எங்கும் எதிலும் பெண்கள். அவர்கள் இல்லையேல் அகிலம் இல்லை. இன்றைய காலகட்டத்தில் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் கால்பதித்துவிட்டார்கள் என்றே சொல்லலாம். ஆண்களைவிட பெண்கள் வலிமைமிக்கவர்கள் என்பதை அவர்களின் பிரசவ வலியை முன்னுதாரணமாகச் சொல்லலாம். ஒரு பெண்ணின் வாழ்வின் முக்கியக் கட்டம் என்பது அவர் பிரசவிக்கும் காலம். தன் உயிரைப் பணயம் வைத்து குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களை, கிராமப்புறங்களில் `செத்துப்பிழைத்தவள்’ என்று சொல்வார்கள்.
இன்று பல பெண்களிடம், நார்மல் டெலிவரியா... சிசேரியனா? என்று கேட்டால், அதில் முக்கால்வாசி பெண்கள் சொல்வது சிசேரியன்தான் என்று. அந்தக் காலத்தில் சுகப் பிரசவம் அதிகமாய் நடந்ததற்கும், இன்று அது குறைந்துபோய் இருப்பதற்கும் என்ன காரணம்? கிராமப்புறங்களில் ஒரு பெண், குழந்தையைப் பெற்றெடுப்பது என்பது யானையைக் கட்டி இழுப்பதற்குச் சமம் என்பார்கள். அந்த அளவுக்கு அவர்களின் உடலில் வலிமை இருக்கவேண்டும். அதற்கு, முதலில் பொதுவாகப் பெண்கள் பேறுகாலத்தில் ஆரோக்கியமாக இருக்கவேண்டும். உடல்நலத்துக்கு முக்கியத்துவம் தரவேண்டும். இதனால் மனவலிமை அதிகரிப்பதோடு, உடல் வலிமையும் அதிகரிக்கும். இவையனைத்தும் பொதுவானவை. இருந்தாலும் இதைத் தவிர, வேறு உடற்பயிற்சிகளும் இருக்கின்றன என்கிறார்கள் மருத்துவர்கள்.
இன்றைய பெண்கள், மருத்துவர்களிடம் ஆலோசனைகள் கேட்டோ, மருத்துவ சம்பந்தமான புத்தகங்கள் படித்தோ அல்லது இணையதளங்கள் மூலமாகவோதான் பேறுகால விஷயங்களைப் பெறமுடிகிறது. நார்மல் டெலிவரி ஆவதற்கு நம்மால் என்ன செய்ய முடியும் என்பதை இன்றைய பெண்கள் தன் மனதில்வைத்து அதைத் திறம்படச் செய்தால், அவர்களாலும் சுகப் பிரசவம் மூலம் குழந்தைகளைப் பெற்றெடுக்க முடியும். தாய்க்குப் பிரசவ வலி ஏற்பட்டு, கர்ப்பபை வாய் திறந்து, தலை இறங்கிவந்து குழந்தைக்கும், தாய்க்கும் எந்தச் சிக்கல் இல்லாமல் பிரசவிப்பதே சுகப்பிரசவம்.
சுகப்பிரசவம் ஆகாததற்கு காரணங்கள் என்னவென்றும் சுகப்பிரசவம் ஆவதற்கான உடற்பயிற்சிகள் எவையென்றும் வயதான பெண்கள் சிலரிடம் கேட்டோம். ‘‘வறுமை தவிர, அரசாங்கத்தின் அக்கறையின்மையும், மருத்துவமனைகளின் அலட்சியமும் சுகப்பிரசவம் ஆகாததற்கு காரணங்களாக இருக்கின்றன, குறிப்பா இன்றைய பெண்களிடம் சுகப்பிரசவம் சம்பந்தமான விழிப்பு உணர்வு குறைந்திருக்கிறது. இதனால் சுகப்பிரசவம் ஆவது குறைகிறது. இன்றைக்குச் சிறுவயதிலேயே கல்யாணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை அதிகம். பள்ளிக்கூடம் செல்லும்போதே லவ் மேரேஜ் செய்துகொள்கின்றனர். அவர்களின் வயது மிகக் குறைவு. இதனால் பெண்களுக்கு ஊட்டச்சத்து அதிகம் கிடைப்பதில்லை. தாயின் பராமரிப்போ அல்லது பெரியவர்களின் பராமரிப்போ இருப்பதில்லை. வீட்டில் சமைப்பதற்கு சோம்பேறிப் பட்டுக்கொண்டு கடைகளில் வாங்கி உணவை உட்கொள்கின்றனர். மேலும் மருத்துவம், உடற்பயிற்சி சம்பந்தமான விஷயங்களையும் அறிந்துகொள்ள முன்வருவதில்லை. அதிலும் குறிப்பாக நார்மல் டெலிவரி ஆவதற்கான அட்வைஸ்களை யாரிடமும் பெறுவதில்லை. ஜாலியா படத்துக்குப் போவதும், பீச்சுக்கும் போவதும் அவர்களுக்கு சந்தோஷத்தைத் தருமே தவிர, உடலுக்கு ஆரோக்கியத்தைத் தராது. அந்தக் காலத்தில் களை எடுத்தல், நாற்று நட்டல், உரல் இடித்தல் என காட்டிலும், வீட்டிலும் வளைந்து குனிந்து வேலை பார்த்தனர். அவர்களிடம் உடல் உழைப்பு அதிகம் இருந்தது. அதுபோல் இயற்கை சார்ந்த உணவுகளையும் விரும்பிச் சாப்பிட்டனர். ஆனால், இன்று வாய்க்கு ருசியான உணவுகளைச் சாப்பிட்டுவிட்டு உட்கார்ந்தே இருக்கின்றனர். இன்றைய வீட்டு வேலைகளை, கர்ப்பிணிப் பெண்களே செய்ய முன்வர வேண்டும். துணி துவைத்தல், பம்பில் தண்ணீர் இறைத்தல், வீட்டைப் பெருக்கிச் சுத்தம் செய்தல் போன்ற வேலைகளைச் செய்யலாம். காலையும், மாலையும் கட்டாயம் நடக்க வேண்டும். குனிந்து நிமிர்ந்து வேலை செய்யவேண்டும். கர்ப்பிணிப் பெண்கள் முதல் மூன்று மாதங்களில் மல்லாந்து படுக்கவோ, மல்லாந்து படித்திருந்தபடியே எழவோ கூடாது. இந்த மூன்று மாதங்களில் ஒருக்களித்து படுத்தபடி இருப்பது குழந்தைக்கு நல்லது. ஒருக்களித்தபடியே கையை ஊன்றித்தான் எழவேண்டும். அதேபோல, ஒருக்களித்து படுத்திருக்கும்போது அப்படியே அடுத்த பக்கத்துக்குத் திருமபக் கூடாது. எழுந்து உட்கார்ந்த பிறகுதான் அடுத்த பக்கம் ஒருக்களித்து படுக்க வேண்டும். தற்போது சில பெண்களுக்கு சுகப்பிரசவம் என்றால் பயம் ஏற்படுகிறது. முதலில் அதைப் போக்க வேண்டும்’’ என்றனர்.
அந்தக் காலத்தில் கூட்டுக்குடும்பமாய் வாழ்ந்தார்கள். ஆனால், இன்று அப்படி இல்லை. கூட்டுக்குடும்பத்தில் வசித்தபோது வயதான பெண்கள் இருப்பர். அவர்கள் குடும்பத்தில், முதல் முறையாக யாராவது கர்ப்பம் தரிப்பவர்களுக்கு, அவர்கள்தான் ஆலோசகர்களாக இருந்து பல அறிவுரைகளை வழங்குவர். அதுபோக தங்களுக்குத் தெரிந்த மருத்துவத்தையும் செய்வர். உணவு விஷயங்களோடு உடற்பயிற்சி சார்ந்த விஷயங்களையும் எடுத்துச் சொல்வர். ஆனால், இன்று அது தலைகீழாய் மாறிவிட்டது. தேன்கூடாய் இருந்த கூட்டுக்குடும்பங்கள் இன்று குளவிக்கூடாய் ஆகிவிட்டன. வாயில்லா ஜீவன்கள் வீட்டிலும், வயதானவர்கள் முதியோர் இல்லத்திலும் இருக்கும் சூழ்நிலை உருவாகிவிட்டது. அதனால் இன்றைய தலைமுறை பெண்களுக்கு மருத்துவ சம்பந்தமான விஷயங்கள் கிடைப்பது அரிதாகிவிட்டன. பிரசவத்தின்போது சிலருக்கு பிரச்னை ஏற்படுவதாலேயே சுகப்பிரசவத்தைத் தவிர்த்து சிசேரியன் செய்யப்படுவதாக மகப்பேறு மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
இன்றைய காலத்தில் சுகப்பிரசவம் குறைவதற்குக் காரணம் என்னவென்றும் அவர்களுடைய உடற்பயிற்சிகள் குறித்தும் இளைய தலைமுறையினரிடம் பேசினோம். ‘‘அரசு மருத்துவமனைகளில் போதிய வசதிகள் இல்லை. மருத்துவர்கள் ஒழுங்காக வருவதில்லை. பல அரசு மருத்துவர்களே சொந்தமாக கிளினிக்குகளையும் நடத்துவதால், அவர்களிடமே நேரிடையாக வைத்தியம் பார்க்கச் சென்றுவிடுகின்றனர். இதனால் குழந்தை மிகவும் பெரிதாக வளர ஆரம்பிப்பதால் சுகப்பிரசவம் ஏற்படும் வாய்ப்புக் குறைகிறது. சுகப்பிரசவத்தில் வலி அதிகமாக இருக்கும் என்கிறார்கள் சிலர். அதற்குப் பயந்தே சிசேரியனுக்கு ஒப்புக்கொள்கிறார்கள். குழந்தை தலைபுரண்டு கிடப்பதாகவும், பனிக்குடம் உடைந்துவிட்டதாகவும் சிலர் சொல்வதால் சிசேரியனுக்கு சம்மதிக்கிறார்கள். சிசேரியனுக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை செலவாகிறது. இது மருத்துவர்களுக்கு லாபத்தைத் தருகிறது. அதற்காக சிசேரியன் பண்ணவைக்கிறார்கள். குறிப்பாய் இன்று அதிகமான குழந்தை பிறப்புகள் தனியார் மருத்துவமனைகளில்தான் நடக்கின்றன. சமைப்பது, சாப்பிடுவதுகூட எல்லாமே ஹோட்டல்களாக இருப்பதால், வீட்டில் அவ்வளவு வேலை இருப்பதில்லை. ஞாயிற்றுக்கிழமை மட்டும் கொஞ்ச நேரம் வீட்டு வேலைகள் செய்வோம். எல்லா ஆபீஸுகளும் இன்று இயந்திரமயமாகி விட்டதால், அங்கேயும் போய் சும்மாவே உட்கார்ந்திருக்கிற நிலைதான் ஏற்படுகிறது. எங்கே போனாலும் பைக் அல்லது ஆட்டோவில் செல்வதால் நடப்பதற்கும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது. பீச் அல்லது கோயிலுக்குச் சென்றால் மட்டும் கொஞ்ச நேரம் நடப்போம். சத்துக்காக மாத்திரை வாங்கிச் சாப்பிடுகிறோம்’’ என்றனர்.
பொதுவாக பிரசவம் ஒரு மறுபிறப்பாக இருந்தாலும், எல்லாப் பெண்களுக்கும் `சுகப் பிரசவம்’ சாத்தியமாவது இல்லை. சிசேரியனுக்குப் பல்வேறு காரணங்கள் அவசியமாகின்றன என்கிறார்கள் மருத்துவர்கள். மேலைநாடுகளில், முடிந்தவரை சுகப்பிரசவத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. முடியாத பட்சத்தில் மட்டுமே சிசேரியன் செய்யப்படுகிறது. முறையான உடற்பயிற்சியும், தொடர் கண்காணிப்பும் இருந்தாலே 99 சதவிகிதம் சுகப்பிரசவத்துக்கு வழிவகுக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
சுகப் பிரசவம் ஆவதற்கு சுலபமான உடற்பயிற்சிகள் என்ன இருக்கின்றன என்று தஞ்சை எம்.ஆர். மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் ராதிகா மைக்கேலிடம் பேசினோம். ‘‘பொதுவாகக் கர்ப்பிணிப் பெண்கள், ‘எல்லா உடற்பயிற்சிகளையும் நாங்கள் செய்கிறோம். ஆனால், கட்டாயம் சுகப் பிரசவம் ஆகுமா?’ என்று கேட்கிறார்கள். உடற்பயிற்சி செய்வதால் எல்லோருக்கும் சுகப் பிரசவம் ஆகும் என்று சொல்லிவிட முடியாது. சில காரணங்களால் சிசேரியன் செய்யக்கூட வாய்ப்பு நேரிடலாம். கர்ப்பிணிப் பெண்கள் பொதுவாகக் கடினமான உடற்பயிற்சிகளைச் செய்யக் கூடாது. மாடிப்படிகள் ஏறும்போது மெதுவாக ஏறி இறங்க வேண்டும். காலையிலும், மாலையிலும் 20 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். குறிப்பாக இதயக்கோளாறு, பி.பி. உள்ளவர்கள் கடினமான உடற்பயிற்சிகளைச் செய்யக் கூடாது. ஒவ்வொரு கர்ப்பிணிப் பெண்களும் தங்களுடைய உடலுக்குத் தகுந்த மாதிரி உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும். துணி துவைத்தல், தரை துடைத்தல் போன்ற வேலைகளைக்கூட கடினமாகச் செய்யக் கூடாது. யோகா செய்யலாம். நீண்ட நேரம் மல்லாந்து படுத்தபடி யோகா செய்யக் கூடாது. முதுகைப் பின் வளைத்தபடி செய்யும் யோகா பயிற்சிகளைச் செய்யக் கூடாது. பி.பி., ரத்தக்கொதிப்பு உள்ளவர்கள், டுயின்ஸ் உள்ளவர்கள், நஞ்சு கீழ் உள்ள தாய்மார்கள், பனிக்குடத்தில் அதிகமாகத் தண்ணீர் இருப்பவர்கள் இதுபோன்ற பயிற்சிகளைச் செய்யக் கூடாது. பிரசவத்துக்குப் பிறகு 3 வாரங்கள் கடினமான உடற்பயிற்சிகளைச் செய்யக் கூடாது. வயிற்றுப் பகுதிக்கு சப்போர்ட் செய்யக்கூடிய அப்டாமல் பெயின்டரைப் போட்டுக்கொள்ளலாம். இறுக்கிப்போட்டால் கர்ப்பபை இறங்கிவிடும். வயிற்றுப் பகுதிகளின் தசைகளுக்கான உடற்பயிற்சியை 3 வாரங்களுக்குப் பிறகு செய்ய ஆரம்பிக்கலாம். பிரசவத்துக்குப் பிறகு 3 மாதங்கள் கழித்து யோகா செய்யலாம். இதனால் தன்னம்பிக்கை பிறக்கும். உடல் நல்ல ஃபிட்னெஸ்ஸாக இருக்கும்’’ என்றார்.
சுகப்பிரசவத்துக்கு சுலபமான உடற்பயிற்சிகளைச் செய்யலாமே?
கர்ப்பிணிப் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள்:
1.சாப்பிடுவதில் நேரம் தவறாமையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
2.சரிவிகித உணவைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
3.பசிக்கும்போதே சாப்பிட்டுவிட வேண்டும்.
4.புரதம், வைட்டமின், நார்ச்சத்து போன்ற உணவுகளைச் சாப்பிட வேண்டும்.
5.பிரெட் உள்ளிட்ட மைதா பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.
6.நீர்ச்சத்து உள்ள காய்கறிகள், பழங்களைச் சாப்பிட வேண்டும்.
7.கீரைகள் சாப்பிட வேண்டும்.
8.தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.
9.வழக்கமான வேலைகளைச் செய்ய வேண்டும்.
10.சிறுசிறு உடற்பயிற்சிகள் செய்யவேண்டும்.
11.காலையும், மாலையும் நடைப்பயிற்சி செய்யவேண்டும்.
12.கடினமான வேலைகளையும், அதிக எடையுள்ள பொருட்களையும் தூக்குவதைத் தவிர்த்தல் வேண்டும்.
13.உணவுப் பழக்கவழக்கங்களுக்கு மருத்துவர்களின் அறிவுரையைப் பெறவேண்டும்.
சிசேரியன் ஏன் பரிந்துரைக்கப்படுகிறது?
சிசேரியன் இரண்டு வகைப்படும். ஒன்று, முன்பே தீர்மானிக்கப்பட்ட சிசேரியன். மற்றொன்று, சுகப்பிரசவம் சாத்தியப்படாத நேரத்தில் செய்யப்படும் அவசர சிசேரியன். அதிக எடையுடன் குழந்தை இருந்தாலோ, குறுக்காக இருந்தாலோ, உட்கார்ந்த நிலையில் இருந்தாலோ, கர்ப்பபை வாயை நஞ்சு மூடியிருந்தாலோ மற்றும் வேறு சில காரணங்களாலும் முன்பே தீர்மானிக்கப்பட்ட சிசேரியன் செய்யப்படுகிறது. சுகப்பிரசவத்துக்குக் காத்துக்கொண்டிருக்கும்போது குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டாலோ, தலை இறங்கிவர தாமதமானாலோ, நஞ்சு பிரிந்து குழந்தைக்குச் செல்லும் ஆக்ஸிஜன் கிடைக்காவிட்டாலோ, இவை தவிர வேறு சில மருத்துவக் காரணங்களால் தாயின் உடல்நிலையில் மாறுபாடு ஏற்பட்டாலோ அவசர சிசேரியன் செய்யப்படுகிறது.
சிசேரியன் பட்டியல்!
தேசிய குடும்ப நல சுகாதார அமைப்பானது, 2015–16–ம் ஆண்டுக்கான சுகாதார ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட 15 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், அரசு மருத்துவமனைகளைவிட தனியார் மருத்துவமனைகளில்தான் சிசேரியன் மூலம் 2 மடங்கு பிரசவங்கள் நடந்திருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எண் மாநிலங்கள் அரசு மருத்துவமனைகள் தனியார் மருத்துவமனைகள் சதவிகிதத்தில் சதவிகிதத்தில் 1. திரிபுரா 36.4 87.1 2. பீகார் 5 37.1 3. மேற்கு வங்கம் 37.1 74.7 4. தமிழ்நாடு 36.1 36.1 5. தெலங்கானா 63.2 63.2 தமிழகத்தில் 36.1 சதவிகிதமும், தெலங்கானாவில் 63.2 சதவிகிதமும் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிசேரியன் மூலம் பிரசவம் நடப்பதாக அந்த ஆய்வு தெரிவித்துள்ளது. இந்தியாவில் 10 முதல் 15 சதவிகித பிரசவங்கள் மட்டுமே சிசேரியன் முறையில் மேற்கொள்ள பரிந்துரைக்கப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது. ஆனால் இந்தியாவில் சிசேரியன் மூலம் குழந்தை பெறுவோர் எண்ணிக்கை 24 சதவிகிதமாக இருக்கிறது. இந்திய குடும்ப நலத்திட்ட சங்கம் நடத்திய ஆய்வில் 60 சதவிகித பெண்கள் சிசேரியன் மூலம் குழந்தை பெறுவதையே விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.
|
No comments:
Post a Comment