Thursday, September 29, 2016

போலீஸும்... விடை தெரியாத மூன்று சம்பவங்களும்!

‘‘ ‘உலகின் நம்பர்-1 போலீஸ்’ என்று பாராட்டப்படும் ஸ்காட்லாந்து யார்டு போலீஸாருக்கு அடுத்த இடத்தில் தமிழக போலீஸார் உள்ளனர்’’ என ஒரு செய்தி பரவலாக இருந்துவருகிறது. இதில், எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது எனத் தெரியவில்லை. காரணம், சமீபகாலமாக காவல் துறையில் அவர்களின் பங்கு மிகவும் மோசமாகவே இருக்கிறது. லஞ்சம், ஊழல், காட்டுமிராண்டித்தனம், மேலிட உத்தரவு, அலட்சியம் என அவர்களின் பாதை பெரும்பாலும் மாறிவிட்டது.
நம் நாடு எத்தனையோ விளைவுகளை இவர்களின் மாறுதல்களால் சந்தித்து வருகிறது. பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுத்தும் அதன்மீது நடவடிக்கை எடுக்காமல் காலந்தாழ்த்தி, அதனால் ஏற்படும் கொலைகளே அதற்கு முதல் காரணம். ஆனால், இதையெல்லாம்விடக் கடந்த சில மாதங்களில் தமிழகத்தையே அதிரவைத்த மூன்று சம்பவங்களுக்கும் போலீஸார், இதுவரை விடை காணாமல் இருப்பதுதான் மக்களுக்கான பாதுகாப்பில் பெருத்த ஏமாற்றமாக இருக்கிறது.
மேலும் இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியைப் படிக்க... http://www.vikatan.com/news/tamilnadu/68661-tamil-nadu-police-and-unfounded-cases.art
நன்றி: 'விகடன்' இணையதளம்

பகத்சிங் பயந்தது எதற்காக?

‘‘இந்த மகன் அனைவரையும் மிஞ்சும்வண்ணம் செயல்பட்டு அன்னையின் விலங்கை நிச்சயமாக ஒடித்தெறிவான்’’ என்றார் கிஷன்சிங். இவர் வேறு யாருமல்ல... இந்திய நாட்டுக்காக தன்னுடைய 24-வது வயதில் தூக்குமேடையை முத்தமிட்டு, தூக்குக்கயிற்றை இறுக்கிக்கொண்ட புரட்சியாளர் பகத்சிங்கின் தந்தை. “புரட்சி என்றாலே பகத்சிங் என்றுதான் பொருள்’’ என்ற நேதாஜியின் வார்த்தைக்கு வடிவம் தந்தவர் பகத்சிங். அவருடைய பிறந்த தினம் இன்று.  
சிறுவயதிலேயே ‘ஜாலியன் வாலாபாக்’ படுகொலையைக் கேள்விப்பட்டு அங்கு சென்று குருதிபடிந்த மண்ணை ஒரு தாளில் எடுத்துவந்து அதை, கடைசிவரை தன்னுடன் வைத்திருந்த கொள்கை பற்றாளர். அந்தக் கொடிய செயல் நடப்பதற்குக் காரணமாக இருந்த வெள்ளையரை மட்டுமின்றி எல்லா வெள்ளையர்களையும் அழித்தொழிக்க வேண்டும் என்று எண்ணியவர்.
இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து படிக்க: http://www.vikatan.com/news/coverstory/68866-reason-behind-the-fear-of-socialist-bhagat-singh.art
நன்றி: 'விகடன்' இணையதளம்

செல்ஃபி ஓர் ஆபத்து!

‘சொறி பிடிச்சவன் கையும், இரும்பு பிடிச்சவன் கையும் சும்மா இருக்காது’ என்பது பழமொழி. ஆனால், அதையே மாற்றி, ‘ஸ்மார்ட் போன் பிடித்தவர் கை... இன்று செல்ஃபி எடுக்காமல் சும்மா இருக்காது’ என்றால் மிகையாகாது. ‘செல்ஃபி’ என்கிற வார்த்தைகூட இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவராலும் உச்சரிக்கப்படும் அளவுக்கு முதலிடம் வகிக்கிறது. நிற்கும்போது, நடக்கும்போது, உட்காரும்போது, படுக்கும்போது என உலகமே செல்ஃபி மோகத்தில் மூழ்கிக்கொண்டிருக்கிறது. அமெரிக்க அதிபர் ஒபாமா, போப் ஆண்டவர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி என யாரையும் செல்ஃபி மோகம் விட்டுவைக்கவில்லை. அதிலும் குறிப்பாக செல்ஃபி இளசுகளை விடுவதாக இல்லை.


செல்ஃபி வரலாறு!
செல்ஃபி’ என்பது தன்னைத்தானே புகைப்படம் பிடித்துக்கொள்வதாகும். செல்ஃபி (Selfie) என்பது ஓர் ஆங்கிலச் சொல்லாகும். ஸ்மார்ட் போன்கள் வருகைக்குப் பின்னர் இதன் தாக்கம் அதிகரித்துவிட்டது. சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர், கூகுள் ப்ளஸ், இன்ஸ்ட்டாகிராம், டம்பிள்ளார் போன்றவற்றில் செல்ஃபி சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த செல்ஃபியின் தாக்கம் ஏதோ கடந்த சில ஆண்டுகளில் தோன்றியது என்று பெரும்பாலானவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், இது 175 வருடங்களுக்கு முன்பே வந்துவிட்டது என்பதுதான் ஆச்சர்யமான விஷயம். முதன்முதலில் 1839-ம் ஆண்டு ராபர்ட் கர்னேலியஸ் என்பவர், தன்னுடைய கேமராவை ஸ்டான்டில் நிற்க வைத்துவிட்டு அதன் முன்பக்க லென்ஸ் மூடியைத் திறந்து, கேமராவின் முன்னால்போய் அசையாமல் நின்றார். பிறகு மீண்டும் கேமராவின் கதவை மூடி, அந்த பிலிமை டெவலப் செய்தபோது கிடைத்ததுதான் உலகின் முதல் செல்ஃபி. இதன் பெருமைக்குச் சொந்தக்காரர்தான் ராபர்ட் கர்னேலியஸ். இருந்தாலும், செல்ஃபி எனும் வார்த்தையை முதன்முதலில் பயன்படுத்தியவர் எனும் பெருமை நாதன் ஹோப் என்பவருக்கே கிடைத்தது. 2002-ம் ஆண்டில் நாதன் ஹோப்புக்கு ஏற்பட்ட சிறுவிபத்தில் அவருடைய உதடுகள் அடிப்பட்டன. அதை அப்படியே படம்பிடித்து இணையத்தில் வெளியிட்டார். அத்துடன், ‘‘ஃபோகஸ் சரியா இல்லாததுக்கு மன்னிச்சுக்கோங்க. இது ஒரு செல்ஃபி, அதான் காரணம்’’ என்று ஒரு கமென்ட்டையும் எழுதியிருந்தார். அவர் எழுதிய செல்ஃபி என்கிற வார்த்தைதான் தற்போது பிரபலமாக ஆரம்பித்து இருக்கிறது.


செல்ஃபி பயன்பாடு!
செல்ஃபி’ என்கிற வார்த்தைக்கு ஆங்கில அகராதியில், ‘ஒருவர் டிஜிட்டல் கேமரா மூலமாகவோ, வெப்கேம், டேல்லெட், ஸ்மார்ட் போனின் முன்பக்க கேமரா போன்ற எதன் மூலமாகவோ, தன்னைத்தானே எடுத்துக்கொள்ளும் புகைப்படம்’ என்று விளக்கம் தரப்பட்டிருக்கிறது. உலகப் புகழ்பெற்ற டைம் பத்திரிகையானது, ‘2012-ம் ஆண்டு உலக அளவில் பிரபலமாய் இருந்த 10 வார்த்தைகளில் செல்ஃபியும் ஒன்று’ என்றது. 2013-ம் ஆண்டில் ஆக்ஸ்போர்டு அகராதி, ‘இந்த ஆண்டின் புகழ்பெற்ற வார்த்தை செல்ஃபிதான்’ என அறிவித்தது. 10 - 24 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எடுக்கும் புகைப்படங்களில் 30 சதவிகிதம் செல்ஃபி வகையறாவில் சேர்கின்றன என்கிறது ஓர் ஆய்வு. ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களுக்குச் சிறப்புச் சேர்ப்பவை இந்த செல்ஃபிக்கள்தான். இன்ஸ்டாக்ராம் எனும் வலைதளத்தில் 5.3 கோடி புகைப்படங்கள் செல்ஃபி வகையில் குவிந்துகிடக்கின்றன. உலகிலேயே நம்பர் 1 செல்ஃபி சிட்டி, பிலிப்பைன்ஸ்தான் என்றும், ஆண்களைவிட பெண்களைத்தான் செல்ஃபி மோகம் ஆட்டிப்படைப்பதாகவும் சொல்கிறது ஓர் ஆய்வு. மேலும், வாரந்தோறும் 40 சதவிகிதம் இளசுகள் தவறாமல் செல்ஃபி எடுப்பதாகவும், 47 சதவிகிதம் பெரியவர்கள் தங்களை செல்ஃபி எடுத்து இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


செல்ஃபி விபத்துகள்!
செல்ஃபியின் பயன்பாடும், சுவாரஸ்யங்களும் உலகெங்கும் பரவியிருக்கும் வேளையில் செல்ஃபிக்காக உயிரை விட்டவர்களும் இருக்கிறார்கள் என்பது வேதனையான செய்தியாகும். இன்றைய தலைமுறையினரிடம் மிக அபாயமான இடங்களில் செல்ஃபி எடுக்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது. அதனால் அவர்கள், பலர் ஆபத்துகளையும் கண்டுகொள்ளாமல் உயரமான கட்டடங்கள், கால்வாய்கள், அணைகள், பாலங்கள், வன விலங்குகள் என பலவற்றிலும் நெருங்கிச் சென்று செல்ஃபி எடுக்கிறார்கள். அப்படி செல்ஃபி எடுக்கையில் சிலர் கால் தவறிவிழுந்து பலியாகின்றனர்.

உலக அதிசயத்தில் ஒன்றான தாஜ்மஹாலைப் பார்வையிடச் சென்ற ஜப்பான் நாட்டுக்காரர் ஒருவர், செல்ஃபி எடுக்க முயற்சித்தபோது கட்டடத்திலிருந்து தவறிவிழுந்து உயிரிழந்தார். இலங்கையில் மாணவர் ஒருவர் ரயிலில் செல்ஃபி எடுக்க முயற்சித்தபோது காயமடைந்தார். ரஷ்யாவில் செல்ஃபி எடுக்க முயன்ற பெண் ஒருவர் 40 அடி உயர பாலத்தில் இருந்து தவறிவிழுந்ததில் பலியானார். ரஷ்யாவில் மட்டும் செல்ஃபி எடுக்கையில் 10 பேர் பலியாகி உள்ளனர் என்றும், 100 பேர் காயமடைந்து உள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது. மலை உச்சியில் இருந்து போலந்து நாட்டுத் தம்பதியர் செல்ஃபி எடுக்க முயன்றபோது கால்தவறி கடலில் விழுந்து உயிரிழந்து உள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் வாலிபர் ஒருவர் வரதட்சணை கொண்டு வராத கடுப்பில் செல்ஃபி எடுக்கும்போது மனைவியை கால்வாயில் தள்ளி கொலை செய்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் 15 வயது சிறுவன் துப்பாக்கியைத் தனது நெற்றிப்பொட்டில் வைத்தபடி செல்ஃபி எடுக்கையில் குண்டு பாய்ந்ததில் படுகாயம் அடைந்தார். உத்தரப் பிரதேசத்தில் ரயில்வே டிராக்கில் நின்று ஓடும் ரயில்களின் முன்பாக செல்ஃபி எடுக்க முயன்ற இரண்டு இளைஞர்கள் பலியாகினர். கோவாவில் உள்ள கடற்கரைக் கிராமமான அன்ஜுனாவில் சாரத்தில் ஏறி செல்ஃபி எடுக்கையில் தவறி விழுந்த 2 பெண்களின் இடுப்புக்குக் கீழ் உடல் பாகங்கள் வேலை செய்யாமல் போயின. உத்தரப் பிரதேசம் கங்கை நதியில் செல்ஃபி எடுக்க முயன்றபோது அடுத்தடுத்து தவறிவிழுந்து நீரில் மூழ்கி நண்பர்கள் 7 பேர் பலியாகினர். திருப்பூரில் குடிபோதையில் நல்ல பாம்புடன் செல்ஃபி எடுக்க முயற்சித்தபோது, பாம்பு கடித்ததில் புது மாப்பிள்ளை ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இப்படி கடந்த சில வருடங்களாக செல்போன்களில் எடுக்கப்படும் ஆபத்தான ‘செல்ஃபி’களால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுகுறித்து பல்வேறு எச்சரிக்கைக்குப் பிறகும் ‘செல்ஃபி’ மரணங்கள் தொடர்கதையாகி வருகின்றன. செல்ஃபி எடுக்கும்போது எதிர்பாராதவிதமாக பலியாவோரின் எண்ணிக்கை இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அமெரிக்க செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. அதில், கடந்த 2015-ம் ஆண்டில், உலக அளவில் செல்ஃபி எடுக்கும்போது பலியானவர்களில் எண்ணிக்கை 27. இதில் பாதிக்கும் மேற்பட்டோர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ரயில் வரும்போது செல்ஃபி எடுப்பது, 60 அடி உயரமான கட்டடத்தில் இருந்து செல்ஃபி எடுப்பது என ஆபத்தான பகுதிகளில் விபரீதம் அறியாமல் நடந்துகொண்டதால் அவர்களுக்கு மரணம் ஏற்பட்டது’ எனக் குறிப்பிட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து மும்பையில் 16 இடங்களில், செல்ஃபி எடுக்க காவல் துறை தடை விதித்துள்ளதுடன், ‘No selfie zone’ என்று எழுதப்பட்ட போர்டுகள் வைக்கப்பட்டு உள்ளன.


செல்ஃபி சர்ச்சைகள்!
செல்ஃபியினால் மரணங்கள் நிகழ்வது ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் அதனால் ஏற்படும் சர்ச்சைகளும் அதிகம். ராஜஸ்தான் மாநில ஜெய்ப்பூரில் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுடன் விசாரணைக்குச் சென்ற அந்த மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் சோம்யா குர்ஜார் செல்ஃபி எடுத்துக்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவீந்திர ஜடேஜா தனது மனைவி ரீவா சோலங்கியுடன் குஜராத் மாநிலத்தில் உள்ள கிர் வனப்பகுதியில் சிங்கங்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை விட்டுத் தப்பிச்சென்ற விஜய் மல்லைய்யாவுடன் செல்ஃபி எடுத்து சர்ச்சையில் சிக்கினார் டோலிவுட் நடிகர் அல்லரி நரேஷ். சட்டீஸ்கர் முதலமைச்சர் ராமன் சிங், பாலிவுட் நடிகை கரினா கபூருடன் செல்பி எடுத்துக்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.


செல்ஃபி பிரச்னைகள்!
செல்ஃபியினால் சர்ச்சைகள், விபத்துகள் மட்டுமல்லாது பிரச்னைகளும் உருவாகின்றன. உத்தரப் பிரதேசத்தில் இளைஞர்கள் நான்கு பேர் மது அருந்துவதை செல்ஃபி எடுத்து, அதனை ஃபேஸ்புக்கில் ஷேர் செய்துள்ளனர். அந்த நண்பர்களின் உறவினர் அதைப் பார்த்துவிட்டு வீட்டில் சொல்ல மானம் போய்விட்டது அந்த இளைஞருக்கு. இதேபோல், தன் காதலனுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி வெளிவர அந்தப் பெண்ணின் வீட்டில் உள்ளவர்கள் அந்தப் பையனை திட்டி சண்டை, போலீஸ் எனச் சென்றிருக்கிறது அந்த செல்ஃபி கேஸ். செல்போன் ரிப்பேர் ஆனதால், அதைச் சரிசெய்ய கடையில் கொண்டுபோய் கொடுத்திருக்கிறார் ஒரு மாணவி. அதிலிருந்த, செல்ஃபிக்களை அந்தக் கடைக்காரன் சமூக வலைதளங்களில் வெளியிட அவமானத்தில் தற்கொலை செய்துகொண்டார் அந்த மாணவி. இவை எல்லாம் ஒருபுறம் இருக்க... மும்பையில் பிரபல வங்கியொன்றில் அதிகாரியாக வேலை பார்த்து வந்த இளம்பெண் ஒருவர், தான் குளிக்கும்போது, உடை மாற்றும்போது செல்ஃபி எடுத்து அதைத் தன் காதலனுக்கு அனுப்பிவைத்துள்ளார். அதை, அவனின் உயிர் நண்பன் திருடியிருக்கிறான். பிறகு, தன் கடனை அடைப்பதற்காக வங்கி அதிகாரியான நண்பனின் காதலிக்கு அந்தப் படங்களை அனுப்பிவைத்து பணப் பேரம் நடத்தியுள்ளான். அதிர்ந்துபோன காதலி, போலீஸில் சொல்ல... அகப்பட்டான் அந்தக் கயவன். இப்படிச் சில பெண்கள் அவசரத்தில் எல்லாவற்றையும் செல்ஃபி எடுத்து அனுப்பிவிட்டு அப்புறம் அவஸ்தைபடுகிறார்கள்.


செல்ஃபியும் நடிகைகளும்!
தன்னைத்தானே செல்போனில் படம் எடுத்து அழகு பார்க்கும் செல்ஃபி கலாசாரம், அவரவர் திருப்தியோடு நின்றுகொண்டால் பிரச்னையில்லை. அடிமைத்தனமாக உருவாகி, அடுத்தடுத்த விபரீதங்களை உருவாக்குவதில்தான் பிரச்னையே உருவாகிறது. தமிழ்ப் படங்களில் நடித்த சில முன்னணி நடிகைகளின் அந்தரங்க செல்ஃபி போட்டோக்கள் வாட்ஸ்-அப்பில் வலம்வந்து கோலிவுட்டில் பரபரப்பை உண்டாக்கின. கடந்த சில வருடங்களுக்கு முன் தமிழ்ப் படவுலகில் முன்னணி நடிகையாக இருந்த ஒருவர், உடற்பயிற்சிக்கூடத்தில் இருந்தபடி தன் இடை குறைந்த செல்ஃபி போட்டோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.


செல்ஃபி ஆபத்துகள்!
செல்ஃபி, உடலுக்கும் தீங்கு விளைவிக்கிறது எனப் பேசப்படுகிறது. ஸ்மார்ட் போன்கள் மூலம் அடிக்கடி செல்ஃபி எடுப்பதால் முகத்தில் சுருக்கம் ஏற்படும், தோல் பாதிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். எந்தக் கையால் போனை பிடித்துக்கொண்டு நாம் செல்ஃபி எடுக்கிறோம் என்பதைக்கூட நம் முகத்தைவைத்தே கூறமுடியும் என்கின்றனர் மருத்துவர்கள். நிறைய செல்ஃபி எடுப்பவர்களின் முகத் திசுக்கள் ஒரு பக்கம் மாசடைந்திருக்கும். தோலில் உள்ள தாதுக்களைக் காந்த அலைகள் மாற்றிவிடுகின்றன. மொபைலில் இருந்து வெளிப்படும் எல்.இ.டி ஒளி, ஆக்சிஜன் எதிர்வினை புரிவதால் சருமத்தில் சுருக்கங்கள் தோன்றி வயதான தோற்றத்தை ஏற்படுத்துவதோடு, சருமப் புற்றுநோய் வருவதற்கான அபாயங்களும் உண்டாகின்றன. போனில் இருந்து வெளிப்படும் ஒளியானது சருமத்தில் உள்ள நுண்துளைகள் வழியாக அடிப்பகுதிக்குள் ஊடுருவுவதால் அதிக வெப்பத்தை வெளிப்படுத்தி மெலனின் பிக்மென்ட் உற்பத்தியை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் முகத்தில் உள்ள செல்கள் பழுதடைந்து கரும்புள்ளிகளையும் கருந்திட்டுகளையும் ஏற்படுத்துவதோடு, சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளையும் அதிகரிக்கிறது.


செல்ஃபியின் உடைந்தபோது சிலை!
செல்ஃபி எடுக்கும்போது பலியானவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், இங்கே ஓர் இளைஞர் 126 ஆண்டு பழமை வாய்ந்த சிலையை உடைத்துள்ளார். போர்ச்சுக்கல் நாட்டு ரோசியோ ரயில் நிலையத்தில் 126 ஆண்டு பழமை வாய்ந்த சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அது, 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலை. அதற்குப் பக்கத்தில் நின்று செல்ஃபி எடுப்பதற்காக சிலை மீது ஏறியபோது அந்தச் சிலை கீழே விழுந்து உடைந்தது. பயத்தில் தப்பி ஓட நினைத்த அந்த இளைஞரை போலீஸார் மடக்கிப்பிடித்தனர்.

செல்ஃபியைத் தடுக்க மாத்திரைகள்!
செல்ஃபி மோகத்தைத் தடுக்க ‘ஆன்டி-செல்ஃபி’ மாத்திரைகள் இங்கிலாந்தில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. ‘மின்ட்ஸ்’ - புதினா வாசனையுடன் கூடிய இனிப்புச் சுவையுடன் இந்த மாத்திரைகள் விற்பனைக்கு வந்துள்ளன. தினமும் 2 அல்லது 3 மாத்திரைகள் எடுத்துக்கொண்டால், செல்ஃபி எடுக்கும் பழக்கத்தை நிறுத்த உதவும் என அந்த மாத்திரை தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆண்களுக்கு தினமும் ஒரு மாத்திரையும், பெண்களுக்கு 5 மாத்திரைகளும் என அந்த கம்பெனிகள் விளம்பரம் செய்துள்ளன.

செல்ஃபியின் மூலம் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்கலாம்!
இப்போதெல்லாம் ஒரு நபரைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமெனில் அவரைப் பற்றிய தகவல்களைச் சமூக வலைதளங்களிலோ, இணையதளங்களிலோ தேடிப் பார்ப்பது சர்வதேச விதியாகிவிட்டது. அப்படித் தேடும்போது அகப்படும் புகைப்படங்கள் உங்களுடைய விதியை நிர்ணயிக்கக் கூடும். குறிப்பாக வேலை தேடும் தருணங்களில் உங்களுடைய குணாதிசயத்தை உங்கள் புகைப்படங்கள் பேசும் என்பதை நினைவில்கொள்ளுங்கள். செல்ஃபியை வைத்து உங்கள் இருப்பிடத்தைக் கண்டுபிடித்துவிட முடியும். ஸ்மார்ட்போன்கள், ஜி.பி.எஸ் பின்னணியில் இயங்கிக்கொண்டே இருக்கும். அது உங்களுடைய இருப்பிடத்தை உங்கள் செல்ஃபியில் ரகசியக் குறியீடுகளாகப் பதிவுசெய்து வைத்துக்கொள்ளும். கூடவே நாள், நேரம் போன்றவற்றையும் பதிவு செய்துகொள்ளும். இது ‘ஜியோ டேக்’ எனப்படும். அந்த செல்ஃபியை, ஒருவர் டவுண்லோடு செய்து அதற்கென்றே இருக்கும் சில மென்பொருட்களில் இயக்கும்போது அதன் எடுக்கப்பட்ட விலாசம் கிடைத்துவிடும். சில இணையதளங்கள்கூட இந்த டீகோடிங் வேலையைச் செய்கின்றன.

செல்ஃபி எடுக்கும்போது பின்பற்றப்பட வேண்டியவை:
* சமூக வலைதளங்களில் செல்ஃபிக்களை வெளியிடும்போது அது, தம்முடைய தன்னம்பிக்கையை வலுவிழக்கச் செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
* செல்பி எடுக்கும்போது ஜி.பி.எஸ்/லொக்கேஷன் ஆப்ஷன்களை ஆஃப் பண்ணி வைக்கவேண்டும்.
* செல்ஃபிக்காக அதிக நேரத்தைச் செலவிடக் கூடாது.
* சிரத்தைமிகுந்த இடங்களில் செல்ஃபி எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
* பாதுகாப்போடு செல்ஃபி எடுப்பது அவசியம்.

செல்ஃபி குறித்த நோக்கம்!
செல்ஃபி எடுப்பவர்களின் நோக்கம் குறித்து அமெரிக்காவின் ஜியார்ஜியா பல்கலைக்கழக தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு ஒன்று மேற்கொண்டனர். அதில், நார்சிஸம் (தன் உடல் மீது ஆர்வம்) நோக்கம் கொண்டவர்கள் செல்ஃபி மீது அதிக ஆர்வமாக இருப்பது தெரியவந்தது. மேலும், அவர்கள் தங்களது இயல்பைத் தாண்டிய மேம்படுத்திய தோற்றத்தை இதன்மூலம் வெளிப்படுத்த விரும்புகின்றனர். மனிதவள மேம்பாட்டாளர்களைப் பொறுத்தவரை செல்ஃபி அதிகம் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக வேலைக்காக ஆட்களைத் தேர்வு செய்யும்போது சமூக வலைதளங்களில் இருக்கும் செல்ஃபிக்கள் மூலம் அவர்களது இயல்பை தெரிந்துகொள்ள முடிவதாக மனிதவள ஆய்வாளர்கள் கூறி உள்ளனர்.

செல்ஃபி உளவியல் பாதிப்பு!
‘அதிகமாக செல்ஃபி எடுக்கும் மனநிலை உளவியல் பாதிப்பு’ என்கிறது மருத்துவ ஆய்வு. இதை அமெரிக்க உளவியல் அமைப்பான ஏ.பி.ஏ உறுதிப்படுத்துகிறது. இதற்கு அவர்கள், ‘செல்ஃபிட்டீஸ்’ (Selfitis) என்று பெயரிட்டுள்ளனர். இதை மூன்று வகையாகப் பிரித்துள்ளனர். சிலர், நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் மூன்று செல்ஃபிக்களையாவது எடுப்பார்கள். இவர்கள் அதை ரசிப்பதோடு சரி. சமூக வலைதளங்களில் வெளியிடமாட்டார்கள். இவர்கள் முதல் வகையைச் சேர்ந்த பார்டர்லைன் செல்ஃபிட்டிஸ் (Borderline selfitis). அடுத்து, இரண்டாவது வகையைச் சேர்ந்த அக்யூட் செல்ஃபிட்டிஸ் (Acute selfitis). இவர்கள், ஒருநாளைக்கு குறைந்தபட்சம் மூன்று செல்ஃபிக்களை எடுத்து, மூன்றையுமே சமூக வலைதளங்களில் பதிவுசெய்து... அதன் லைக் மற்றும் கமென்ட்டைக் கவனிப்பவர்கள். மூன்றாவது வகை க்ரோனிக் செல்ஃபிட்டிஸ் (Cronic selfitis). இவர்கள் நாள் முழுவதும் செல்ஃபி எடுத்து... அதை அப்படியே சமூக வலைதளங்கள், குழுக்களில் பதிவு செய்துகொண்டே இருப்பார்கள். இவர்களுக்கு மனநல மருத்துவரின் ஆலோசனை தேவை. இதை ஓ.சி.டி (Obsessive compulsive disorder) எனப்படும் எண்ணம் மற்றும் செயல் சுழற்சி நோயாக அறிவிக்க வேண்டும் என்று மனநல மருத்துவர்கள் வலியுறுத்தி உள்ளனர். தற்போதைக்கு இதற்கு மருத்துவம் இல்லை என்றும், Cognitive Behavioural Therapy (CBT)  எனும் ‘அறிவாற்றல் ஒருங்கிணைப்பு சிகிச்சை’ மூலமாகத்தான் தற்காலிகத் தீர்வு காணமுடியும் என்றும் எச்சரிக்கிறது அமெரிக்கன் சைக்யாட்ரிஸ்ட் அசோசியேஷன்.


- ஜெ.பிரகாஷ்


Saturday, September 17, 2016

திரு.வி.க-விடம்... அவர் மனைவி கேட்டது என்ன ? - திரு.வி.க நினைவு நாள் பகிர்வு

(இந்தக் கட்டுரை 17-09-16 அன்று, 'விகடன்' இணையதளத்தில் வெளியானது.)

‘‘காபி, வயப்படுத்தும் ஆற்றல்கொண்டது!’’
‘‘நல்லன கொண்டும், தீயன விலக்கியும் மற்றவர் வாழ்வதற்கு என் வாழ்க்கைக் குறிப்புகள் ஓரளவிலாது துணைபுரியும்’’ - என்றவர் திரு.வி.கல்யாணசுந்தரனார். அவர், 1883-ம் ஆண்டு விருத்தாசலனார் – சின்னம்மையார் தம்பதியருக்கு மகனாய்ப் பிறந்தார். பனை ஓலை வேய்ந்த சிறு குடில் வீட்டில் பாசத்துடன் வளர்க்கப்பட்டார். குழந்தைப் பருவத்தில் சீதபேதியினால் அவதிப்பட்டார். இடையிடையே ஏற்பட்ட பல்வேறு இடையூறுகளால் அவரின் கல்வி தடைப்பட்டது. யாழ்ப்பாணம் கதிரைவேலிடம் தமிழைக் கற்றறிந்தார். தன் பொருட்களைக் கொடுப்பது, வேட்டியைத் துவைப்பது எனச் சண்டையில்லாமல் தன் சகோதரருடன் இணக்கமாக இருந்தார். ஆவின் பாலை, தன் உணவில் கட்டாயம் எடுத்துக்கொள்வார். இதனால் டீ, காபி அருந்தமாட்டார். ஒருநாள், தலைவலியும் கண்வலியும் தொடர்ந்தபோது மருத்துவர் காபியில் மருந்தைக் கலந்துகொடுக்க... அதுமுதல் காபிக்கு அடிமையானார். ‘‘காபி, பொல்லாதது... ஏமாந்தால், அது எல்லோரையும் தன்வயப்படுத்தும் ஆற்றல் கொண்டது’’ என்று காபிக்கே இலக்கணம் கொடுத்தார்.
ஒரு சமயம் அமீனா என்ற அரசியல் பிரமுகரைக் கண்டு உடனிருந்த நண்பர்கள், ‘அமீனா, அமீனா’’ என்று அழைத்தப்படியே ஓடினர். ஆனால் திரு.வி.க-வோ, ‘‘அமீனாவுக்குக் கொம்பா முளைத்திருக்கிறது’’ என்று கேட்டுக்கொண்டு அதே இடத்திலேயே நின்றார். இதனைக் கேட்ட அமீனா, இவருடைய அஞ்சாநெஞ்சத்தைப் பாராட்டிச் சிரித்தப்படியே சென்றார்.
‘‘உங்களிடம் விரும்புவது கல்வி மட்டுமே!’’
ஒற்றுமையைக் குலைக்காத, அமைதிக்கு உருவான கமலாம்பிகை என்ற நங்கையை 1912-ல் திருமணம் செய்துகொண்டார். அவர், ‘‘தனக்குக் கல்வி போதிக்க வேண்டும்’’ என்று தன் கணவரிடம் கோரிக்கைவைத்தார். அதற்கு திரு.வி.க., ‘‘நீ இளமையில் பொன், புடவைகளை அல்லவா கேட்க வேண்டும். அதை விட்டுவிட்டு வேறு எதையோ கேட்கிறாயே’’ என்றார். அதற்கு கமலாம்பிகை, ‘‘எனக்கு நகைகள் இருக்கின்றன. என் அன்னையாரின் விலை உயர்ந்த புடவைகள் பல இருக்கின்றன. நான் என்ன கேட்டாலும் வாங்கித்தர பெரியப்பா இருக்கிறார். ஆகவே, உங்களிடம் விரும்புவது கல்வி மட்டுமே’’ என்று பதிலளித்தாராம். அவர் கேட்டுக்கொண்டபடி அவருக்கு தமிழ் கற்பித்தார் திரு.வி.க.
மறுமணத்துக்கு மறுப்பு!
கமலாம்பிகை, இனிமையாகப் பாடக்கூடியவர். ஆகையால் அவரை, திருவொற்றியூர் கடற்கரைக்கு அழைத்துச் சென்று அவரைப் பாடவைத்துக் கேட்டு மகிழ்வார். அவர்களுடைய இல்லற வாழ்க்கையின் பயனாக இரண்டு குழந்தைகள் பிறந்தனர். இரண்டும் இறந்துவிட்டன. கமலாம்பிகையும் எலும்புருக்கி நோயால் இறந்துபோனார். மனைவியை இழந்து துக்கத்தில் இருந்த திரு.வி.க-வைப் பலர், மறுமணம் செய்யச் சொல்லி வலியுறுத்தினர். அதற்கு அவர், ‘‘என் வயது 35. இந்த வயதில் ஓர் இளம்பெண்ணை மணம் செய்வது அறமா?’’ என்று அவர்களையே கேட்டு மறுத்துவிட்டார். வேறு சிலரிடம், ‘‘ ‘தேசபக்தன்’ கட்டுரைகளையொட்டி நான் சிறை செல்ல நேரிடலாம் என்று ஊர் பேசுவது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். இந்த நிலையில் மறுமணமா?’’ என்று சொல்லி மறுமணப் பேச்சுக்கே இடமில்லாமல் முற்றுப்புள்ளி வைத்தார்.
தொழிலாளர் தொண்டில் உறுதுணை!
சிறுவயதில் பெண் குழந்தைகளுடன் விளையாடியதால், பின்னாளில் பெண்ணினத்தைப் போற்றும் அளவுக்கு உயர்ந்தார். தமிழகத்தில் பெண் கல்லூரி அமைய எண்ணம் கொண்டிருந்தார். அந்த எண்ணம் யாழ்ப்பாணம் சென்று ராமநாதன் பள்ளிகளில் கண்டபோது எதிரொலித்தது. ஆனால், அவருடைய எண்ணம் நிறைவடையவில்லை. தன் குடும்பம் மட்டுமல்லாது, ஆசிரியர், நண்பர்கள், உறவினர்கள் பலருக்கும் சிறுசிறு வேலைகள் செய்து வந்தார். அதனாலேயே தொண்டு எண்ணம் அவர் நெஞ்சில் உதித்தது. ‘‘தொழிலாளர் சேவை நாட்டுக்கு மட்டும் உரியதன்று. அது, உலகுக்கும் உரியது. தொழிலாளர் இயக்கத்தில் ஈடுபடுவது உலகத் தொண்டில் ஈடுபடுவதாகும்’’ - என்று தொழிலாளர் தொண்டுக்குக் குரல் கொடுத்ததோடு அதில் உறுதுணையாக நின்றார்.
கட்டுப்பாடுகளை மீறியவர்!
ஒரு சமயம், திருவல்லிக்கேணி சிவனடியார் திருக்கூட்ட விழாவில், மாகேசுர பூஜை நடந்தது. அப்போது, உணவுக்குப் பெரும் கூட்டம் கூடியது. அந்த நேரத்தில் எச்சில் இலை எடுப்பவர் எங்கேயோ சென்றுவிட்டார். அதைக் கண்ட திரு.வி.க., உள்ளே புகுந்து இலைகளை எடுக்க ஆரம்பித்தார். அதைப் பார்த்த சிலரும் அந்த வேலையில் இறங்கினர். இதுபோல் ராயப்பேட்டை பாலசுப்ரமணிய பக்தஜன சபையிலும் செய்துள்ளார். கெளரவம் பார்க்காமல் வேலை செய்யக்கூடிய பண்பாளர் திரு.வி.க. அதே சபையில் திரு.வி.க-வின் பள்ளித் தோழரான ஏகாம்பரம் என்பவர் உறுப்பினராய் இருந்தார். அவர் உடலில் பெரிய அம்மை வார்த்தது. ‘அம்மை தொற்றுநோய்... இளைஞர்கள் அணுகுதல் கூடாது’ என்று கட்டுப்பாடு வீடுதோறும் வீறிட்டது. ஆனால், அவற்றையும் மீறிப்போய் அவருக்கு உதவினார் திரு.விக. இருந்தாலும், ஏகாம்பரத்தின் உயிரை அம்மை நோய் எடுத்துச் சென்றுவிட்டது. ‘இளைஞர்கள் சுடுகாட்டுக்குப் போகக் கூடாது’ என்று கட்டளை பிறந்தது. அதையும் மீறிச் சுடுகாடு சென்று அவருடைய ஈமக்கடன்களில் பங்கெடுத்துக்கொண்டவர் திரு.வி.க.
உறவினர் ஒருவர், ஆந்திராவில் அரசு வேலையில் இருந்தார். அவர், திரு.வி.க-வை மதிப்பதில்லை. இந்த நிலையில், அவருக்குத் திடீரென்று வேலை போனது. அவருடைய நிலைமையைத் தெரிந்தகொண்ட திரு.வி.க., ஜஸ்டிஸ் சதாசிவத்திடம் அழைத்துச் சென்று விவரத்தைச் சொன்னார். நிரபராதியாகி, இழந்த வேலையை மீண்டும் பெற்றார் அந்த உறவினர். தன்னை மதிக்காத மனிதர்களுக்குக்கூட உதவும் எண்ணம் கொண்டவராக விளங்கினார் திரு.வி.க.
கவர்னரை மிரட்டிய எழுத்து!
சென்னையின் கவர்னராக லார்டு வெலிங்டன் பதவி வகித்தபோது, பத்திரிகை ஆசிரியர்களைக் கண்டு பேச விரும்பினார். அதன்படி அனைத்து ஆசிரியர்களும் அவரைச் சந்தித்தனர். அப்போது, ‘‘ஆங்கில அரசாங்கத்தைத் தாக்கி எழுதக் கூடாது’’ என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார் வெலிங்டன். மேலும் திரு.வி.க-வைப் பார்த்து, ‘‘உங்களுடைய எழுத்து வேகம் உடையது என்றும், மக்களைக் கொதித்து எழச் செய்யக்கூடிய தன்மை உடையது என்றும் நான் அறிகிறேன். ஆகையால், வேகத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும்’’ என்று கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு அவருடைய எழுத்தில் அனல் பறந்தது. அதுபோல் ஒருமுறை ஞானியார் அடிகள், தியாகராயரிடம், ‘‘நீர் யாரிடம் தமிழ் பயின்றீர்’’ என்று வினவியிருக்கிறார். அதற்கு தியாகராயர், ‘‘நான் எந்தப் பள்ளிக்கும் போனதில்லை. எவரிடமும் தமிழ் பயிலவில்லை. என் பள்ளி திரு.வி.க-வே. அவர் பேச்சும், எழுத்தும் நான் பயின்றவை’’ என்று பதில் அளித்தாராம்.
மகாத்மாவின் பேச்சை மொழிபெயர்த்தார்!
திரு.வி.க-வின் உள்ளத்தில் காந்தியடிகளுக்கு என்று ஒரு தனி இடம் உண்டு. அவரை, ‘காந்தியடிகள்’ என்று முதன் முதலில் அழைத்தது திரு.வி.க-தான். ஒரு சமயம், காந்தியடிகளைச் சந்திப்பதற்காக விஜயராகவாச்சாரியார் கொடுத்த கடிதத்துடன் அரக்கோணம் ரயில் நிலையத்தில் காத்திருந்தார் திரு.வி.க. ரயிலில் இறங்கிய காந்தியடிகள், “ ‘தேசபக்தன்’ எந்த மொழிப் பத்திரிகை?’’ என்றார். “தமிழ்ப் பத்திரிகை’’ என திரு.வி.க சொல்ல, “நீங்கள் பட்டதாரியா?’’ என்றார் காந்தி. “நான் பட்டதாரி இல்லை. மெட்ரிகுலேஷன் வரை ஆங்கிலம் பயின்றவன். தமிழாசிரியனாக இருந்தவன். என்னால் நன்றாக மொழிபெயர்க்க முடியும். தொழிற்சங்கக் கூட்டங்களில் வாடியா, அன்னிபெசன்ட் அம்மையாரின் பேச்சுகளை நான்தான் மொழிபெயர்ப்பேன்’’ - என்றார் திரு.வி.க. “என் பேச்சை மொழிபெயர்ப்பீரா?’’ என காந்தியடிகள் கேட்க, “மொழிபெயர்ப்பென்’’ எனச் சொல்லி... தொழிலாளர் கூட்டத்தில் காந்தியின் பேச்சை அவரே மொழிபெயர்த்துக் கூறினார். அதுமுதற்கொண்டு திரு.வி.க-வை காந்தியடிகள் காணும்போதெல்லாம், “என்ன மொழிபெயர்ப்பாளரே’’ என்றே அழைத்துவந்தார்.
யார் ஒருவர் தன்னலம் கருதாது தன் மொழிக்காகவும், தன் மக்களுக்காகவும், தன் மண்ணுக்காகவும் உழைக்கிறாரோ அவருடைய வாழ்க்கை வரலாறு ஆகிறது. அப்படிப்பட்ட பன்முகத் திறன்கொண்டவராக விளங்கிய திரு.வி.க., 1953-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் நாள் இவ்வுலகை நீத்தார்.
‘‘தமிழுக்குக் கிடைத்த இரு சுடர்கள்... இரு திருவிளக்குகள் மறைமலையடிகளாரும், திரு.வி.க-வும்’’ என்றார் அறிஞர் அண்ணா.
‘‘தமிழ்நாட்டுக்கு காந்தியாகவும், தமிழுக்கும் தமிழ் எழுத்தாளர்களுக்கும் தந்தையாகவும், தொழிலாளர்களுக்குத் தாயாகவும் விளங்கியவர்’’ என்று பாராட்டினார் கல்கி.
‘‘இன்றைக்கு 25 ஆண்டுகளுக்கு முன்னர் நாம் விதைத்த விதை வளர்ந்தே வருகிறது’’ - என்று எப்போதோ அவர் சொன்ன வரிகள், இன்று அவர் விதைத்த அனைத்துத் தொண்டுகளிலும் வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
- ஜெ.பிரகாஷ்

‘சாண்டில்யன்’ என்னும் சகாப்தம்!

(இந்தக் கட்டுரை, 11-09-16 அன்று 'விகடன்' இணையதளத்தில் வெளியானது.)
‘‘மனிதனை மீறிய சந்தர்ப்பங்கள் வாழ்க்கையை எவ்வளவு தூரம் திருப்பிவிடுகின்றன என்பதற்கு நான் ஓர் உதாரணம்.’’ - இது, ‘சரித்திர நாவல்களின் ஜாம்பவான்’ சாண்டில்யன் தன்னுடைய, ‘போராட்டங்கள்’ நூலில் எழுதிய வரிகள்.
‘‘ஒரு படத்துக்கு மக்கள் மத்தியில் ஐந்து ஆண்டுகள் மட்டுமே மவுசு இருக்கும். ஆனால், நான் எழுதும் புத்தகங்களுக்கு 500 ஆண்டுகள் மவுசு இருக்கும். அதனால்தான் நான் எழுத்துத் துறையைத் தேர்ந்தெடுத்தேன்’’ என்கிற தன்னம்பிக்கையைக் கொண்டிருந்தவர் சாண்டில்யன்.
சினிமா, நாடகம், சங்கீதம் மீது காதல்!
அந்த மாபெரும் எழுத்தாளர், நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்துள்ள திருஇந்தளூரைச் சேர்ந்த சடகோபன் அய்யங்கார் - பூங்கோதைவல்லி தம்பதியருக்கு 1910, நவம்பர் 6-ம் தேதி மகனாய்ப் பிறந்தார். சிறுவயதிலிருந்தே தந்தையின் இலக்கிய ருசியால் வளர்க்கப்பட்டார். காலை எட்டு மணி வரை உறங்கப் பிரியப்பட்ட சாண்டில்யனை, விடியற்காலை ஐந்து மணிக்கே எழுப்பி முகுந்தமாலை சொல்ல வைத்துவிடுவாராம் அவரது தந்தை. திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பட்டம்பெற்ற அவர், அப்போதே தேச விடுதலைப் போராட்டத்திலும் பங்கெடுத்துக்கொண்டார். மூதறிஞர் ராஜாஜியின் தாக்கத்தால் அதில் ஒரு துரும்பாக அவரும் அடித்துச் செல்லப்பெற்றார். சினிமா, நாடகம், சங்கீதம் ஆகியவற்றின் மீது கல்லூரிக் காலத்திலிருந்தே காதல் கொண்டிருந்தார்.  
‘‘சும்மா கதை எழுது தம்பி!’’
1932-ல் சென்னை தி.நகரில் குடியேறியது சாண்டில்யனின் குடும்பம். அங்கேதான் கல்கியும், சாமிநாத சர்மாவும் வசித்துவந்தனர். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சாமிநாத சர்மா நடத்திய பஜனையில் கல்கியும், சாண்டில்யனும் கலந்துகொண்டனர். இதனால் அவர்களின் நட்புப் பாலம் விரிந்தது. இருவரும் சாண்டில்யனை கதை எழுதச் சொன்னார்கள். ஆனால் மறுத்துவிட்டார். ‘திராவிடன்’ பத்திரிகை ஆசிரியர் சுப்பிரமணியம், ‘‘சும்மா கதை எழுது தம்பி’’ என்று கட்டாயப்படுத்த, அதன் காரணமாகவே, அவருடைய ‘சாந்த சீலன்’ என்னும் முதல் சிறுகதை உதயமானது. அது, காங்கிரஸை ஆதரித்த கதை... அவருடைய தந்தைக்கும், அவருக்குமான கதை. ‘‘காங்கிரஸ் கதையை நமது பேப்பரில் எப்படிப் போடலாம்’’ என்று ‘திராவிடன்’ நிர்வாகிகள் கொந்தளித்தனர். இதனால் சுப்பிரமணியம் சிக்கலுக்குள்ளானார். ‘‘கதைதான் நன்றாக எழுதுகிறாயே... இன்னும் எழுதேன்’’ என்று கல்கியும், சாமிநாத சர்மாவும் சொல்ல... ‘கண்ணம்மாவின் காதல்’, அதிர்ஷ்டம்’ ஆகிய கதைகள் ‘ஆனந்த விகடனி’ல் பிரசுரமாயின. அதன்பிறகு ‘சுதேசமித்திரன்’ ஆசிரியர் நிவாஸன், அவரைப் பத்திரிகையாளராக்கினார். உயர் நீதிமன்ற வழக்குச் சம்பந்தமான செய்திகள் ஆங்கிலப் பத்திரிகைகளில் மட்டுமே வந்துகொண்டிருந்தன. அதை மாற்றி, தமிழ்ப் பத்திரிகைகளில் இடம்பெற புத்துயிர் ஊட்டினார். அந்தக் காலத்தில் தள்ளாட்டத்தில் இருந்த தமிழ்மொழியைத் தலைநிமிரச் செய்தார்.
‘சினிமா பார்ப்பது கெடுதலா?’
‘பலாத்காரம்’ என்கிற தமிழகத்தின் முதல் அரசியல் நாவலை எழுதினார். அந்த நூலுக்கு, காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி முன்னுரை எழுதியிருந்தார். இந்த நாவலுக்குப் பிறகு அவருடைய மதிப்புக் கூடியது. பிற்காலத்தில், ‘புரட்சிப்பெண்’ என்ற தலைப்பில் அந்த நாவல் வெளிவந்தது. பி.என்.ரெட்டியிடமும், சித்தூர் நாகையாவிடமும் சினிமாவில் திரைக்கதை எழுதும் கலையைக் கற்றுக்கொண்டு அதில் கால்பதித்தார். ‘அம்மா’, ‘தியாகய்யா’, ‘என் வீடு’ ஆகிய படங்களுக்கு திரைக்கதை எழுதினார். மீண்டும் ‘சுதேசமித்திரனி’ல் சேர்ந்து சரித்திரக் கதைகளை எழுத ஆரம்பித்தார். ‘அமுதசுரபி’ நிர்வாகத்தாரின் வற்புறுத்தலால், அந்த இதழுக்கு சரித்திரச் சிறுகதைகளை எழுத ஆரம்பித்தார். அதே இதழில், ‘ஜீவபூமி’ என்கிற கதையையும் தொடராக எழுதினார். ‘ஜீவபூமி’ தொடருக்குப் பிறகு, ‘மலைவாசல்’ என்ற தொடரை எழுதினார். இந்தப் புதினத்துக்குக் கிடைத்த வரவேற்பால், பல வரலாற்றுப் புதினங்களை எழுத ஆரம்பித்தார். ‘கன்னிமாடம்’, ‘கடல்புறா’ (மூன்று பாகங்கள்), ‘யவனராணி’ மூங்கில்கோட்டை’, ‘ராஜ பேரிகை’, ‘அவனி சுந்தரி’, ‘பல்லவ பீடம்’ முதலிய பிரமாண்டமான நாவல்களை எழுதினார். இவர் எழுதிய மிகப்பெரிய நாவல் ‘கடல்புறா’. இந்தியாவிலேயே அதிகம் எழுதி சரித்திரம் படைத்த சாதனையாளர் சாண்டில்யன்தான். 1948-ல், ‘‘பத்திரிகைத் தொழிலைத் தொழிற்சங்க ரீதியில் அமைக்க வேண்டும்’’ என்று குரல்கொடுத்தார். ‘‘பத்திரிகை ஊழியர்களுக்குத் தொழிற்சங்க அமைப்பு வேண்டும்’’ என்ற கருத்தை முதன்முதலில் இந்தியாவில் பதித்தவரும் இவர்தான். ‘தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தை’த் தொடங்கினார். அது, ‘தென்னிந்தியப் பத்திரிகையாளர் சம்மேளனம்’ என்ற பெயரில் பிரபலமடைந்தது. சினிமாவைத் தாக்கி எழுதுபவர்களுக்கு அவர், தன் பேனாவின் வலிமையால் பதில் சொன்னார். சினிமா பற்றி ராஜாஜி கூறிய கருத்துகளை எதிர்த்து, ‘சினிமா பார்ப்பது கெடுதலா?’ என்ற கட்டுரையை 1952-இல் எழுதினார். 1987 வரை தன் எழுத்துப் பயணத்தில் முத்திரை பதித்த அவர், அதே ஆண்டில் மறைந்தார்.
''எல்லாவற்றுக்கும் ஒரு பாரம்பர்யம் உண்டு!''
ஒரு சமயம் கல்லூரிப் பெண்கள் சிலர் சாண்டில்யனைச் சந்திக்கச் சென்றிருக்கின்றனர். அப்போது ஒரு மாணவி, ‘‘சில வேளைகளில் உங்கள் நாவல்களில் அதிகமாகக்கூட (செக்ஸியாக) எழுதிவிடுகிறீர்களே’’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு அவர், ‘‘எந்த இடத்தில் அதிகம் என்று சொல்ல முடியுமா” என்று வினவியிருக்கிறார். அதற்கு அந்த மாணவி, ‘‘அதெப்படி முடியும்? பல இடங்களில் இருக்கின்றன’’ எனச் சொல்ல... ‘‘எந்த இடத்திலும் இலக்கிய வரம்பை மீறி, பண்பாட்டு வரம்பை மீறி, எதுவும் இருக்காது. எல்லாவற்றுக்கும் ஒரு பாரம்பர்யம் உண்டு. இலக்கியத்துக்கும் அப்படித்தான்’’ என்று பதிலளித்திருக்கிறார்.
‘‘சாண்டில்யனுடைய ‘கடல் புறா’ நாவலைப் படித்தபிறகுதான், தான் நீண்ட கடல் பயணம் செய்ய விரும்பினேன்’’ என்று விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒருமுறை கூறியிருந்தார்.
''வாசகர்களை ஈர்க்கக்கூடியவை...''
சாண்டில்யன் வாசகர் ஒருவரிடம் பேசினோம். ‘‘நான் 10-ம் வகுப்பு படித்தபோது என் தந்தை எனக்குச் செலவு கொடுத்த பணத்தில் சாண்டில்யனின், ‘ராஜ பேரிகை’ நாவலை வாங்கிப் படித்தேன். அந்த அளவுக்கு அவருடைய நாவல்கள் மீது எனக்கு ஈர்ப்பு அதிகம். இன்றும் நிறையப் பேர் சரித்திர நாவல்களை எழுதலாம். ஆனால் அவர் இறந்தபிறகும் சரித்திர நாவல்களுக்கு ஓர் அங்கீகாரம் இருக்கிறது என்றால் அது அவருக்கு மட்டும்தான். எத்தனை முறை மறுபதிப்பு செய்யப்பட்டாலும் அவருடைய நாவல்களுக்கு என்று தனிப்பட்ட வாசகர்கள் உண்டு. அவற்றை வெளியிடும் பதிப்பகத்தாருக்கும் ஒருபோதும் விற்பனை குறைவதில்லை. அவருடைய நாவல்கள் வாசகர்களை ஈர்க்கக்கூடியவை... பிரமிப்பானவை. உதாரணத்துக்குச் சொல்லப்போனால், ‘விஜய ராணி’யில் ஓர் இளவரசி குதிரையில் இறங்கும் காட்சியை இரண்டு அத்தியாயங்களுக்கு எழுதியிருப்பார். அதேபோல் அவருடைய இன்னொரு நாவலில் போர்க்காட்சியைத் திரையில் பார்க்கும்படியான அளவுக்கு தன் கண்முன்னே காட்டியிருப்பார். ஆங்கில கிழக்கிழந்திய கம்பெனியில் சாதாரண எழுத்தராக இருந்த ராபர்ட் கிளைவை, மிகப்பெரிய கத்திச்சண்டை வீரராகச் சித்தரித்தவர் சாண்டில்யன். இன்றும் சென்னை கன்னிமரா நூலகத்துக்குச் சென்று அவருடைய சில நூல்களைப் படிக்கத் தேடினால், அது குறிப்புதவிப் பகுதியில் மட்டுமே உள்ளது. நூலகத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு அதை வாடகைக்குக் கொடுப்பதில்லை. அந்த அளவுக்குப் பாதுகாக்கப்படுகிறது’’ என்றார்.
‘‘எழுத்துக்கும் சாவுக்கும் சம்பந்தம் உண்டா என்று கேட்காதீர்கள். நல்ல எழுத்து சாவதில்லையே தவிர, நல்ல மனிதன் செத்துப்போகிறான்’’ - ‘போராட்டங்கள்’ நூலில் அவர் எழுதிய வரிகள்.
அவருடைய எழுத்து, சாகவில்லை என்பதை நிரூபித்துவிட்டார்.
- ஜெ.பிரகாஷ்

அண்ணாவிடம் இரண்டு ரூபாய் கேட்ட எம்.பி.!

(இந்தக் கட்டுரை 15-09-16 அன்று, 'விகடன்' இணையதளத்தில் வெளியானது.)

‘‘வாசிக்கும் திறன்தான் ஒரு மனிதரை அறிவுடையவராக அடையாளம் காட்டும்’’ என்றவர் அண்ணா. எழுத்து, பேச்சு, அரசியல், நடிப்பு எனப் பன்முகம் கொண்ட அவர், 1909-ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் நாள் நடராஜன் - பங்காரு தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். தனது பள்ளிப் படிப்பை சென்னை பச்சையப்பா உயர்நிலைப் பள்ளியில் தொடங்கினார்.
ஆங்கிலம் பேச மறுத்த அண்ணா!
அண்ணா, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, விடுமுறையில் அவர் பாட்டி வீட்டுக்குச் சென்றார். அப்போது அவருடைய பாட்டி, ஆங்கிலம் பேசுமாறு சொல்ல, ‘‘அதற்கு ஆங்கிலம் பேசினால் உனக்கென்ன புரியும்? நாம் இப்போது பேசிக்கொண்டுதானே இருக்கிறோம்’’ என்று மறுத்துவிட்டார். போலியாக, தேவையில்லாமல் ஆங்கிலம் பேசுவதில் அண்ணாவுக்கு உடன்பாடில்லை. ஆனால், இன்று பல பேர் தங்களுக்கு ஆங்கிலம் தெரியாவிட்டாலும், அது தெரிந்தமாதிரி காட்டிக்கொள்கிறார்கள். அண்ணா, சில பொதுக்கூட்டங்களுக்குக் காலதாமதமாகச் செல்வதுண்டு. இதுகுறித்து ஒருவர் கேட்டுள்ளார். அதற்கு அண்ணா, ‘‘முன்கூட்டியே வந்தால், அடுத்தவரைப் பேசவிடாமல் செய்துவிடுகிறார்கள். அதனால்தான் ஊருக்கு வெளியில் நின்று அனைவரது பேச்சையும் கேட்டுவிட்டு கடைசியில் வருகிறேன்’’ என்றாராம். இன்று அப்படியா நடக்கிறது? சில தலைவர்கள் வரும்வரை கூட்டம் ஆரம்பிக்கப்படாமலேயே இருக்கிறது. ஆரம்பித்தாலும் தலைவர் பேசி முடித்துவிட்டவுடன் கலைந்துவிடுகிறது கூட்டம்.
அதேபோல் தேர்தல் நேரத்தில் ஒரு கூட்டத்துக்குப் பேசச் சென்றிருக்கிறார் அண்ணா. ஆனால், அந்தக் கூட்டத்துக்குச் சென்றபோது காலதாமதமாகிவிட்டது. கட்சித் தொண்டர்கள் நித்திரையில் ஆழ்ந்திருந்தனர். அப்போது மைக் பிடித்த அண்ணா, மாதமோ சித்திரை... மணியோ பத்தரை... உங்களைத் தழுவுவதோ நித்திரை... மறக்காது எமக்கு இடுவீர் முத்திரை!’’ என்று பேச்சைத் தொடங்கித் தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.
இரண்டு ரூபாய் கேட்ட எம்.பி.!
அறிஞர் அண்ணா எம்.பி-யாக இருந்தபோது, தன் சக எம்.பி-க்களுடன் நாடாளுமன்ற அவை வளாகத்தில் பேசிக்கொண்டிருந்தாராம். அப்போது ஒரு எம்.பி. அவரிடம், ‘‘நீங்கள் எனக்கு இரண்டு ரூபாய் தரவேண்டும்’’ என்று கேட்க, அதற்கு அண்ணா, ‘‘நான் உங்களிடம் எப்போது கடன் வாங்கினேன். எனக்கு ஞாபகத்தில் இல்லையே?’’ எனச் சொல்ல... அதற்கு அந்த எம்.பி., ‘‘நான் ஒருமுறை சென்னை வந்திருந்தபோது உங்களுடைய பேச்சைக் கேட்க விரும்பி இரண்டு ரூபாய் கொடுத்து ஒரு டிக்கெட் வாங்கினேன். ஆனால், நீங்கள் அந்தக் கூட்டத்துக்கு வரவேயில்லை. அந்த இரண்டு ரூபாயைத்தான் இப்போது கேட்கிறேன்’’ என்றார் புன்னகையுடன்

உடனே அண்ணா, ‘‘அதுவா விஷயம்? நான் மீண்டும் ஒருமுறை சென்னையில் பேச இருக்கிறேன். அப்போது நீங்கள் வந்தீர்கள் என்றால், உங்களுக்காக நானே ஒரு டிக்கெட் எடுத்துக் கொடுத்துவிடுகிறேன்’’ என்று சொல்லிவிட்டுச் சிரிக்க... அங்கிருந்த அனைவருமே சிரித்துவிட்டனர்.
‘‘அந்தக் குறையைப் போக்கிவிடுவீர்கள்!’’
ஒருமுறை சட்டமன்றத்தில், ஆளும் காங்கிரஸ் சார்பில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு அண்ணா மிக சாதுர்யமாகப் பதிலளித்ததைக் கண்டு ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சியே வியந்துபோனது. அவர்கள், அண்ணாவை நோக்கி... ‘‘அண்ணாதுரையால் நல்ல எதிர்க் கட்சியாக இயங்கத் தெரியவில்லை’’ என்றனர். அதற்கு அண்ணா, ‘‘நீங்கள் எதிர்க் கட்சி சரியில்லை என்று அடிக்கடிச் சொல்லிக்கொண்டிருப்பதைப் பார்த்தால்... விரைவில் நீங்களே, அந்தக் குறையைப் போக்கிவிடுவீர்கள் என்று எண்ணுகிறேன். நாங்கள் ஒரு காலத்தில் நீங்கள் இப்போது உள்ள இடத்தில் அமர வேண்டியவர்கள் என்பதால் பொறுப்புணர்ந்து அடக்கத்துடன் கூறுகிறேன்’’ என்றாராம். ஆனால், இன்று சட்டமன்றத்தில் எதிர்க் கட்சிக்குப் பேச வாய்ப்பு அளிக்கப்படுவது இல்லை என்பது வேதனையாக இருக்கிறது.
‘‘நாட்கள் எண்ணப்படுகின்றன!’’
சட்டமன்றத்தில் எதிர்க் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர், அண்ணாவைப் பார்த்து... ‘‘உங்களுடைய (ஆட்சியின்) நாட்கள் எண்ணப்படுகின்றன’’ என்று சொன்னதும், அதற்கு அண்ணா, ‘‘என்னுடைய ஒவ்வோர் அடியும் அளந்துவைக்கப்படுகிறது’’ என்று நயம்பட பதில் சொன்னார். இதையே இன்றைய உறுப்பினர்கள் யாராவது சொல்லி இருந்தால் அவர் காணாமலே போயிருப்பார். அந்த அளவுக்கு மிகவும் சாதுர்யமாகப் பதில் சொன்னவர் அண்ணா.
எம்.ஜி.ஆர் கொடுத்த புலிக்குட்டி!
சட்டமன்றத்தில் ஒருமுறை எதிர்க் கட்சித் தலைவராய் இருந்த கருத்திருமன், ‘‘அண்ணாவிடம், கொட்டைப் பாக்குக்கு விலை கேட்டால், பட்டுக்கோட்டைக்கு வழி சொல்கிறார்’’ என்றாராம் நக்கலாய். அதற்கு அண்ணா, ‘‘கொட்டைப் பாக்குக்கு பட்டுக்கோட்டையில் விலை குறைவு என்பதை எதிர்க் கட்சித் தலைவர் புரிந்துகொள்ள வேண்டும்’’ என்று விளக்கம் கொடுக்க அவையில் சிரிப்பலை எழுந்தது. அதேபோல் வேறொரு சட்டமன்ற நிகழ்வில், ‘‘நான் கொடுத்த ஆண் புலிக்குட்டியை மிருகக் காட்சி சாலையில் சரியாகக் கவனிப்பதில்லை. ஆனால், எம்.ஜி.ஆர் கொடுத்த பெண் புலிக்குட்டி நன்றாக வளர்க்கப்படுகிறது. ஏன் இந்த ஓர வஞ்சனை?’’ என்று கேட்டிருக்கிறார் உறுப்பினர் விநாயகம். அதற்கு அண்ணா, ‘‘சம்பந்திகள் இருவரும் உட்கார்ந்து பேசித் தீர்த்துக்கொள்ளுங்கள்’’ என்று பதில் சொல்ல... புகார் கூறியவர் உட்பட அனைவரும் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தனர்.
அண்ணாவின் காரை சோதனையிட்ட அதிகாரி!
தமிழக முதலமைச்சராக அண்ணா பொறுப்பேற்ற காலகட்டத்தில், வெளிமாநிலங்களுக்கு அரிசி செல்லக் கூடாது என்ற கட்டுப்பாடு இருந்தது. அந்தச் சமயத்தில், ஒருநாள் அண்ணா விருத்தாசலம் கூட்டத்தை முடித்துவிட்டுத் திரும்பிகொண்டிருந்தபோது, வழியில் சோதனைச்சாவடியில் அவரது கார் நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டது. காரின் டிக்கியில் மாலைகள், கைத்தறி ஆடைகள், வாழ்த்து மடல்கள் இருந்தன. அவற்றைப் பார்த்த பிறகுதான் சோதனை செய்த அலுவலருக்கு வண்டியில் வந்திருப்பது யார் என்று தெரிந்தது. உடனே அவர் அண்ணாவின் அருகில் சென்று, ‘‘தெரியாமல் நடந்துவிட்டது. என்னை மன்னித்துவிடுங்கள்’’ என்றார். ஆனால், அண்ணா அவர் உதவியாளரிடம், ‘‘இந்த அலுவலரின் பெயரைக் குறித்துக்கொள்ளுங்கள்’’ என்றாராம். அந்த அலுவலர் தனக்கு ஏதோ நடந்துவிடப் போகிறது எனப் பயந்து அழாத குறையாகக் கெஞ்சியுள்ளார். அதற்கு அண்ணா, ‘‘நாங்கள் போடும் சட்டங்களைச் சரியான முறையில் நிறைவேற்றும் பொறுப்பு உங்களைப்போன்ற அதிகாரியின் கையில்தான் இருக்கிறது. இன்று நேரில் உங்கள் செயலைப் பார்த்தேன். உங்களைப்போன்றவர்கள்தான் உயர் பதவிக்கு வரவேண்டும். அதற்காகத்தான் உங்கள் பெயரைக் கேட்டேன்’’ என்றாராம். அத்துடன் அவருக்கு பதவி உயர்வும் வழங்கப்பட்டது. இன்றைய காலத்தில் சாதாரண கவுன்சிலர் கார்களையே சோதனையிட விரும்பாத அதிகாரிகள், அமைச்சர்கள், முதல்வரின் காரையா சோதனையிடப் போகிறார்கள்? அந்த அளவுக்குத் துணிச்சல்மிக்க அதிகாரிகள்தான் இருக்கிறார்களா?
‘‘கண்டனத்தைத் தாங்கிக்கொள்ளும் திடமனம் இல்லை என்றால், கடமையை நிறைவேற்ற முடியாது’’ என்றார் அண்ணா. ஆம்... உண்மைதான். இன்று எவரும் கடமையை நிறைவேற்றுகிறார்களோ இல்லையோ, கண்டனத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள்.
எதையும் தாங்கும் இதயம் வேண்டும்.
- அபிரா

'தமிழுக்காக மகளிடம் உரையாடிய தந்தை!' - மறைமலை அடிகள் நினைவு தினச் சிறப்புப் பகிர்வு

(இந்தக் கட்டுரை 15-09-16 அன்று, 'விகடன்' இணையதளத்தில் வெளியானது.)

‘‘என் புத்தகங்களை மொத்தமாகப் படித்தால்... ஒருவர் தமிழின் சுவையை அறியலாம்’’ என்று துணிச்சலாய்ச் சொன்னவர் மறைமலை அடிகள். ஒருவர், எதன்மீது காதல்கொள்கிறாரோ... அவர், அதன் முக்கியத்துவத்தை உணர முடியும். அதனால்தான் என்னவோ தெரியவில்லை, தமிழ் மொழியின்மீது தீராத காதல்கொண்டு, தனித்தமிழ் இயக்கத்தை ஆரம்பித்து தமிழ்மொழிக்கு தன்னிகரில்லாத் தொண்டாற்றியவர் மறைமலையடிகள். அதன் பயனாகத்தான் இன்று நமது தமிழ், செம்மொழி தகுதியைப் பெற்றிருக்கிறது.
‘மும்மணிக் கோவை’ பாடினார்!
‘‘அடிகளே தென்னாடு... தென்னாடே அடிகள்’’ என்று தமிழ்த்தென்றல் திரு.வி.க-வால் புகழப்பட்ட மறைமலை அடிகள், தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மும்மொழிகளில் புலமை பெற்றவர். 4 ஆயிரம் நூல்களுடன் தன் வீட்டிலேயே நூலகம் ஒன்றை அமைத்தவர்; தமிழையும் சைவத்தையும் இரு கண்களாகக் கொண்டவர்... இப்படித் தமிழுக்காக வாழ்ந்த மறைமலை அடிகள், நாகை மாவட்டம் காடம்பாடி எனும் சிற்றூரில் 1876-ம் ஆண்டு ஜூலை 15-ஆம் நாள் சொக்கநாத பிள்ளை - சின்னம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். அவரது இயற்பெயர் சாமி வேதாச்சலம். தன்னுடன் சிறுவயது முதல் பழகிய செளந்திர வள்ளியம்மை என்ற பெண்ணை, மிகவும் இளம் வயதிலேயே திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு 7 குழந்தைகள் பிறந்தன. தன்னுடைய 22-வது வயதில் கடும்சூலை நோயால் பாதிக்கப்பட்டார். அப்போது, திருவொற்றியூர் முருகன் மீது பக்திகொண்டு, ‘மும்மணிக் கோவை’ பாடினார். அதன் பயனாக, முருகப் பெருமான் அவர் நோயைக் குணமாக்கினார். ‘மும்மணிக் கோவை’யில் உள்ள புலவராற்றுப் படை என்னும் பாடல் நீண்ட ஆசிரியப்பாவால் ஆனது.

மகளிடம் நடத்திய உரையாடல்!
‘‘பெற்றதாய்தனை மகமறந்தாலும்
பிள்ளையைப் பெற்றதாய் மறந்தாலும்;
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரைமேவிய உடல் மறந்தாலும்;
கற்ற நெஞ்சம் கலைமறந்தாலும்
கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்;
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே!’’''
- என்கிற பாடலை மகள் நீலாம்பிகை பாட... தந்தை சாமி வேதாச்சலம் கேட்டுக்கொண்டிருந்தார். அப்போது, அந்தப் பாடல் அவரை நெருடியதால், ‘‘நீலா... இனிமையான இந்தத் தமிழ்ப் பாட்டில் ஒரே ஒரு சமஸ்கிருதச் சொல் இருக்கிறது. ‘உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்’ என்ற இடத்தில் ‘தேகம்’ என்பதை நீக்கிவிட்டு, ‘உடம்பாகிய யாக்கை’ என்று போட்டால் ஓசை இன்பம் அழகாக இருக்கும். பிறமொழிச் சொற்கள் கலப்பதால் தமிழின் இனிமை குன்றுகிறது’’ என்றார் சாமி வேதாச்சலம்.
‘‘அப்படியானால் நாம் பிறமொழிச் சொற்களை நீக்கித் தனித்தமிழிலேயே பேசுதல் வேண்டும்’’ என்று 13 வயதே ஆன மகள் நீலாம்பிகை சொல்ல... அன்றுமுதல் தனித்தமிழ் இயக்கத்துக்கான விதையை மண்ணில் விதைத்தார் சாமி வேதாச்சலம். தன்னுடைய வாழ்க்கை முழுவதையும் தினந்தோறும் நாட்குறிப்பாக எழுதிவைத்தவர் மறைமலை அடிகள். இவை, ஆங்கிலத்தில் எழுதப்பட்டு உள்ளன. ‘‘என் நினைவு, பேச்சு, எழுத்து யாவும் தமிழாக உள்ளன. ஆங்கிலத்தில் எனக்குள்ள பயிற்சிக்குத் தொடர்பு வேண்டுமல்லவா, அதற்காக ஆங்கிலத்தில் எழுதுகிறேன்’’ என்று விளக்கம் அளிக்கும் அளவுக்கு ஆங்கில அறிவு படைத்தவர். ஆங்கிலம், சமஸ்கிருதம் போன்ற மொழிகள் மீதான வெறுப்பால், அறியாமையால் தோன்றியது அல்ல... அவருடைய தனித்தமிழ் இயக்கம். தமிழ் மீதான தணியாத காதலால் மலர்ந்தது.
‘‘எல்லா உறுப்புகளும் அமைந்த அழகான ஓர் உடம்பில் அந்த உறுப்புகளை வெட்டி எறிந்துவிட்டு, மண்ணாலும், மரத்தாலும் செயற்கையாக அந்த உறுப்புகளைப்போல் செய்து அவற்றை அதற்கண் ஒட்டவைத்துப் பார்ப்பதற்கு ஒப்பாய் இருக்கிறது... தமிழ்மொழியில் பிறமொழிச் சொற்களைச் சேர்ப்பது’’ என்று தமிழுக்கு விளக்கம் கொடுத்தார் மறைமலை அடிகள்.
பரிதிமாற்கலைஞர் கேட்ட கேள்வி!
மறைமலை அடிகள், சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றுவதற்்காக அந்தக் கல்லூரியில் பணிபுரிந்த பரிதிமாற்கலைஞரைச் சந்திக்கச் சென்றார். அப்போது அவர், ‘‘குற்றியலுகரத்துக்கு எடுத்துக்காட்டு சொல்லுங்கள்’’ என்று கேள்வி கேட்டார். ‘‘அஃது எனக்குத் தெரியாது’’ என்றார் மறைமலை அடிகள். ‘‘நீங்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்டீர்கள்’’ என்றார் பரிதிமாற்கலைஞர். ‘‘தெரியாது’’ என்று சொல்பவரை, ‘‘எப்படித் தேர்வு செய்யலாம்’’ என்று மற்ற உறுப்பினர்கள் கேட்டபோது, ‘‘ ‘அஃது’ என்பது, ஆயுதத் தொடர் குற்றியலுகரம். ‘எனக்கு’ என்பது, வன்தொடர்க் குற்றியலுகரம். ‘தெரியாது’ என்பது, உயிர்த்தொடர் குற்றியலுகரம்’’ என்று பதிலளித்தார் பரிதிமாற்கலைஞர். வேலை கிடைத்துவிட்டபோதிலும் பரிதிமாற்கலைஞரையே கேள்வி கேட்டு வியக்கவைத்தவர் மறைமலை அடிகள்.
மாநாட்டில் கலந்துகொள்ள மறுப்பு!
1933-ல் சென்னைப் புத்தகாலயப் பிரசார சங்கத்தார் ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தனர். அதில், கலந்துகொள்ளுமாறு மறைமலை அடிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதற்கு மறுப்புத் தெரிவித்துக் கடிதம் எழுதினார் அடிகள். அதில், ‘‘தூய தமிழை வளர்க்க விரும்பாத எந்தத் தமிழ்க் கூட்டத்திலும் கலந்துகொள்வதற்கு எமது மனம் இடம் தரவில்லை. பண்பட்ட பழைய மொழிகள் எல்லாவற்றிலும் தமிழ்மொழி ஒன்றுதான் இன்னும் தன் பண்டைய நலம்சார்ந்த புகழோடு வாழ்கிறது. பிறமொழிக் கலப்பு அதன் தூய தன்மையினைக் கெடுக்கும் என்றும், அதன் வளர்ச்சியினை குன்றச் செய்யும் என்றும் யாம் உறுதியாக நம்புகிறோம். ஆதலால், எமது தனித்தமிழ்க் கொள்கையினைக் கடைப்பிடிக்காத உங்களுடைய மாநாட்டிலே கலந்துகொள்ள முடியாமையினைப் பொறுத்துக்கொள்வீர்களாக’’ என்று எழுதியிருந்தார். இதன்மூலம் அவர் தமிழ் வளர்ச்சிக்கு எங்ஙனம் விளங்கினார் என்பதைக் காணமுடிகிறது.
16-9-1943 அன்று அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உரையாற்றியபோது... ஒருவர், ‘‘திராவிட நாடு பற்றி தங்கள் கருத்து யாது’’ எனக் கேள்வி கேட்டார். அதற்கு அடிகள், ‘‘இந்தியா முழுவதுமே திராவிட நாடுதான்’’ என்றார்.
தனித்தமிழ் இயக்கம்!
‘ஆங்கிலமும், சமஸ்கிருதமும் கட்டாயம் படிக்க வேண்டும். தாய்மொழிப் பாடத்தை விருப்பப்பாடமாக கற்றால் போதும்’ என்று சென்னைப் பல்கலைக்கழகம் தீர்மானம் போட்டபோது, 11 ஆண்டு காலம் பணியில் இருந்த மறைமலை அடிகளார், அதை எதிர்த்துத் தன்னுடைய பணியில் இருந்து விலகினார். ஆங்கிலம், சமஸ்கிருதம் போன்ற மொழிகள் தமிழில் பரவிக் கிடந்ததை உணர்ந்து வருந்திய மறைமலை அடிகள், அதிலிருந்து தமிழை மீட்க முடிவெடுத்தார். வெறும் பேச்சால் மட்டுமே கொள்கைகளைப் பரப்பிவிட முடியாது என்ற தெளிவும் அவரிடம் இருந்ததால்தான் அதற்கு ஒரு முன்னுதாரணமாகச் செயல்படவும் தொடங்கினார். 1916-ல் தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கினார். தனித்தமிழ் இயக்கத்தின் காரணமாக அந்தக் காலகட்டத்தில் வழக்கத்திலிருந்த பல வடமொழிச் சொற்கள் வழக்கொழிந்துபோயின. இந்தச் சமயத்தில்தான் தன் பெயரை, ‘மறைமலை அடிகள்’ (வேதம் - மறை, அசலம் - மலை, சுவாமி - அடிகள்) என்று மாற்றிக்கொண்டார். அவரைப் பின்பற்றிப் பல தமிழர்கள் தங்களுக்குத் தூய தமிழில் பெயர் சூட்டிக்கொண்டனர்.
காஞ்சி மடாதிபதியின் அறிவிப்பு!
முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை போன்ற நூல்களுக்கு எளிய முறையில் தமிழில் உரை எழுதினார். வடமொழியில் காளிதாசன் படைத்த, ‘சாகுந்தலம்’ எனும் காவியத்தைத் தமிழில் மொழிபெயர்த்தார். இதைப் படித்த காஞ்சி மடாதிபதி சந்திரசேகர ஸ்வாமிகள், ‘‘இதுபற்றி சிறந்த கட்டுரை எழுதும் மாணவர்களுக்கு ரூ.100 பரிசு தரப்படும்’’ என்று 1957-ல் அறிவித்தார். மகா பெரியவரையே மயக்கிய நூல் அது.
‘இந்தி பொது மொழியா?’
மொழிக்கலப்பு தமிழ் மொழிக்குப் பாதிப்பாக அமையும் என்று நம்பிய அவர், தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு இந்தி மொழி தடையாக இருக்கக் கூடாது என்பதில் கவனம் செலுத்தினார். 1937-ல், இந்தி மொழி கட்டாயமாக்கப்பட்டபோது, சென்னை சைதாப்பேட்டையில் நடந்த இந்தி எதிர்ப்பு மாநாட்டுக்கு மறைமலை அடிகளே தலைமை தாங்கினார். ‘இந்தி பொது மொழியா?’ எனப் புத்தகம் எழுதினார். அதன் பொருட்டு நடந்த மறியலில் மகன் மறை திருநாவுக்கரசு போராட்டத்தில் ஈடுபட முயன்றபோது அவருடைய தாய் தடுத்தார். ‘‘தமிழ் காக்க நாம் அல்லவா சிறை அனுப்ப வேண்டும். வேலை போய்விட்டால் என்ன, வேறு வேலை கிடைக்காமலா போய்விடும்? சிவபெருமான் கைவிட மாட்டார்’’ என்று அனுப்பிவைத்தார். இந்தி மொழி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறைக்குச் சென்றார். ஆங்கில மொழி அறிவும் அவசியம் என்பதை அவர் உணர்ந்திருந்தார். ‘‘ஆங்கில மொழியில் உள்ள நல்ல நூல்களைப் படித்தறியவும், நல்ல தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கவும் ஆங்கில அறிவு அவசியம்’’ என்றார்.
இலக்கியம், மறைபொருளியல், மருத்துவம், சங்க இலக்கிய ஆய்வு, புதினம், பாடல், நாடகம், கடிதம், கட்டுரை, தத்துவம், வரலாறு, சமூகவியல் எனப் பலவகைகளில் 50-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி தமிழுலகுக்கு அளித்துள்ளார். சைவச் சித்தாந்த கொள்கை நெறி குறித்து கேள்வி எழுந்தபோது, ‘‘சைவத் திருமறைகள் 12-ம், மெய்க்கண்ட நூல்கள் 14-ம் அவற்றுக்கு மாறுபடாமல் அவற்றைத் தழுவிச் செல்லும் ஏனைய பிற நூல்களுமே சைவச் சித்தாந்த அடிப்படை முதன்மை நூல்களாக விளங்குகின்றன’’ என்று மறைமலை அடிகளார் தெரிவித்துள்ளார்.
திரு.வி.க. புகழுரை!
‘‘மறைமலை ஒரு பெரும் அறிவுக்கடல். தமிழ் நிலவு, சைவவான் அவற்றை நக்கீரரும் பிற்றைச் சிவஞான முனிவரும் ஓர் உருக்கொண்டு சிற்றை மறைமலையடிகளராகத் தோன்றித் தமிழ் வளர்க்கிறார்’’ என்று திரு.வி.க., மறைமலை அடிகளாரைப் புகழ்ந்துள்ளார்.
‘‘மறைமலையடிகளும், கா.சு.பிள்ளையும் என் வலக்கையும் இடக்கையும் போன்றவர்கள்’’ என்றார் தந்தை பெரியார்.
‘தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை’ என்று அழைக்கப்பட்ட மறைமலை அடிகள், 1950-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் காலமானார். மறைமலை அடிகள் தனித்தமிழ் கண்ட நாட்டில்தான், தமிழில் பேசுவதையே கேவலமாக நினைக்கும் காலம் உருவாகிவிட்டது.
‘‘தமிழில் பிறமொழிக் கலப்பை ஒதுக்கித் தள்ளுங்கள். தமிழின் சுவையை மாற்றாதீர்கள்... வல்லோசைகளைப் பெருக்காதீர்கள்’’ என்கிற மறைமலை அடிகளாரின் கூற்றுப்படி தமிழை வளர்ப்போம்.
- ஜெ.பிரகாஷ்

Thursday, September 8, 2016

அதிகரிக்கும் பள்ளி வாகன விபத்துகள்... தடுப்பது யார்?

குழந்தைகளின் சிந்தனைக் கூடாரம் பள்ளிக்கூடம். ஆனால், அந்தக் கூடாரத்துக்குக் குழந்தைகளை அழைத்துச் செல்லும் பள்ளி வாகனங்களோ சேதாரம்.
கடந்த 2012-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பள்ளிப்பேருந்தில் இருந்த பெரிய துளை வழியே சாலையில் விழுந்து இறந்துபோனார் மாணவி ஸ்ருதி. இதனையடுத்து, உச்ச நீதிமன்றம் பள்ளிக்கூட வாகனங்களின் பாதுகாப்புத் தொடர்பாக பள்ளி வாகனங்களில் மஞ்சள் நிற வர்ணம் அடிக்க வேண்டும்; பள்ளி வாகனம் என எழுதப்பட்டிருக்க வேண்டும். முதலுதவிப் பெட்டி, வேகக் கட்டுப்பாட்டுக் கருவி, அவசர வழி ஆகியவை பொருத்தப்பட வேண்டும்; பேருந்தில் கண்டக்டர் இருக்க வேண்டும்; மூன்று மாதங்களுக்கு ஒருமுறை எஃப்சி காட்டவேண்டும் எனச் சில வழிமுறைகளை அமல்படுத்த ஆணை பிறப்பித்திருந்தது. இந்த வழிகாட்டுதலை அந்தந்த மாநில அரசுகள், மோட்டார் வாகனச் சட்டத்தில் இணைக்கவும் அறிவுறுத்தியிருந்தது. இதைக் கேரளா உள்ளிட்ட சில மாநிலங்கள்தான் உடனடியாகச் செய்தன. ஆனால், தமிழக அரசோ அதை இதுவரை செய்யவில்லை. பள்ளி நிர்வாகங்களும், ஆர்.டி.ஓ அலுவலக அதிகாரிகளைக் ‘கவனித்து’விடுவதால் அவர்களும் அக்கறையின்றி இருக்கிறார்கள்.
இதனால் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச்செல்லும் பல வாகனங்கள் முறையாகப் பராமரிக்கப்படாமல், பாதுகாப்பற்ற நிலையில் இருக்கின்றன. நகரங்கள் மற்றும் சின்னஞ்சிறு கிராமங்களில் இயங்கும் சிறு மழலையர் பள்ளிகளுக்கு மாத வாடகைக்கு இயக்கப்படும் வாகனங்களில்தான் இந்த நிலைமை அதிகம் இருக்கிறது. இதனால் அதில் செல்லும் குழந்தைகளின் உயிருக்கும், பாதுகாப்புக்கும் உத்தரவாதம் இல்லை. இதுதவிர, அளவுக்கு அதிகமாகவும் வேன் ஓட்டுநர்கள் குழந்தைகளை ஏற்றிச் செல்வதுடன், வேகமாகச் செல்வதாகவும் புகார்கள் எழுகின்றன.
தமிழகத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளி வாகனங்கள் இயக்கப்படுகின்றன. தனியார் பள்ளி வாகனங்களை இயக்குவதற்கான தூரம் மற்றும் நிறுத்தங்கள் பற்றி எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை. இதனால் 20 கி.மீ. தொலைவில் இருந்தும் குழந்தைகள் அழைத்து வரப்படுகின்றனர். பள்ளி வாகனங்களை இயக்கும் தனியார் பள்ளிகளுக்கு இது லாபமாக இருப்பதோடு, துணைத்தொழிலாகவும் இருக்கிறது.
‘‘சில பள்ளிகளில் சொந்தமாக வேனோ, பஸ்ஸோ வாங்க முடியாத சூழ்நிலை உள்ளது. அதனால் அந்தப் பள்ளி நிர்வாகத்தினர், வேன் வைத்திருக்கும் உரிமையாளர்களிடம் ஓர் ஒப்பந்தத்தைப் போட்டுக்கொண்டு காலை, மாலை என இரண்டுவேளை மட்டும் மாத வாடகைக்குக் குழந்தைகளை அழைத்துச் செல்லும்படி கேட்கிறார்கள். அவர்களும் அந்த இரண்டு சவாரி அடித்த பின்பு மற்ற சவாரிக்குச் சென்றுவிடுகிறார்கள். வேனில் மஞ்சள் நிறத்தை அடித்தால் அது பள்ளி வாகனமாக மாறிவிடும். இதனால் வேற எந்த சவாரிக்கும் செல்லமுடியாது. ஆர்.டி.ஓ அலுவலகங்களோ, காவல் துறையோ இதுபற்றிக் கண்டுகொள்வதில்லை. சாலைகள் சரியில்லாத காரணத்தாலும், டீசல் விலை அதிகரிப்பாலும் ஒரே நேரத்தில் அதிகமான குழந்தைகளை ஏற்றிச் செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகிறது’’ என்கிறார்கள் பள்ளி வாடகைக்கு வேன் ஓட்டும் டிரைவர்கள்.
''பள்ளி வாகனங்களை, பள்ளியில் நிறுத்திவைப்பதில்லை!''
‘‘மழலையர் பள்ளி ஒன்றில் படித்துவரும் எல்.கே.ஜி மாணவி ஒருவருக்கு மதியவேளையின்போது, திடீரென்று வலிப்பு ஏற்பட்டது. அவரை, உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு ஸ்கூல் வாகனத்தைத் தேடினார்கள். ஆனால், அந்த வாகனம் வேறொரு சவாரிக்குச் சென்றிருந்தது. பின்பு, ஆம்புலன்ஸுக்கு போன் செய்து மாணவியை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார்கள். ஸ்கூல் முடியும்வரை பள்ளி வாகனங்களை, பள்ளியிலேயே நிறுத்திவைக்காததன் விளைவுதான் இதுபோன்ற விபரீதங்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. வேனில், பாதுகாப்புக் குறைவாக உள்ளது என்று எல்லாக் குழந்தைகளின் பெற்றோர்களும் கேட்க வேண்டும். அவர்கள் யாரும் அப்படிக் கேட்பதில்லை. தனிப்பட்ட முறையில் பெற்றோர் யாராவது கேட்டால், ‘உங்கள் குழந்தையை நீங்களே பாதுகாப்பாக அழைத்துக்கொண்டு வாருங்கள்’ என்கிறார்கள். இதனால் பள்ளி நிர்வாகத்திடம் எதுவுமே பேச முடிவதில்லை. தனியார் கல்லூரிப் பேருந்துகள்கூட ஏசி வசதி செய்யப்பட்டு முறையான பராமரிப்புடன் செல்கின்றன. அந்தப் பேருந்துகளின் கதவைத் திறந்துவிடுவதற்கும், மூடுவதற்கும் கிளினர்கள் இருக்கிறார்கள். ஆனால், விவரம் தெரியாத குழந்தைகளை அழைத்துச் செல்லும் பள்ளி வேன்களில் கிளினர்களோ, ஆயாக்களோ இருப்பதில்லை. குழந்தைகளே கதவைத் திறந்துகொண்டு இறங்குகின்றனர். வேனில் இருந்து இறங்கிய குழந்தைகள், வேனைவிட்டுத் தள்ளிச் சென்றுவிட்டனவா என்றுகூட டிரைவர்கள் பார்ப்பதில்லை’’ என்று புலம்புகின்றனர் பெற்றோர்கள்.
‘‘அரசுப் பேருந்துகள் எதற்கும் இன்சூரன்ஸே இல்லை!’’
இதுகுறித்து தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் கே.ஆர்.நந்தகுமாரிடம் பேசினோம். ‘‘மூன்று மாதங்களுக்கு ஒருமுறை என, வருடத்துக்கு நான்கு தடவை எஃப்.சி செய்யவேண்டும் என்பதால், ஒவ்வொரு முறையும் ஆர்.டி.ஓ அலுவலகங்களுக்கு ரூ.10 ஆயிரம் கொடுக்க வேண்டியிருக்கிறது. பணம் கொடுக்கவில்லை என்றால் எஃப்.சி செய்யமாட்டார்கள். இதுபோல் இந்தியாவில் எங்கும் இல்லை. தமிழகத்தில் மட்டும்தான் உள்ளது. பள்ளிக்கூட வாகனங்களுக்கு கண்டக்டர் அவசியம் இல்லை. வெறும் கிளீனர் மட்டும் இருந்தால் போதும். அவர்கள் சொல்லும் அளவுக்கு படிக்கட்டுகளைவைத்தால், சாலையில் உள்ள வேகத்தடையில் ஏறி இறங்கும்போது வாகனம் சேதமடைகிறது. இது சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தனியார் ஒப்பந்த வாகனங்களுக்கு பள்ளிக்கூட லைசென்ஸ் இல்லை. ஆகையால், இதில் விபத்து ஏற்பட்டால் அது அந்த வாகன உரிமையாளர்களையே சாரும். அவர்கள்தான் அதற்கு முழுப் பொறுப்பும் ஏற்கவேண்டும். கோர்ட் அறிவித்துள்ள இந்த விதிமுறைகள் பள்ளி வாகனங்களுக்கு மட்டும்தான். மற்ற வாகனங்களுக்கு அல்ல. இதுகுறித்து எந்த அதிகாரிகளும் கேட்கமாட்டார்கள். காரணம், அரசுப் பேருந்துகளுக்கு டாக்ஸ், இன்சூரன்ஸ், ஸ்டெஃப்னி போன்ற எதுவும் இல்லை. முக்கியமாக, அரசுப் பேருந்துகள் எதற்கும் இன்சூரன்ஸே இல்லை. அரசுப் பேருந்துகளில் ஓவர் லோடு ஏற்றி எத்தனையோ பள்ளிக் குழந்தைகள் இறந்திருக்கின்றனர்... இப்படி ஆயிரம் கேள்விகளை அவர்கள் கேட்பார்கள்’’ என்றார்.
‘‘அக்கறையின்மையை காட்டுகிறது!’’
பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, ‘‘இந்த விஷயத்தில் குழந்தைகள் மீது பள்ளிக்கூடம் போதிய கவனம் செலுத்தவில்லை என்கிற அக்கறையின்மையை காட்டுகிறது. இதுகுறித்து பெற்றோர் - ஆசிரியர் கூட்டத்தில் சொல்லப்பட வேண்டும். பள்ளிக்கூட வாயிலில் அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட வேண்டும். போக்குவரத்துத் துறையும், பள்ளிக்கல்வித் துறையும் பள்ளி வாகனங்களை ஆய்வுசெய்து அதை ஓர் அறிக்கையாகப் பள்ளி தொடங்குமுன் வெளியிட வேண்டும். தனியார் வாகன ஒப்பந்த உரிமையாளர்களையும் அழைத்து இதுபோன்ற விதிமுறைகளைப் போக்குவரத்துத் துறை அறிவுறுத்த வேண்டும். பள்ளிக் குழந்தைகளை ஏற்றக்கூடிய வாகனங்கள் பள்ளியின் பெயரில் இல்லாவிட்டாலும் (ஒப்பந்ததாரர் பெயரில் இருந்தாலும்) அதற்குப் பள்ளிக்கூடம்தான் பொறுப்பேற்க வேண்டும். இதற்கான முறையான அறிவிப்பை பள்ளிக்கல்வித் துறை அனைத்துப் பள்ளிகளுக்கும் கொடுக்க வேண்டும். வாகன ஒப்பந்ததாரர், குழந்தைகளைக் கொண்டுவந்து இறக்கிவிடுகிறார் என்றால்கூட, பள்ளி நிர்வாகம் அவர் எத்தனை குழந்தைகளை இறக்கிவிடுகிறார்; நம் பள்ளிக்கு மட்டும் ஏற்றிவருகிறாரா? என்பதைக் கண்காணிக்க வேண்டும். அப்படிச் செய்தால் இதுபோன்று செய்யக் கூடாது என்று அறிவுறுத்த வேண்டும்.
‘‘கல்விக்குழு ஆய்வு நடத்த வேண்டும்!’’
குழந்தைகளின் நலனைக் கருதி பள்ளி வாகனங்களில் இதுபோன்ற விதிமுறைகள் இருக்கிறதா என்பதைப் பெற்றோர்களுக்கும் அறிவுறுத்த வேண்டும். அப்படிப்பட்ட வாகனங்கள்தான் வருகின்றனவா என்பதை அவர்களும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். அப்படி இல்லாத வாகனங்களில் குழந்தைகளை அனுப்பமாட்டோம் என்று பெற்றோர்கள் கண்டிப்புடன் நடந்துகொள்ள வேண்டும். வீட்டுக்கு அருகில் உள்ள பள்ளிக்கூடங்களில் குழந்தைகளைச் சேர்ப்பதே இதற்கு முதல் பாதுகாப்பு. அப்படி இல்லை என்றால், குழந்தைகள் எப்படி வருவார்கள் என்பதைப் பள்ளி நிர்வாகத்திடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். பள்ளி வாகனத்தில் வரவில்லை என்றால் வேறு எந்த வாகனத்தில் வருகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். இதற்கு, கல்வியாளர்களைக் கொண்ட கல்விக் குழு சொன்ன பரிந்துரை, வீட்டுக்கு அருகாமையில் இருக்கும் பள்ளிக்கூடமே மிகச் சிறந்த பாதுகாப்பு. அரசாங்கம், ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு புவியியல் எல்லையை வரையறுத்துக் கொடுக்க வேண்டும். இந்த நடவடிக்கையை எடுக்க அரசு என்று முன்வருகிறதோ அன்றுதான் குழந்தைகளுக்கு மெய்யான பாதுகாப்பு. ஆய்வுகளை மேற்கொள்ள அமைக்கப்பட்ட கல்விக்குழுவும் அவ்வப்போது சென்று ஆய்வு நடத்த வேண்டும்.’’ என்றார்.
போக்குவரத்துத் துறையில் விசாரித்தபோது, ‘‘இதுதொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கிறது’’ என்று முடித்துக்கொண்டார்கள்.
‘பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட வேண்டும்’ என்பதே ஓங்கி ஒலிக்கப்படும் குரல்.
2016-ம் ஆண்டில் நடந்த பள்ளி வாகன விபத்துகள்!
1. ஜூன்-1: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பள்ளி வாகனம் கவிழ்ந்ததில் 18 பேர் படுகாயம்.
2. ஜூன்-8: திருப்பூர் விஜயாபுரம் அருகே பள்ளி வாகனம் கவிழ்ந்ததில் 22 குழந்தைகள் காயம்.
3. ஜூன்-8: மதுரை மாவட்டம் மேலூர் அருகே பள்ளி வாகனம் கவிழ்ந்ததில் 10 குழந்தைகள் காயம்.
4. ஜூன்-10: சிதம்பரம் தீத்தாம்பாளையம் அருகே பள்ளி வாகனம் கவிழ்ந்ததில் 4 மாணவர்கள் படுகாயம்.  
5. ஜூன்-14: திருப்பூர் அணைப்புதூர் அருகே பள்ளி வாகனம் மோதியதில் 80 வயது மூதாட்டி இறந்துபோனார்.
6. ஜூன்-15: காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு - குன்றத்தூர் இடையே 3 வயது கவிநிலா, பள்ளி வாகனத்தில் இருந்து இறங்கி வீட்டுக்குச் சென்றபோது, அதே வாகனத்தின் சக்கரம் ஏறி பரிதாபமாக உயிரிழந்தார்.
 ஜெ.பிரகாஷ்

‘‘ப்ளீஸ்... எங்களை விட்ருங்களேன்!’' - தொடரும் கொலைகள்... ஒரு பெண்ணின் குரல்!

(இந்தக் கட்டுரை 02-09-16 அன்று, 'விகடன்' இணையதளத்தில் வெளியானது.)

‘‘ஒரு காலத்தில் வீட்டுக்குள் அடைபட்டுக் கிடந்த எங்களை வெளியில் அழைத்துவந்து சிறகுகொடுத்து பறக்கச் செய்த ஆண் சிங்கங்களே... முதலில் உங்களுக்குத் தலைவணங்குகிறோம்.
காலம் மாறிவிட்டது... கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதைப்போல உங்கள் அளவுக்கு கடவுள் எங்களை வலிமையாய்ப் படைக்கவில்லை. ஆனாலும், உங்களுடன் போட்டி போடும் அளவுக்கு நாங்கள் வளர்ந்துவிட்டோம் என்பதே சாதனைதான். இதற்குக் காரணம், எங்களுடைய அறிவு, திறமை, விடாமுயற்சி மட்டுமல்ல... அதையும் தாண்டி, ஒரு தந்தையாய், சகோதரனாய், உறவினராய், நண்பனாய், கணவனாய், காதலனாய் என எங்களுக்குப் பக்கபலமாகவும், பாதுகாப்பாகவும் இருப்பது நீங்கள்தானே. இப்படி எல்லா வழிகளிலும் எங்களை மெருகேற்றிப் பார்க்கும் நீங்கள், எங்கள் உள்ளத்தை மட்டும் பார்க்காமல்போவது ஏன்? காதல் என்ற மூன்றெழுத்து மந்திரச் சொல் உங்களுக்குள் ஊடுருவி வெற்றிபெற்றால், உலகையே உங்கள் காலடிக்குள் கொண்டு வந்துவிடுவீர்கள். அது சற்றுத் தோல்வியைத் தழுவினால், மதம்பிடித்த யானையாய் மாறிச் செய்வதறியாமல் செய்து சின்னாபின்னமாகி விடுகிறீர்கள்.
உங்களைப்போன்றே எங்களுக்கும் உள்ளம் இருக்கிறது. அதில், எத்தனை கனவுகளை நாங்கள் சுமந்துகொண்டிருக்கிறோம் என்று என்றாவது நீங்கள் எண்ணியிருப்பீர்களா? பெற்றவளுக்குத்தான் தெரியும் வலியின் விலை என்னவென்று? அதுபோல், எங்கள் மனதில் என்ன இருக்கிறது என்று எங்களுக்குத்தான் தெரியும். பெற்றெடுத்துப் பெயர்வைத்த அன்னையிடம் அன்பைப் பெற்றிருக்கிறோம்; தோளில் போட்டுத் தூக்கிச்சென்ற தந்தையிடம் துணிவை வாங்கியிருக்கிறோம்; சண்டைபோடும் சகோதரனிடம் பாசத்தை அடகுவைத்திருக்கிறோம்; உறவுவளையத்துக்குள் ஒரு மலராய் மணம் வீசிக்கொண்டிருக்கிறோம்; ஊருக்குள் பட்டாம்பூச்சியாய் சிறகடித்துச் சென்றுகொண்டிருக்கிறோம். பல மலர்கள் ஒன்றாய்ச் சேருகிறபோதுதான் மாலையே உருவாகிறது. அந்த மாலைக்குள், நாங்களும் ஒரு மலராய் இருப்பது பெருமைகொள்ள வேண்டிய விஷயம் அல்லவா?
இந்த மலர்கள், எல்லாம் எங்களை உருவாக்க எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்கள்... நாங்கள் என்னவாக வேண்டும் என்று என்ன கனவு கண்டிருப்பார்கள்? தலைசீவி, பொட்டுவைத்து... கேட்டதையெல்லாம் வாங்கிக்கொடுத்து அழகு பார்த்த அந்த மலர்களின் ஆசையை நாங்கள் நிறைவேற்றுவதில் என்ன தவறு இருக்கிறது? படிக்கவைத்து ஆளாக்கிய பெற்றோருக்கு வேலைக்குச் சென்று உதவ வேண்டும் என்று நாங்கள் எண்ணக் கூடாதா... அவர்களுடைய சுக துக்கங்களில் பங்கெடுத்துக்கொள்ளக் கூடாதா... அவர்களின் ஆசைகளை நிறைவேற்றக் கூடாதா... நாங்கள் எப்படி வாழவேண்டும் என்று கனவு காண்பவர்களின் கோட்டையைத் தகர்க்க வேண்டுமா? எந்தப் பெற்றோரும் குழந்தைகள் கெட்டுப்போவதை விரும்பமாட்டார்களே? இந்த உலகத்தில் அவர்களுக்காக ஒருமுறை வாழ வழிவிடுங்களேன்.
இப்படி எண்ணற்ற கனவுகளுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் எங்களைப் புரிந்துகொள்ளாமல், ‘ஒருதலை காதல்’ என்ற பெயரில் உங்களையும் அழித்துக்கொள்வதோடு எங்களையும் அழித்துவிடுகிறீர்கள். ஆசிட் வீசுவதும், அடித்துக் கொல்வதும், கத்தியால் குத்துவதுமா வாழ்க்கை? அறிவற்ற மனிதர்கள்தான் ஆணவக் கொலைக்காக அரிவாள், கத்தி தூக்குகின்றனர். ஆனால், அதைவிடக் கொடுமை ஒருதலை காதலுக்காக உருட்டுக்கட்டைகூட ஆயுதமாகிவிட்டது என்பது வேதனையாக இருக்கிறது. கறந்தபால் காம்பில் ஏறாது... உடைந்த சங்கு ஊத வராது. என்பதைப்போல் போன உயிர் திரும்ப வராது. இதுதான் வாழ்க்கையின் அத்தியாயம். ‘பார்க்கிறோம்.... பழகுகிறோம்’ என்பதையெல்லாம் நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டால் காதலுக்கும், நட்புக்கும் என்ன வித்தியாசம்?
எங்கள் பின்னால் தொடர்ந்து வருவதும், தூரத்தில் நின்று பார்ப்பதும், தொல்லை கொடுப்பதுமா நாகரிகம்? ஒருத்தி, ‘உங்களைப் பிடிக்கவில்லை’, ‘உங்கள் காதலை ஏற்கவில்லை’ என்பதற்காக அவளைக் கொலை செய்வதுதான் உங்களின் எண்ணமா? அவளைத் தவிர, உலகத்தில் வேறு எந்தப் பெண்களும் இல்லையா? ‘எங்களுக்கும் இப்படிப்பட்ட கணவன் வரவேண்டும்’ என்கிற ஆசை இருக்கிறது. ஒருவேளை, உங்கள் காதலையே நாங்கள் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், ‘இவன் நமக்குச் சரிப்பட்டு வருவானா...’ ‘நம் வாழ்க்கை நன்றாக அமையுமா’ என்கிற கேள்விகளுக்கு விடை தேடுவதற்குள்... நீங்களே, எங்களுக்கு ‘விடை’ கொடுத்துவிடுகிறீர்கள்.
நாங்கள் (பள்ளிக்குழந்தைகள்) படித்து உயர்வதாகப் படம் எடுக்கிறார்களோ, இல்லையோ... காதலிப்பதாக எடுத்து காசு பார்த்துவிடுகிறார்கள் திரை நட்சத்திரங்கள். சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு. அதை ரசிக்க வேண்டுமே தவிர, அதன் மோகத்திலேயே வாழக் கூடாது. எதுவும் அறியாத சிறுவயதில், சிந்தனைக் கூடாரத்தை நோக்கிச் செல்லும் எங்களிடம், நீங்கள் காதலைக் கற்றுக்கொடுக்க நினைப்பதால்..
நாங்கள் படிப்பு என்னும் பாவாடை சட்டையை இழப்பதோடு, வாழ்க்கை என்னும் பார்வையையும் இழந்துவிடுகிறோம். ஒலிம்பிக்கில் கலந்துகொண்டவர்களைக்கூட ஒரே வாரத்தில் உலகம் மறந்துவிடும். ஆனால், ஒருதலை காதலால் உயிரைவிட்ட காரைக்கால் வினோதினி, சென்னை ஸ்வாதி, சேலம் வினுப்ரியா, கரூர் சோனாலி, தூத்துக்குடி பிரான்சினா... ஆகியோரை வரலாறு என்றும் மறக்காது.
காதல் என்பது எல்லோருக்கும் உண்டு. அது எல்லா வயதிலும் வருவதில்லை. காதல் வரும் காலத்தில் உங்கள் மீதும் எங்களுக்குக் காதல் இருந்தால் நிச்சயம் காதலிப்போம். அதுவரை இதுபோன்ற விபரீதங்களை ஏற்படுத்தாமல் இருங்கள். ப்ளீஸ்... எங்களை விட்ருங்களேன்.’’
இப்படிக்கு,
உங்களால் வளர்க்கப்படும் மலர்கள்.
- அபிரா

Friday, September 2, 2016

கடந்த ஐந்து வருடங்களில் என்னவெல்லாம் செய்தார் ரோசய்யா?

(இந்தக் கட்டுரை 01-09-16 அன்று, 'விகடன்' இணையதளத்தில் வெளியானது.)

அ.தி.மு.க ஆட்சியில் அடிக்கடி அமைச்சர்கள் மாற்றப்படுவார்கள்... அதிகாரிகள் மாற்றப்படுவார்கள். ஆனால், ஐந்து ஆண்டுகளும் தன் பதவியைவிடாமல் முதல்வர் ஜெயலலிதா மூலம் தக்கவைத்துக்கொண்டவர் யார் என்றால்... அது, ஆளுநர் ரோசய்யாவாகத்தான் இருக்கும். அவரின் சுயசரிதையோடு, அவர் தமிழகத்தில் சாதித்த சாதனைகள் இதோ...

பிறப்பும்... அரசியலும்!
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள விம்மூர் கிராமத்தில் 1933-ம் ஆண்டு, ஜூலை 4-ம் தேதி ஒரு சிறு விவசாயக் குடும்பத்தில் பிறந்த கே.ரோசய்யா, குண்டூரிலுள்ள இந்துக் கல்லூரியில் பி.காம் முடித்தார். 1952-ல் அதே கல்லூரியில் மாணவர் சங்கத்தின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1968-ல் முதல் முறையாக ஆந்திர மாநில சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், அதன் பிறகு 1974 மற்றும் 1980-ம் ஆண்டுகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநிலத் தொழில் துறை உட்கட்டமைப்பு அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவராக 1977 முதல் 1979 வரை பணியாற்றினார். ஆந்திர சட்டப்பேரவை எதிர்க் கட்சித் தலைவராக 1978 முதல் 1979 வரையிலும், பின்பு 1983 முதல் 1985 வரையிலும் இருந்தார். 1979 - 1980-ல் சென்னா ரெட்டி ஆட்சியில் சாலை மற்றும் கட்டடத் துறை அமைச்சராகவும், 1980 - 1981-ல் வீட்டு வசதி மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும், 1982 - 1983-ல் உள்துறை அமைச்சராகவும், 1989 - 1990-ல் நிதி, மின்சாரம், போக்குவரத்து, உயர்கல்வி, கைத்தறி மற்றும் கதர்துறை, சட்டமன்ற செயலகத்துறை அமைச்சராகவும், 1991 - 1992-ல் மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சராகவும், 1992 - 1994-ல் நிதி, மின்சாரம், மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சராக பணியாற்றினார்.

1995 முதல் 1997 வரை ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்தார். 1998-ல் நரசரொபேட் மக்களவைத் தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் ஆட்சியில் நிதி, திட்டம், சட்டமன்றச் செயலகம், மருத்துவம், குடும்பநலத் துறை அமைச்சராகப் பணியாற்றினார். 2009 - 2010 வரை ஆந்திர மாநில முதல்வராகப் பணியாற்றினார். 2011-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு ஆளுநராக பதவி வகித்துவந்தார். கடந்த 31-ம் தேதியுடன் அவருடைய பதவிக்காலம் முடிந்தது. ஆந்திர மாநில பல்கலைக்கழகம், இவருக்கு 2007-ல் முனைவர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. இவருக்கு சிவலட்சுமி என்ற மனைவியும், இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
‘‘ஆளும் கட்சியினருக்கு ஆதரவு!’’
தமிழகத்தின் ஆளுநராக ரோசய்யா பதவியேற்றபோது, ‘‘நேற்றுவரை தீவிர அரசியல்வாதியாக இருந்தேன். இன்று, அரசியல்வாதியாக இல்லாமல் தமிழக கவர்னராகிவிட்டேன். தமிழகத்துக்கு ஓர் ஆலோசகராகவும், நல விரும்பியாகவும் இருப்பேன். அரசியலைமைப்புச் சட்டப்படி தமிழக அரசு செயல்படுவதை உறுதி செய்வதே எனது பணியாகும். தமிழக கவர்னர் என்கிற முறையில் எனது கடமையைச் சட்டப்படி சரிவரச் செய்வேன்.
தேவைப்படும்போது பத்திரிகையாளர்களை அழைத்துக் கலந்துரையாடுவேன்’’ என்று நிருபர்களிடம் பேட்டி அளித்தார். ஆனால், ‘‘அவர் சொன்னபடி நடந்துகொண்டாரோ, இல்லையோ... ஆனால், பதவியேற்ற நாள் முதல் இதுநாள்வரை ஆளும் கட்சியினருக்கு ஆதரவாக நடந்துகொண்டார் என்பதே 100 சதவிகிதம் உண்மை’’ என்கிறார்கள் தமிழக மக்கள்.

தேர்தல் கமிஷன் குட்டு!
வாக்காளர்களுக்குப் பணமும், பரிசுப் பொருட்களும் கொடுத்ததாக எழுந்த புகாரில், நடந்துமுடிந்த சட்டசபைத் தேர்தலுக்கு இரண்டு நாட்கள் முன்பு... அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகளின் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. அப்போது, திடீர் திருப்பமாக கவர்னர் ரோசய்யா, ‘‘இரு தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டால் அந்தத் தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் மாநிலங்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை இழந்துவிடுவார்கள். எனவே, அனைவரின் நலன்கருதி இரு தொகுதிகளிலும் எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாகவும், முடிந்தால் ஜூன் ஒன்றாம் தேதிக்கு முன்பாகவும் தேர்தலை நடத்த வேண்டும்’’ என்று தேர்தல் ஆணையத்துக்குப் பரிந்துரைத்தார். அதாவது, இந்தத் தேர்தல் விஷயத்தில் அ.தி.மு.க-வைவிட அதீத ஆர்வம் காட்டினார் ரோசய்யா. தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளின் தேர்தலையே ரத்துசெய்த தேர்தல் கமிஷன், ‘‘இப்படி கவர்னர் நடந்துகொண்டதைத் தவிர்த்து இருக்கலாம்’’ என ரோசய்யாவுக்கு குட்டும்வைத்தது.

ஜெ-வுடன் நெருக்கம்!
முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திக்கப் போகிறவர்கள், அவரிடம் நெருங்கி நிற்கக் கூடாது; கை குலுக்கக் கூடாது; சால்வை அணிவிக்கக் கூடாது; (கையில்தான் தர வேண்டும்) பொக்கேயைத் தள்ளி நின்றுதான் நீட்டவேண்டும் என
இன்ஸ்ட்ரக்ஷன்கள் தரப்படும். ஆனால், இதையும் மீறி ஜெயலலிதாவின் நெற்றியிலேயே ஒருவர் பொட்டு வைத்திருக்கிறார் என்றால், அது ஆச்சர்யமான விஷயம்தானே. அந்த அதிர்ஷ்டஷாலி வேறு யாருமில்லை. ரோசய்யாவின் மருமகள்தான். மகன் ஸ்ரீமன் நாராயணமூர்த்தியின் மனைவி. ரோசய்யாவின் பேரனும், ஸ்ரீமன் நாராயணமூர்த்தியின் மகனுமான அனிருத்தின் திருமண அழைப்பிதழைத் தருவதற்காக ஸ்ரீமன் நாராயணமூர்த்தியும், அவருடைய மனைவியும் ஜெயலலிதாவை கோட்டையில் சந்தித்தனர். அப்போதுதான் ஜெயலலிதாவின் நெற்றியில் குங்குமம்வைத்தார், ஸ்ரீமன் நாராயணமூர்த்தியின் மனைவி. ஜெயலலிதாவும் ஏற்றுக்கொண்டார். ‘‘அ.தி.மு.க அரசுடன், கவர்னர் ரோசய்யா வெகு இணக்கமாகச் செயல்பட்டதுதான் அந்த அளவுக்குக் காரணம்” என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
கவர்னர்கள் பதவிபறிப்பு!
2014-ல் மத்தியில் பி.ஜே.பி ஆட்சி அமைந்த பிறகு, காங்கிரஸ் ஆட்சியில் நியமிக்கப்பட்ட பல்வேறு மாநில கவர்னர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். ஆனால், காங்கிரஸ்காரரான ரோசய்யா மட்டும் தன்னை மாற்றாத அளவுக்கு பார்த்துக்கொண்டார். ஆந்திர காங்கிரஸ் அமைச்சரவைகளில் பலமுறை மந்திரியாகவும் கடைசியாக முதல்வராகவும் பதவிவகித்தவர் ரோசய்யா. இதனால், 2011-ல் ரோசய்யாவை தமிழக கவர்னராக நியமித்தது, அன்று ஆட்சியில் இருந்த காங்கிரஸ். இந்த நிலையில், பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தபோதும் காங்கிரஸ்காரரான ரோசய்யா மட்டும் விட்டுவைக்கப்பட்டதற்குக் காரணம், ஜெயலலிதாவிடம் அவர் காட்டிய மரியாதைதான்.

எதிர்க் கட்சியும் ரோசய்யாவும்!
தமிழக அமைச்சர்கள் மீது எதிர்க் கட்சிகள் ஆளுநர் ரோசய்யாவிடம் ஊழல் புகார் பட்டியலைத் தந்திருக்கிறார்கள். ஆனால், அதற்கு எந்தவித பதில் நடவடிக்கையும் எடுக்கப்பட இல்லை. அதுபோல், துணைவேந்தர் நியமனத்தில் நடந்த முறைகேடுகள் பற்றி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சொல்ல, அவர் மீது அவதூறு வழக்குப் போட்டார் கவர்னர் ரோசய்யா. இத்தனைக்கும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும், ரோசய்யாவும் காங்கிரஸ்காரர்கள். அந்த அளவுக்கு அ.தி.மு.க பாசக்காரர் ரோசய்யா. அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் ஆளும் கட்சியின் நலனைக் காக்கும் வகையில் செயல்படுவதற்கு இவரின் ராஜபோக வாழ்க்கையும் ஒரு காரணம்.

ஆளுநரின் 4 ஆண்டு செலவு!
மக்களின் வரிப் பணத்தில் ஆளுநர்கள், ஆடம்பர வாழ்க்கையை ராஜபோகமாய் வாழ்கிறார்கள் என்ற விமர்சனம் நீண்டகாலமாக இருந்துவருகிறது. மத்திய அரசின் ரப்பர் ஸ்டாம்பாக, ஏஜென்டாகச் செயல்படும் கவர்னர்களுக்கு அந்தந்த மாநில அரசுகளின் சார்பில் பல கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது. இப்படிச் செய்யப்படும் செலவுகள் கோடிகளைத் தாண்டுகின்றன. 2011 ஆகஸ்ட் மாதம் ஆளுநராக பொறுப்பேற்றுகொண்ட ரோசய்யா, கடந்த நான்கு ஆண்டுகளில் எவ்வளவு செலவு செய்திருக்கிறார் என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் பெற்றிருந்தார் கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் லோகநாதன்.

சென்னை கிண்டியில் அரண்மனைபோல் சகல வசதிகளுடன் இருக்கும் ராஜ்பவனில்தான் ஆளுநர் அலுவலகம், வீடு, ஊழியர்களுக்கான அலுவலகம் மற்றும் குடியிருப்புகள் இருக்கின்றன. இவற்றைப் பராமரிக்க, சீரமைக்க கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.1.27 கோடியும், 2011 ஆகஸ்ட் முதல் 2015 மே வரை மின்கட்டணமாக ரூ.36.24 லட்சமும் செலவாகியிருக்கிறது. மாதம் ஒன்றுக்கு சுமார் 20 ஆயிரம் யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. சராசரியாக மாதம் ஒரு லட்சம் ரூபாயை மின்கட்டணமாகச் செலுத்தி இருக்கிறார்கள். கடுமையான மின்வெட்டு இருந்த காலத்தில்கூட ராஜ்பவனில் மின்சாரப் பயன்பாடு உச்சத்தில் இருந்திருக்கிறது. மெர்சடைஸ் பென்ஸ், ஸ்கோடா சொகுசு கார்கள் உட்பட 4 கார்கள், ஒரு மோட்டார் பைக் கடந்த நான்கு ஆண்டுகளில் புதிதாக வாங்கப்பட்டு இருக்கின்றன. இவற்றின் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய். நான்கு ஆண்டுகளில் பயன்படுத்தப்பட்ட தொலைபேசிக் கட்டணம் சுமார் 36 லட்ச ரூபாய். மாதம்தோறும் 80 ஆயிரம் ரூபாய் அளவுக்குப் பேசியிருக்கிறார்கள். இது தவிர வாகனங்கள் பராமரிப்புச் செலவுகள், ஊழியர்களுக்கான செலவுகள் என லட்சத்தைத் தாண்டியிருக்கிறது. இப்படி, ஆளுநர்கள் ஆளும் கட்சியின் கைப்பாவையாக இருப்பதற்காகவே கவர்னர்களின் செலவுகளுக்கு கரன்சிகளை வாரி இறைத்திருக்கிறார்கள்.

இதுகுறித்து வழக்கறிஞர் லோகநாதன், “கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் ஆளுநரின் பயணத்துக்கு ரூ.1.22 கோடி செலவாகியிருக்கிறது. இதில் உள்நாட்டுப் பயணச் செலவு ரூ.1.20 கோடி. 470 முறை விமானங்களில் பறந்திருக்கிறார் ரோசய்யா. 1,400-க்கும் மேற்பட்ட விழாக்களில் பங்கேற்றுள்ளார். அதில் அரசு விழாக்கள் 15 சதவிகிதம் மட்டுமே. ஆனால், 85 சதவிகிதம் அளவுக்குத் தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறார். இப்படித் தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்க அரசுக்குச் சொந்தமான ஹெலிகாப்டர், கார்கள் உள்ளிட்ட வாகனங்களைப் பயன்படுத்தியிருக்கிறார் ரோசய்யா. தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ஆளுநருக்குக் கிடைத்த பரிசுப் பொருட்கள் எத்தனை, அவை எல்லாம் யார் கணக்கில் சேரும் என்பதையெல்லாம் தகவல் அறியும் சட்டத்தில் கேட்டேன். பதில் கிடைக்கவில்லை’’ என்றார்.
குழந்தைகளுக்குப் போதனை!
‘‘ஆசிரியர்கள் நல்ல சிந்தனை, பரந்த மனப்பான்மை, விட்டுக்கொடுக்கும் குணம் உள்ளிட்ட சிறந்த நற்பண்புகளை சிறுவயது முதலே குழந்தைகளுக்குக் கற்றுத்தர வேண்டும். இந்தப் பண்புகளைக் கல்வி நிலையங்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் குழந்தைகளுக்குப் போதித்து வளர்த்தாலே இந்தியா வல்லரசு நாடாக மாறும்’’ என்று ஒரு கல்வி விழாவில் பேசியிருந்தார். ஆனால், அவர் பதவியில் இருந்தபோதுதான் தமிழகத்தில், சில கொடுமைகளும் நடந்தேறின. சென்னையைச் சேர்ந்த சிறுமி ஒருவர், பள்ளி வாகனத்தில் இருந்த துளை வழியே கீழேவிழுந்து இறந்துபோனாள். அதுமட்டுமல்லாது, எத்தனையோ குழந்தைகள் பாலியல் வன்முறைக்குச் சிக்கிச் சீரழிந்தனர். குழந்தைகள் மது குடித்த கொடுமையும் அவர் பதவியில் இருந்தபோதுதான் அரங்கேறியது.

வைரவிழாவில் கருணாநிதி பெயரைத் தவறவிட்டார்!
தமிழக சட்டப்பேரவை வைரவிழாவின்போது தி.மு.க தலைவர் கருணாநிதியின் பெயரை ரோசய்யா சொல்லவில்லை. இதுதொடர்பாக அப்போது கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், ‘‘வைரவிழாவில் ஆளுநர் ரோசய்யா தமிழக முதல்வராக இருந்தவர்களின் பெயர்களை எல்லாம் வரிசைப்படுத்திச் சொன்னார். ஆனால், என் பெயரை மட்டும் விட்டுவிட்டார். அவர் நல்ல மனிதர். யாருக்கும், எதற்கும் பயப்படாதவர். வேண்டும் என்று விட்டிருக்கமாட்டார்’’ என்று அதில் கூறியிருந்தார்.

திரைப்படத் துறை பிரச்னை!
‘விஸ்வரூபம்’ பட விவகாரம், நாடு தழுவிய அளவில் கவனத்தை ஈர்த்தபோது, தமிழக சட்டப்பேரவையில் இதுதொடர்பாக ஆளுநர் ரோசய்யா தன் உரையில், ‘‘சட்டம் - ஒழுங்குப் பிரச்னைகளைத் திறம்படக் கையாளக் காவல் துறைக்குத் தமது வழிகாட்டுதலை வழங்கி உறுதியான ஆதரவையும், முழுமையான சுதந்திரத்தையும் அளித்துள்ள முதலமைச்சரை நான் வெகுவாகப் பாராட்டுகிறேன். முதலமைச்சரின் உறுதியான, தீர்க்கமான முடிவின் காரணமாக உணர்வுகளைத் தூண்டிவிட்டு அமைதிக்கு குந்தகம் விளைவிக்கக்கூடிய ‘டேம் 999’, போன்ற திரைப்படங்கள் உரிய தருணத்தில் தடைசெய்யப்பட்டதால், பெரும் பாதிப்புக்கு இட்டுச் சென்றிருக்கக்கூடிய சட்டம் - ஒழுங்குப் பிரச்னைகள் எதுவும் மாநிலத்தில் எழாமல் தடுக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற திரைப்படங்களைத் தயாரிக்கும்போது, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவர்களுடைய உணர்வுகள் புண்படாதவகையில் உருவாக்கப்பட வேண்டும் என்று திரைப்படத் தயாரிப்பாளர்களை கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டார். ஆனால், இவருடைய பதவிக்காலத்தில்தான், ‘தலைவா’, ‘கத்தி’ போன்ற திரைப்படங்களும் பிரச்னைக்குள்ளாகின. ‘மனம் புண்படாத வகையில் திரைப்படங்களைத் தயாரிக்க வேண்டும்’ என்றவர் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து, இவரோ அல்லது தமிழக அரசோ பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- ஜெ.பிரகாஷ்