தூங்கும் தோள்களைத்
தட்டி எழுப்பு...
தொடுவானம் உன்
கையில் இருக்கு!
தட்டி எழுப்பு...
தொடுவானம் உன்
கையில் இருக்கு!
சித்தர் என்ற சொல்லுக்குச் சித்தமானவர்கள், சித்தி பெற்றவர்கள் என்று பொருள். இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி ஆகிய 8 வகையான யோகாங்கள் மூலம் எண் பெருஞ்சித்திகளைப் பெற்றவர்களே சித்தர்கள் ஆவர். பொதுவாக, அவர்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் என்றபோதும் உடம்பைப் பாதுகாப்பதன் அவசியத்தை அவர்கள் மிகவும் தெரிந்து வைத்திருந்தார்கள். மனித வாழ்க்கைக்குச் சித்தமானதையும், உணவு உண்பதில் மருத்துவம் சார்ந்த நெறிமுறைகளையும் அவர்கள் பின்பற்றினார்கள்.
எண்வகை யோகாங்கள்!
இதில் ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி போன்றவை உடல், மனம் சம்பந்தப்பட்ட சித்திகள் ஆகும். உடலைப் பல்வேறு கோணங்களில் நிலைநிறுத்தி பயிற்சி செய்தலே ஆசனம். பிராணவாயுவைத் தடுத்தலும், வாயுவை உட்செலுத்துதலும், வெளிச்செலுத்துதலும் பிராணாயாமம். புலன்கள் வாயிலாக வெளியே செல்லும் மனத்தை உள்ளே நிறுத்தப் பழகுதலே பிரத்தியாகாரம்.
பிரத்தியாகாரப் பயிற்சியால் உள்ளே இழுத்த மனத்தை நிலைபெறச் செய்தல் தாரணை. மனதை ஒருமுகப்படுத்தி ஒரே சிந்தனையில் ஆழ்ந்திருப்பது தியானம். மனதை கடவுளிடம் நிலைக்கச் செய்வது சமாதி. ஆக, இதன்மூலம் சித்தர்கள் தங்கள் உடலையும், மனதையும் கட்டுப்படுத்தி வைத்திருந்தனர். கீழ்க்கண்ட திருமூலரின் திருமந்திரத்தின் 668-வது பாடல் அட்டமா சித்திகளைக் கூறுகிறது.
''அனி மாதி சித்திகளானவை கூறில்
அணுவில் அணுவின் பெருமையின் நேர்மை
இணுகாத வேகார் பரகாய மேவல்
அணுவத் தனையெங்குந்
தானாத லென்றெட்டே!'
தாவரங்கள், தாதுப்பொருட்கள், தானியங்கள், கனிகள் போன்றவற்றை ஆராய்ந்து நம் சித்தர்கள் மருந்து கண்டுபிடித்தனர். மேலும், மரம், செடி, கொடி, வேர், காய், இலை, பழம் போன்றவற்றையும் ஆய்வுசெய்து அவற்றின் தன்மைகளைப் பல பாடல்களில் நம் சித்தர்கள் எழுதியுள்ளார்கள். இத்தகைய பாடல்கள் நிறைந்த நூல்தான் அற்புத சிந்தாமணி (பதார்த்தகுண சிந்தாமணி). அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் சுவடி வடிவில் இருந்த இந்த நூல் அழிந்துவிட்டதாகச் சுவடி ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உடம்பை அதிக கவனத்தோடு பாதுகாப்பதாக திருமூலர் தன் பாடலில் கூறுகிறார்.
அந்தப் பாடல்,
''உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டானென்று
உடம்பினை யானிருந்து ஓம்புகின் றேனே.'' (திருமந்திரம்-725)
96 செயல்பாடுகள்!
ஒரு மனிதனின் உடல் இயக்கத்தை ஆராய்ந்து பார்த்த சித்தர்கள், அதனுள் 96 வேதியியல் செயல்கள் அல்லது செயற்பாடுகள் நடக்கின்றன என்று கண்டறிந்தார்கள். அதாவது, உடலும் உள்ளமும் அதனுள் இயங்குகிற உயிரும் ஆரோக்யமாகச் செயல்புரியும்போது அந்த உடம்பினுள் மேற்சொன்ன 96 செயல்களும் தடங்கலின்றி சீராக இயங்குகின்றன. இவ்வாறு இயங்குவதால், அந்த உடல் எந்தக் குறையுமின்றி நலமுடன் இருப்பதாகச் சொல்கிறார்கள் சித்தர்கள். மேலும், ஒரு மனிதன் விழிப்பாக நனவு நிலையில் இருக்கும்போது இந்த 96 செயல்களும் நன்றாக இயங்குகின்றன. ஆனால் உறங்கும்போது இந்த 96-ல் சில இயங்குவதில்லை. கனவு நிலை, மயக்கம், விபத்து, அதிர்ச்சி போன்ற செயல்களால் இந்தச் செயல்கள் இன்னும் குறைகின்றன. இந்த ரகசியத்தை சித்தர் இலக்கியம் நமக்குக் கூறுகிறது.
அதனை உறுதிப்படுத்தும் பாடல்,
''முப்பதும் முப்பதும் முப்பத்தறுவரும்
செப்ப மதிளுடைக் கோயிலுள் வாழ்பவர்
செப்ப மதிளுடைக் கோயில் சிதைந்தபின்
ஒப்ப அனைவரும் ஓட்டெடுத் தார்களே!'' (திருமந்திரம் - 154)
மேற்கண்ட பாடலில் கோயில் என்பது உடலைக் குறிக்கிறது. 30+30+36=96. இந்த 96 செயல்களும் சரியாக இயங்கினால் மனித உடல் நோயற்றதாய்த் திகழும். 96-ல், 80 வேலை செய்தால் நோய் முற்றுவதாகவும், 70, 60, 50 எனப் படிப்படியாக இந்த எண்ணிக்கை குறையும்போது மரணம் ஏற்படப் போகிறது என்றும் அறியப்படும். இது மேலும் மேலும் குறைந்து 30, 20, 10 என்று வந்து உடல் மடியும்போது 96 செயல்களும் நின்றுவிடுகின்றன.
இது சித்தர்கள் கண்ட மாபெரும் உடற்கூற்று. 96 பேர் வசிக்கும் ஒரு வீட்டை (உடலை) நன்றாகப் பராமரிக்க வேண்டும். அப்படி பராமரிக்கவிட்டால் வசிப்பவர்கள் வெளியேறிவிடுவார்கள். ஆகவே, அந்த வீட்டை சரியான முறையில் பாதுகாப்பது அவசியம் என்கிறார்கள் சித்தர்கள். இதுகுறித்து, எழுத்தாளர் மாத்தளை சோமு எழுதிய 'வியக்கவைக்கும் தமிழர் அறிவியல்' என்னும் நூலில் விரிவாகக் கூறப்பட்டு உள்ளது.
விடியற்காலையில் எழுவது உடலுக்கு நல்லது என்கின்றனர் சித்தர்கள். ஏனெனில், அதிகாலையில் வரும் காற்று மிகவும் தூய்மையாக இருக்கும். குறிப்பாக, மார்கழி, தை மாதங்களில் சுத்தமான பிராண வாயு கிடைக்கும். இது பூமி சுழற்சியினால் ஏற்படும் செயல் என்பதால், அந்த மாதங்களில் கோயில் பஜனைகளுக்கு ஆண்களையும், வாசலில் கோலம் போட பெண்களையும் போகவைத்தார்கள்.
சித்தர்கள் சொல்லும் 'ஓகம்' பயிற்சி!
உடல் ஆரோக்கியத்துக்கு தமிழ்மொழி வழிவகுப்பதாகச் சித்தர்கள் கூறியுள்ளனர். தமிழ்ச் சித்தர்கள் வகுத்த உயிரெழுத்து ஓகம். ஓகம் என்றால் தமிழில் 'கூடுதல்' என்று பொருள். இந்தச் சொல்தான் வடமொழியில் யோகம் என்று மருவியது. உயிரும் மெய்யும் கூடும் கலைக்கே ஓகம் என்று பொருள்.
உடலும் மெய்யும் சேர்ந்தே இருந்தாலும் உயிரை நாம் தனியே உணர முடியாது. உயிருக்கும் உடலுக்கும் இருக்கும் தொடர்பை இந்த உயிரெழுத்து ஓகக் கலையின் மூலமாக நாம் அறியலாம். அவ்வாறு நாம் அறியும்போது உயிரையும் உடலையும் பாதுகாக்கும் யுக்தியை நாம் தெரிந்துகொள்ளலாம். அதற்காகத்தான் இந்த ஓகத்தை சித்தர்கள் வகுத்தனர். ‘தமிழ்’ மெய்யியல் மட்டுமல்ல, அறிவியலும் ஆகும்.
தமிழ் நெடில் உயிரெழுத்துக்கள் (ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள) ஏழு. இந்த உயிர் எழுத்துக்கள் உடலில் எங்கிருந்து தோன்றி இயங்குகின்றன என்பதை சித்தர்கள் கணித்துள்ளனர். ஆ முதல் ஒள வரை உள்ள ஓசைகள் உடலின் முக்கிய ஏழு நரம்பு மண்டலங்களை (துரியம், ஆக்கினை, விசுத்தி, அனாகதம், மணிப்பூரகம், சுவாஷ்டானம், மூலாதாரம்) இயக்கவல்லது. இந்த ஏழு நரம்பு மண்டலங்கள் சக்கரங்கள் என்றும் அழைக்கப்படும்.
இந்த ஓசைகளை நாம் ஒலிக்கும்போது உடலில் உள்ள ஏழு நரம்பு மண்டலச் சக்கரங்கள் சுழல்கின்றன. உயிர் ஒலியாகப்பட்டது காற்றின் மூலமாக இந்தச் சக்கரங்களை இயக்குகின்றன. தினமும் காலையிலும் மாலையிலும் இந்த ஓகத்தை நாம் செய்துவந்தால், நம் உடலும் உயிரும் புத்துணர்வு பெறும். இதைச் செய்வது வெகு எளிமை. முதலில் ‘ஆ’ என்ற ஓசையை எவ்வளவு முடியுமோ, அவ்வளவு தூரம் இழுத்து ஒலிக்க வேண்டும்.
உதாரணமாக, 'ஆ' என்பதை ஆ... ஆ... ஆ... என்று சுமார் 20 – 30 நொடிகள் வரை இழுக்கவேண்டும். அப்போது நம் தலையின் மேல் நடுப்பகுதி இயங்குவதை அறியமுடியும். இந்த இடத்தில்தான் அகரத்தின் ஓசை செயல்படுகிறது. இதுவே உடலின் முதல் பகுதியாகும். பின்பு, ‘ஈ’ என்ற ஓசையை எவ்வளவு நீடித்து ஒலிக்க முடியுமோ... அவ்வளவு நீளம் ஒலிக்க வேண்டும்.
இது நம் மூக்கு, நெற்றிப் பகுதிகளில் உள்ள தசை மற்றும் நரம்புகளை இயக்குவதை அறிய முடியும். அடுத்து, ‘ஊ' என்ற ஒலி. இது நம் தொண்டைப் பகுதியை இயக்கக்கூடியது. இவ்வாறு, இந்த உயிர் எழுத்துக்களின் ஏழு ஓசைகளை ஒலிப்பதன் மூலமாக உடலின் ஏழு சக்கரங்களையும் நாம் இயக்க முடியும். இப்படி நாம் முறையாக நீட்டித்து உயிர் எழுத்துக்களை உச்சரிக்கும் பயிற்சிக்கு, 'உயிரெழுத்து ஓகம்' என்று பெயர் . இது சித்தர்கள் உலகுக்கு வழிவகுத்த மிகத் தொன்மையான ஓகப் பயிற்சி. இதை நாம் தினமும் காலையிலும், மாலையிலும் உடற்பயிற்சி முடிந்தவுடன் செய்தால், நம் உடலும் உயிரும் புத்துணர்வு பெறும் என்கிறார்கள் சித்தர்கள்.
சித்தர்கள் சொல்லும் '8' வடிவ நடைப்பயிற்சி!
ஒருவர் தினமும் 30 முதல் 60 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்தால், ஆரோக்கியம் மேம்படும். பல்வேறு நோய்களிலிருந்து விடுபடலாம். நடைப்பயிற்சியை சாதாரணமாகச் செய்யாமல் '8' வடிவத்தில் செய்வது மிகவும் சிறந்தது என்கிறார்கள் சித்தர்கள். மேற்படி படத்தில் இருப்பதுபோல ஆறு அடி அகலம் மற்றும் எட்டு முதல் பன்னிரண்டு அடி நீளம் அளவில் தரையில் '8' (டூவீலர் லைசன்ஸ் எடுக்க போடும் 8 போல) ஒன்றை வடக்கு, தெற்கு முகமாக வரைந்துகொள்ள வேண்டும். படத்தில் உள்ளதுபோல் அம்பு குறியிட்டுக் காட்டியதுபோல் பாதை '1'-ல் இருந்து தொடங்கி '5' வரை சென்று மீண்டும் '1'-க்கு வரவேண்டும். இப்படி நடக்கும்போது மிகவும் வேகமாகவோ அல்லது மெதுவாகவோ நடக்கக் கூடாது. இயல்பாக நடக்க வேண்டும். தினமும் காலையும் மாலையும் 15 – 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்யவேண்டும். நடைப்பயிற்சி முடியும் வரை மெளனமாக நடக்க வேண்டும். இந்தப் பயிற்சியைத் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி அல்லது வடக்கிலிருந்து தெற்கு நோக்கிச் செய்ய வேண்டும் என்கிறார்கள் சித்தர்கள். இதன்மூலம் 15 நிமிடங்கள் முடிவில் இருநாசித் துவாரங்களின் மூலம் உள்ளிழுக்கப்பட்ட முழு மூச்சுக்காற்றையும் உணரலாம் என்கிறார்கள் சித்தர்கள். மேலும், 15 நிமிடங்கள் தொடர்ந்து நடைப்பயிற்சி செய்யும்போது இந்த இடைப்பட்ட நேரத்தில் மார்புச்சளி தானாகவே வெளியேறும். இந்தப் பயிற்சியை இடைவிடாது குறைந்தது 21 நாட்கள் செய்ய வேண்டும் என்கின்றனர் சித்தர்கள்.
சித்தர்கள் சொல்லும் மூச்சுப்பயிற்சி!
மனித உடம்புக்குள் புகுந்து இயங்கிக்கொண்டிருக்கும் மூச்சு முறையின் இயக்கத்தைப்பற்றி மிகமிகத் துல்லியமாகவும் அதைக் கொண்டு உடல், மனம், உயிர்நிலை ஆகிய மூன்றையும் கட்டுப்படுத்தி வாழலாம் என்பதையும் பற்றிக் கூறுகிறது சித்தர் இலக்கியம்.
மூச்சை உள்ளே இழுத்து நிறுத்தினால் உடல் முதுமையிலும், இளமையாய் இருக்கும். மூச்சை இழுக்கும்போது தொண்டை, இதயம், வயிறு போன்றவை பருக்க வேண்டும். இரண்டுக்கும் இடையே மூச்சை உள்ளே நிறுத்த வேண்டும். இவற்றைச் செய்தால் உடல் ஆரோக்யம் ஏற்படுவதோடு ஆயுள் அதிகரிக்கும் என்கிறார்கள் சித்தர்கள். மனிதனின் ஒருநாள் சுவாச எண்ணிக்கை 21,600. இவை கூடவும் கூடாது. குறையவும் கூடாது. இந்த எண்ணிக்கையில் தினமும் சுவாசித்தால், ஒரு மனிதன் 120 ஆண்டுகள் வாழமுடியும் என்கிறார்கள் சித்தர்கள்.
ஆனால், நவீன காலத்தில் இது சாத்தியமற்றது. அதிக தூக்கம், அதிக போகம், அதிக சுவாசம் ஆகியவற்றால் ஆயுள் குறைகிறது. இதனை திருமூலர் தன் பாடலில்,
நூறும் அறுபதும் ஆறும் வலம் வர
நூறும் அறுபதும் ஆறும் இடம் வர
நூறும் அறுபதும் ஆறும் எதிரிட
நூறும் அறுபதும் ஆறும் புகுவரே - (திருமந்திரம்-729) என்று கூறியிருக்கிறார்.
அதாவது, 100 நாடிகள், 60 தத்துவங்கள், 6 அத்துவாக்கள் ஆகிய மூன்றும் வல, இட, நடு மூச்சு ஆகியவற்றைச் சாரும் இயல்புடையன. நடுமூச்சைச் சார்ந்துள்ள நிலையை எய்தினால் 166 ஆண்டுகள் வாழலாம் என்பது அவரது கருத்து.
ஐம்பூதங்களால் ஆன மனித உடல்!
ஐம்பூதங்களால் ஆனது இவ்வுலகம். அதேபோல் மனித உடலும் ஐம்பூதங்களால் ஆனவை. அதாவது, எலும்பு, மாமிசம், தோல், நரம்பு, உரோமம் போன்றவை நிலத்தையும், உமிழ்நீர், சிறுநீர், வியர்வை, ரத்தம், விந்து போன்றவை நீரையும், சுவாசம், வாயு போன்றவை காற்றையும், விசாலமான மனித மூளை ஆகாயத்தையும், பசி, தூக்கம், தாகம், உடலுறவு, உடல் வெப்பம் போன்றவை நெருப்பையும் குறிக்கிறது. இவை அனைத்தும் மனித உடலில் சரிவர இயங்காவிட்டால் நோய் வரும். மனித உடலிலிருந்து வெளியாகும் நீரும், வெப்பமும் அளவாய் இருக்க வேண்டும். மூச்சு, மூளை, எலும்பு, தோல், நரம்பு போன்றவையும் சரிவர இயங்க வேண்டும். இவற்றில் எது சரியாக இயங்காவிட்டாலும் உடல் நோயுக்குள்ளாகும்.
வில்வ இலையில் மருத்துவக்குணம் இருப்பதால்தான், சில கோயில்களில் வில்வ தீர்த்தம் வழங்கப்படுகிறது. அதேபோல், துளசியில் மருத்துவக்குணம் இருப்பதால் பெருமாள் கோயில்களில் துளசியும், துளசி தீர்த்தமும் வழங்கப்படுகிறது. நம் உடலில் உள்ள ஐம்பூதங்களைச் சமநிலைப்படுத்தும் குணம் கொண்டது வில்வ தீர்த்தம். மனித உடல் பலவகையான உயிரணுக்களால் ஆக்கப் பெற்றுள்ளது. எனவே, நாம் சாப்பிடக்கூடிய உணவு அந்த உயிரணுக்களை இயக்கக்கூடியதாக இருக்க வேண்டும்.
பசியைப் போக்குவதற்காக வாய்க்கு ருசியான உணவுகளைச் சாப்பிட்டு உடலை நோய்க்குள் தள்ளக்கூடாது. உண்ணும் உணவு அளவோடு இருப்பதோடு செரிமானத்துக்கு ஏற்றதாக இருக்க வேண்டும் என்கிறார்கள் சித்தர்கள். மனித உடலில் எது கூடினாலும் ஆபத்துதான். ஆகவே, உடற்பயிற்சி கட்டாயம் தேவை. உடற்பயிற்சி இல்லாவிட்டால் மாரடைப்பு, நீரிழிவு, கொழுப்பு போன்றன ஏற்படலாம். சித்தர்கள் சொன்ன சித்தங்களை நம் மூதாதையர்கள் கடைப்பிடித்ததால்தான் நீண்டநாட்கள் ஆரோக்யமாய் இருந்தனர்.
தேரையார் சித்தர் சொல்லும் தேகப் பயிற்சிகள்!
சித்தர்களில் ஒருவரான தேரையார், உடலைப் பாதுகாப்பது குறித்து தன் பாடல்களில் கூறியிருக்கிறார். அந்தப் பாடல்கள்: ''பாலுண்போம்; எண்ணெய்பெறின்
வெந்நீரில் குளிப்போம்.
பகல் புணரோம்; பகல் துயிலோம்;
பயோதரமும் மூத்த ஏலஞ்சேர்
குழலியரோ டிளவெயிலும் விரும்போம்;
இரண்டடக்கோம்; ஒன்றை விடோம்;
இடதுகையிற் படுப்போம்.
மூலஞ்சேர் கறினுகரோம்;
மூத்ததயிர் உண்போம்.
முந்நாளில் சமைத்தகறி
அமுதெனினும் அருந்தோம்.
ஞாலந்தான் வந்திடினும்
பசித்தொழிய உண்ணோம்,
நமனார்க்கிங் கேதுகவை
நாமிருக்கு மிடத்தே!''
இதன் பொருள்: பால் சார்ந்த உணவை உண்ணவேண்டும். எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது வெந்நீரில் குளிக்கவேண்டும். பகலில் புணர்வதையும், தூங்குவதையும் தவிர்க்க வேண்டும். மூத்த பெண்களோடும், பொது மகளிரோடும் உறவுகொள்ளக் கூடாது. மலம், சிறுநீர் முதலியவற்றை அடக்கி வைத்திருக்கக் கூடாது. படுக்கும்போது இடது கைப்புறமாக ஒருக்களித்துப் படுக்க வேண்டும்.. புளித்த தயிர் உணவை சாப்பிட வேண்டும். முதல் நாள் சமைத்த கறி உணவை, மறுநாள் சாப்பிடக் கூடாது. பசி இல்லாதபோது உணவருந்தக் கூடாது. பசிக்கும்போது மட்டுமே உண்ண வேண்டும்.
''உண்பதிரு போதொழிய
மூன்று பொழுதுண்ணோம்;
உறங்குவது இரவொழிய
பகலுறக்கம் கொள்ளோம்;
பெண்ணுறவு திங்களொருக்
காலன்றி மருவோம்;
பெருந்தாக மெடுத்திடினும்
பெயர்த்துநீர் அருந்தோம்;
மண்பரவு கிழங்குகளில்
கருணையன்றிப் புசியோம்;
வாழையிளம் பிஞ்சொழிய
காயருந்தல் செய்யோம்;
நண்புபெற உண்டபின்பு
குறுநடையும் பயில்வோம்;
நமனார்க்கிங் கேதுகவை
நாமிருக்கு மிடத்தே!''
இதன் பொருள்: ஒரு நாளைக்கு இருவேளை மட்டும் உண்ணவேண்டும். பகலில் தூங்குவதைத் தவிர்த்து இரவில் நன்றாகத் தூங்க வேண்டும். மாதம் ஒருமுறை உறவுகொள்ள வேண்டும். சாப்பிடும்போது இடையிடையே தண்ணீர் குடிக்கக் கூடாது. பிஞ்சு வாழைக்காயைச் சமைத்து சாப்பிட வேண்டும். முற்றிய காய்களைச் சமைத்துச் சாப்பிடக் கூடாது. சாப்பிட்டவுடன் கொஞ்ச தூரம் நடக்க வேண்டும்.
''ஆறுதிங்கட் கொருதடவை
வமனமருந் தயில்வோம்;
அடர்நான்கு மதிக்கொருக்கால்
பேதியுரை நுகர்வோம்;
தேறுமதி ஒன்றரைக்கோர்
தரநசியம் பெறுவோம்;
திங்களரைக் கிரண்டுதரம்
சவலிவிருப் புறுவோம்;
வீறுசதுர் நாட்கொருகால்
நெய்முழுக்கைத் தவிரோம்;
விழிகளுக் கஞ்சனம்மூன்று
நாட்கொருக்கா லிடுவோம்;
நாறுகந்தம் புட்பமிவை
நடுநிசியில் முகரோம்
நமனார்க்கிங் கேதுகவை
நாமிருக்கு மிடத்தே!''
இதன் பொருள்: ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வாந்தி மருந்தையும், நான்கு மாதங்களுக்கு ஒருமுறை பேதி மருந்தையும் உண்ண வேண்டும். ஒன்றரை மாதத்துக்கு ஒருமுறை மூக்குக்கு மருந்திட்டுச் சளி வராமல் தடுக்க வேண்டும். வாரம் ஒருமுறை முகச்சவரம் செய்ய வேண்டும். நான்கு நாட்களுக்கு ஒருமுறை எண்ணெய்த் தேய்த்துக் குளிக்க வேண்டும். மூன்று நாட்களுக்கு ஒருமுறை கண்ணுக்கு மை இடவேண்டும். மணம் வீசும் கந்தம், மலர் போன்றவற்றை நள்ளிரவு நேரத்தில் நுகர்தல் கூடாது.
இப்படி நம் செயல்கள் இருந்தால், உடல் ஆரோக்யமாக இருப்பதோடு ஆயுளும் கூடும் என்கிறார் தேரையார். 'மனமே மந்திரம்... உடலே எந்திரம்' என்றார் திருமூலர். அது நூற்றுக்கு நூறு உண்மை. எந்தச் செயலையும் உடலையும், மனதையும் வருத்திச் செய்தால் அது உடலுக்கு ஆரோக்கியத்தையே கொடுக்கும்.
சித்தர்கள் வழியில் செல்லாவிட்டாலும் சிக்கென வைத்துக்கொள்ள உடற்பயிற்சி செய்வோம்.
|