்களும் தங்களுடைய மகள்களுடன் ‘செல்பி’ எடுத்து அனுப்புங்கள். இந்த முறையில் மகள்களைக் காப்போம், மகள்களைப் படிக்க வைப்போம் திட்டத்தைப் பெரும் இயக்கமாக நம்மால் மாற்ற இயலும்'' என்று அதில் கூறியிருந்தார். இந்தத் திட்டத்துக்கு இணையத்தில் மகத்தான வரவேற்பு கிடைத்துள்ளது..

‘‘வரவேற்க வேண்டிய திட்டம்தான். மேலும், பெற்றோர்களும் பாதுகாவலர்களும் பெண் குழந்தைகளை சுமை என்று கருதாமல் சுமைதாங்கி என்று கருத வேண்டும். ஆணை அடித்து வளர்க்க வேண்டும், பெண்ணை போற்றி வளர்க்க வேண்டும் என்பதுபோல பெண் குழந்தைகளுக்கு அதிக அளவில் கல்வி அறிவைப் போதிக்க வேண்டும். அத்துடன் தைரியத்தையும் கற்றுத் தர வேண்டும். பெண் குழந்தைகளுக்கு என்று அரசு நடைமுறையில் வைத்திருக்கும் திட்டங்களில் பெற்றோர்கள் பங்கேற்று அவற்றின் வழியில் நிற்க வேண்டும்'' என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
‘‘சூப்பர் திட்டம். பொம்பள புள்ள ஒண்ணும் கேவலம் இல்ல. அவுங்கதான் இப்ப எல்லாத்துலயும் நம்பர் ஒன். எங்களுக்கு 10 வருஷமா குழந்த இல்ல. எத்தன பொம்பள புள்ள பொறந்தாலும் எங்களுக்கு பரவாயில்ல. ஆனா, அந்தக் கொடுப்பின இல்ல சார்'' என்று நம்மிடம் ஏங்கினர் ஒரு குழந்தையில்லா தம்பதியினர்.

இப்படி நாட்டின் நிலை ஒருபுறம் இருக்க, கருக்கலைப்பும் மறுபுறம் நடந்துகொண்டுதான் இருக்கிறது.
‘‘பெண் குழந்தைகளைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகளின் மகத்தான திட்டங்கள் மட்டும் போதுமானவை அல்ல. பாலியல், வரதடசணை, கருக்கலைப்பு போன்றவற்றுக்கான சட்டங்கள் அமலில் இருந்தாலும் அவைகள் கடுமையாக்கப்பட வேண்டும். விழிப்பு உணர்வு பிரசாரங்களை அதிகப்படுத்த வேண்டும்'' என்பதே கல்லூரி மாணவிகளின் வலிமையான கோரிக்கையாக வைக்கப்படுகிறது.

பெண் சிசுவைக் காப்போம்... பெருமிதம் காண்போம்!

- ஜெ.பிரகாஷ்

200-வது ஆண்டில் கூர்க்கா படைப் பிரிவு!





(இந்தக் கட்டுரை 23-04-15 அன்று, 'விகடன்' இணையதளத்தில் வெளியானது.)


ந்திய ராணுவத்தின் மிகப் பழமையான 3-வது கூர்க்கா படைப்பிரிவு, தனது 200- வது ஆண்டு தினத்தை நாளை (24-ம் தேதி) கொண்டாடவுள்ளது. 1815-ம் ஆண்டு ஏப்ரல் 25-ம் தேதி '1/3 கூர்க்கா ரைபிள்ஸ்' என்று அழைக்கப்படும் கூர்க்கா படைப் பிரிவு உருவாக்கப்பட்டது. சர் ராபர்ட் கோல்கூன் என்பவரால், உத்தராஞ் சலில்  (அல்மோராவில்) இந்த படைப் பிரிவு தொடங்கி வைக்கப்பட்டது.


நேபாளத்தை பூர்வீகமாகக் கொண்ட கூர்க்கா என்ற இவர்களின் இனப் பெயர், 18 சித்தர்களில் ஒருவரான கோரக்கநாதரின் பெயரில் இருந்து வந்தது. நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்குள் இவர்கள் குடியேறினர். இந்தப் பிரிவி்ல் கூர்க்காக்கள் மட்டுமல்லாமல் குமான், கார்வால் பிராந்தியத்தைச் சேர்ந்த பிற சமூகத்தினரும் இடம்பெற்றிருந்தனர்.

இந்த படைப் பிரிவுக்கு முந்தைய படைப் பிரிவுகளாக மெட்ராஸ் ரெஜிமென்ட் (1758), பஞ்சாப் ரெஜிமென்ட் (1761)., ராஜ்புத்னா ரைபிள்ஸ் (1775), ராஜ்புத் ரெஜிமென்ட் (1778), ஜாட் ரெஜி மென்ட் (1795), குமான் ரெஜிமென்ட் (1813) ஆகியவை உருவாக்கப்பட்டன. இவைதான் இந்திய ராணுவத்தின் 'நேட்டிவ் படைப் பிரிவுகள்' என்று அழைக்கப்படும் மிகப் பழைமையான பிரிவுகளாகும்.
1814-1816-ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆங்கிலேயர்களுக்கும் நேபாளத்துக்கும் இடையேயான போரில், இந்த கூர்க்கா ரெஜிமென்ட் படையினர், மிகச் சிறப்பாகப் பணியாற்றி ஆங்கிலேயர்களுக்கு வெற்றியைத் தேடித் தந்தனர். ஆரம்பத்தில் கூர்க்கா இனத்தவரை சாதாரண போலீஸாராக நடத்திய ஆங்கிலேயர்கள், பின்னர்தான் அவர்களை ராணுவத்தில் இணைத்து படைப்பிரிவையும் உருவாக்கினர்.

1880-ம் ஆண்டு ஏப்ரல் 19-ம் தேதி நடந்த 2-வது ஆப்கன் போரில் கூர்க்கா படைப் பிரிவினர் சிறப்பாகச் செயல்பட்டனர். அப்போது லெப்டினென்ட் கர்னல் பி.ஓ.டுன் என்பவர், இந்தப் பிரிவின் முதல் இந்திய கமாண்டிங் அதிகாரியாக இருந்தார்.
மேலும், கூர்க்கா படைப் பிரிவைச் சேர்ந்த வீரர்கள், சிறந்த கால்பந்து ஆட்டக்காரர்களும்கூட. இப்படைப் பிரிவினர், நாட்டின் முன்னணி கால்பந்து அணிகளான கொல்கத்தா, மோகன்பகான், ஈஸ்ட் பெங்கால் ஆகிய அணிகளில் இடம்பெற்று  பெருமை தேடித் தந்தனர். மக்கள் பணி, அமைதிப் பணி என பல்வேறு பணிகளி லும் போர்களிலும் கலந்துகொண்ட பெருமை கூர்க்கா படைப் பிரிவினருக்கு உண்டு.
காஷ்மீர் பள்ளத்தாக்கிலும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர். அதேபோல ருவாண்டாவுக்கு அனுப்பப்பட்ட ஐ.நா. அமைதிப்படையிலும் இடம்பெற்று இந்தியாவுக்கு நல்ல பெயரைத் தேடித் தந்துள்ளனர்.

2001-ம் ஆண்டு பூஜ் நிலநடுக்கத்தின்போது மிகச் சிறந்த முறையில் மீட்புப் பணியில் ஈடுபட்டதும் இந்தப் படைப் பிரிவினர்தான். சுதந்திரத்திற்குப் பின்னர் 177 விருதுகளைப் பெற்றுள்ள இந்தப் படைப் பிரிவினர், அசோகா, கீர்த்தி சக்ரா உள்பட 200-க்கும் மேற்பட்ட வீர விருதுகளைக் குவித்துள்ளனர்.

தொடரட்டும் இந்திய ராணுவத்தின் கூர்க்கா படைப்பிரிவினரின் சேவைகள் !

- ஜெ.பிரகாஷ்